டிசம்பர் 04, 2011

சென்னை கச்சேரி மேளா 2011-2012 - 001


டிசம்பர் 3, 2011

டிசம்பர் முதல் தேதியே சென்னை ஸீசன் ஆரம்பித்துவிட்டது. கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், நாரதகான சபாவில் கச்சேரி ஸீசனை ஆரம்பித்து வைத்துவிட்டாலும், நானும் இந்தவருடம், நவம்பர் இறுதி வாரத்துக்கே சென்னை வந்துவிட்டாலும், சில காரணங்களால், இன்றுதான் என்னால் முதல் கச்சேரிக்கு செல்ல முடிந்தது.

என்னுடைய கச்சேரிக் கணக்கு அபிஷேக் ரகுராம், மற்றும் டி.எம்.க்ருஷ்ணா இவர்களுடன் ஆரம்பித்தது. நானும், அண்ணாவும் கச்சேரி அரங்கத்துள் நுழையும் போது, அபிஷேக் தன்யாஸி பாடிக்கொண்டிருந்தார். போன வருடமே எழுதியிருந்தபடி, அபரிமிதமான குரல் வசதி, நினைத்ததை, நினைத்த அதே நொடியில் குரலில் கொண்டுவரக்கூடிய அசாத்திய உழைப்பு, அதற்கு ஈடான ஜெட்வேக கற்பனைச் சரவெடிகள், அவற்றை கையாளும் லாவகம் என்று அபிஷேக் மிரட்டுகிறார்.

ஒரு பெரிய ரோலர்கோஸ்டரில் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சென்றுவந்தார் போல சில சமயம் நமக்கு அயற்சி ஏற்பட்டு விடுகிறது. ராகத்தில் ஓரளவாவது இருந்த விஸ்ராந்தியும் சௌக்யமும், தானத்திலும், பல்லவியிலும் இல்லை. திஸ்ரத்ரிபுடையில், கண்டநடையில், “இனி ஒருகணம் உனை மறவேன் யதுகுல திலகா நான்" என்கிற பல்லவி வரிகளை உருட்டியும் மிரட்டியும், ஓடியும் சாடியும், உருண்டும் பிரண்டும் அபிஷேக் பாடியது பிரமிக்கும் படியாக இருந்தும், ரசிக்கும் படியாக இல்லை. தன்யாஸியிலிருந்து, ஸ்ரீரஞ்சனி பின்பு பூர்விகல்யாணி என்று தானத்திலும், பல்லவியிலும், பிறகு ஸ்வர கல்பனையிலும் பாடியது ரசிக்கும் படியான விஷயம்தான். ஆனால் அந்த வேகம், கற்பனைகளில் அழகுக்கும், அதை ரசிப்பதற்கும், குந்தகமாக அமைந்ததுதான் வருத்தத்துக்குரியது.

அபிஷேக், அவரது குரலை பொன்போல் காக்க வேண்டும், இளமையின் வேகம், அளவுக்கு மிஞ்சிய குரலுபயோகம் இரண்டு குரல்நாணை பாதிக்காமல் பாதுகாக்கவேண்டியது அவரது கடமை.

பின்னால் வந்த குதம்பை சித்தர் பாடலும் ஏறக்குறைய கழைக்கூத்தாடி விவகாரம்தான். விவகாரத்தில் விதரணையை விட்டுவிடக்கூடாது. இறுதியாகப் பாடிய "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ"வும் சலிப்புத்தட்டும் அளவுக்கு மேல் கீழ் சஞ்சாரங்களுடன். ஆத்ம விசாரமாக, பரிதவிப்புடன் பாடிய சாஹித்யத்தை அகடவிகடமாக செய்தது ஏனோ ரசிக்கவில்லை.

கச்சேரியென்பது, கைதட்டல்கள் மட்டுமில்லை என்பதை இன்றைய முன்னணி நட்சத்திரக் கலைஞர்கள் உணரவேண்டும்.

வயலின் வாசித்த மைசூர் ஸ்ரீகாந்தும், மிருதங்க நெய்வேலி நாராயணனும்,கஞ்சீரா கோபாலக்ருஷ்ணனும் அனுசரணையாக ஈடுகொடுத்தது கச்சேரியின் நிச்சயமான ஆறுதலான அம்சம்.

அடுத்துவந்த டி.எம். க்ருஷ்ணாவின் கச்சேரி. லயச்சக்ரவர்த்தி காரைக்குடி மணி மிருதங்கம், ராமானுஜாசார்யுலு வயலின் துணையுடன் ஆரம்பித்த கச்சேரி, மிகவும் மோசமான மைக் அமைப்பின் காரணமாக, சரியாக சமன் செய்யப்படாது, மேடையில் இருந்தவர்களுக்கும் அவஸ்தை.. அரங்கத்திலிருந்த ரசிகர்களுக்கும் அவஸ்தை.

க்ருஷ்ணாவின் பளிச் குரல் இன்று கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. மைக் கட்டாயம் 50 வது விழுக்காடாவது இதற்குக் காரணம். ஆரம்பத்தில். நீலகண்ட சிவனின், என்றைக்கு சிவ க்ருபை வருமோ என்கிற முகாரி ராகக் கீர்த்தனயுடன், செளகமாக, செளக்யமாக ஆரம்பித்த கச்சேரி, ஸாரங்காவில் அருணாசல நாதம் கீர்த்தனையுடன் மெதுவாக க்ருஷ்ணாவில் குரலில் சூடுபிடிக்க வைத்தது. ராகம் பாடியதில் வந்த சங்கதிகளே அடிக்கடி வந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் கீர்த்தனை பாடியது கச்சிதம்.

அடுத்து ராகம்பாடாமல், ரீதிகௌளையில்,”த்வைதமு ஸுகமா அத்வைதமு ஸுகமா' என்கிற த்யாகராஜ க்ருதி. இதில் "ககன”-வில் பாடப்பட்ட நிரவல் செம்மங்குடி ரகம். முழுக்க முழுக்க வார்த்தைச் சிதைவுகளுடன். ஆளுமை பிரமிப்பு, ஆனால் படைப்பு க்ருதியின் வார்த்தை அழகுகளுக்குச் செய்யப்பட்ட அநீதி. "ககன, பவன, புவன, தபன, ஆதி" (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், புவி) என்ற வார்த்தைகளை இதற்குமேலும் சிதைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். சும்மா, "ககனககக பவனகக ககககக" என்று ஒரு 3 நிமிஷம் சொல்லிப்பாருங்கள்.

த்யாகராஜர் மன்னிப்பாராக. அவர் மன்னித்தால் என்ன? ரசிகர்கள் கைதட்டினார்களே என்று கேட்கலாம்.. பெரும்பாலான ரசிகர்கூட்டத்துக்கு வேண்டியதெல்லாம், அவர்கள் கேட்பதெல்லாம் எடுப்பான எடுப்பு, வேகமான தொடுப்பு, அதிரடியான முடிப்பு! என்கிற மேஜிக்தான். அர்த்தபாவம் எல்லாம் அவர்களுக்கு அநாவசியம். தெலுங்குதானே, நன்றாகக் கெடுக்கட்டும் என்கிற மனோபாவமோ என்னவோ..! க்ருஷ்ணா நல்ல கலைஞர்தான்! ஆனால் கைத்தட்டல்கள் ஆதிக்கத்திலும், புகழ் தரும் போதையிலும் இருக்கிறார். தன்னம்பிக்கைக்கும், "தான்" என்பதற்கும் வித்தியாசம் அவருக்குத் தெரியாதா என்ன? காலம் பெரிய சமனி. இவரையும் மீட்டு கொண்டுவரும் என்று நம்புவோம்.

வார்த்தைகளின் பொருளுக்கேற்ப அங்க அசைவுகளோ, கை வீச்சுகளோ இருந்தால் குற்றமில்லை. பாடகர்களின் சங்கதிகளுக்கு அவர்கள் கை வீச்சு, தலையாட்டல்கள் ஓரளவுக்கு உதவுவது வாஸ்தவம்தான். ஆனால், என்றைக்கு சிவக்ருபை க்ருதியில் வரும் இந்த வரிகளின் போது, வயலின் அல்லது மிருதங்க வித்வான்கள் பக்கம் கையைக்காட்டுவது, அனர்த்தமாகி விடுகிறது. “ கண்டாலும் பேசார்! இந்த கைத்தவமான பொல்லாச் சண்டாள உலகத்தைத் தள்ளி ஸத்கதி செல்ல" குறிப்பாக, "சண்டாள" என்னும் போது, வயலின் பக்கமோ, மிருதங்கம் பக்கமோ, அல்லது ரசிகர்கள் பக்கமோ கையைக் காட்டினால்...?

இது க்ருஷ்ணாவுக்கு மட்டுமல்ல, கைவித்தையிலே கைதேர்ந்த அனைத்து வித்வான்கள், விதூஷகிகளுக்கும்தான்.

நேரமில்லாத காரணத்தினால் வெளியே வரவேண்டிய கட்டாயம். முழு கச்சேரியையும் கேட்க முடியவில்லை. ஒருவேளை, நான் கிளம்பியபிறகு, கச்சேரி மிகவும் நன்றாக இருந்ததோ என்னவோ..! மீண்டும் கேட்காமலா போய்விடுவேன்

நவம்பர் 04, 2011

ஏழாம் அறிவும் போதிவர்மனும்



சமீபத்தில் மிகவும் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் ஏழாம் அறிவு படத்தைப் பார்த்தேன்.

எங்கே இதைப்பற்றி உண்மையான விமரிசனத்தை எழுதினால், நமக்கு ஆறாம் அறிவே இல்லையோ என்று நினைப்பார்கள் என்று பலரும் ஒதுங்கியிருக்கலாம்.. அல்லது தமிழனே இல்லையென்று முத்திரை குத்தி, ஐந்தறிவு மிருகங்களுக்கும் கீழாக எண்ணி விடுவார்களோ என்று பயந்திருக்கலாம்..

தமிழனின் பெருமையைத் தூக்கி நிறுத்தியிருக்கிற முயற்சி என்ற சுயதம்பட்டத்தை காதுகள் கிழியுமளவிற்கு உரத்து அடித்திருப்பதினால், என்னுடைய பார்வையில் இப்படத்தைப் பற்றிய சில செய்திகளைப் பதிவு செய்கிறேன்.

படம்,

பணத்தை எண்ணாமல் செலவு செய்திருக்கும் தயாரிப்பாளரின் தாராளத்தைக் காட்டுகிறது. (அது சரி! யார் வீட்டுப்பணம்! தூக்கி நிறுத்த தாத்தாவின் சேனலும், உறவுக்கார ஸன் சேனல்களும் இருக்க எமக்கு என்ன கவலை)

சூரியாவின் மெருகான அழகை, ஈடுபாட்டை, உழைப்பைக் காட்டுகிறது.. போதிதர்மன் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்று எண்ணவைக்கிறது..

ஸ்ருதிஹாஸனின் புதுமலரைப் போன்ற அழகைக் கவிதையாகக் காட்டுகிறது.

தாமோ" என்று சீன, ஜப்பானிய மற்றும் கீழை நாட்டு புத்தமதத்தினர் கொண்டாடுகிற, நம்மில் பலருக்கும் தெரியாத பாரதப் பூர்விகரான போதிதர்மரான, போதிவர்மன் என்பவரை நமக்கு பெருமையுடன் அறிமுகம் செய்து வைக்கிறது.

இதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்கிற இயக்குநரின் ஆர்வத்தைக் காட்டுகிறது. (முருகதாஸ் நல்ல இயக்குநர் என்பது, அவரெடுத்த பார்த்திபன் கனவே காட்டிக்கொடுத்து. ஆனால் இப்படமோ, அவரது ஆர்வக் கோளாறைத்தான் காட்டுகிறது. ).

அழகான ஒளி ஓவியம் (நல்ல சொல்லுக்கு நன்றி தங்கர் பச்சான்), பாராட்டப்படவேண்டிய கலை இயக்கம் என்று பல நல்லவிஷயங்கள் இருந்தும், நிறைவான, முழுமையான, நம்பத்தகுந்த ஆராய்ச்சியில்லாதடாக்குமெண்ட்ரியா, ஹாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்றாம் ரக குங்ஃபூ படமா, அல்லது தமிழரின் பெருமைக்காக எடுக்கப்பட்ட பிரச்சார படமா என்று தெளிவில்லாமல், செல்லும் படமாகத்தான் தெரிகிறது.

போதிதர்மன், காஞ்சியை ஆண்ட பல்லவ அரசனின் மூன்றாம் இளவரசன் என்கிற முதல் தம்பட்டம் - இதைப்பற்றி சற்று பார்ப்போம். எந்த அரசன்? அவனுடைய மற்ற பிள்ளைகள் என்ன ஆனார்கள்? எந்த நூற்றாண்டு என்ற கேள்விகள் வெகுவாக தவிர்க்கப்பட்டு, கேள்விகளைக் கேட்காமல் நாங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். . வலியுறுத்திக்கேட்டால், இல்லையே, நாங்கள் வலை, இணையத்தளங்களை ஆதாரமாகக் காட்டியிருக்கிறோமே என்று சொல்லலாம். இணையதளங்கள் எல்லாம் வலுவான ஆராய்ச்சித்தலங்கள் அல்ல. 

பல்லவர்களைப்பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவுறாத ஒன்று. நமக்குத் தெரிந்த பல்லவர்கள், ஆறாம் நூற்றாண்டினைச் சேர்ந்த சிம்ஹவிஷ்ணு, அவனுடை புதல்வனும், சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறிய மஹேந்திர வர்மன், மற்றும் அவனுடை புதல்வனான மாமல்லபுரத்து கதாநாயகனான நரசிம்மவர்மன் என்று நீண்டு, சோழர்கள் வந்தவுடன் சுருங்கி, பின்பு மறைந்தேவிட்டது.

சிம்ஹவிஷ்ணுவின் தந்தை மூன்றாம் சிம்ஹவர்மன் (முதல் இரண்டு சிம்ஹவர்மர்கள் முந்தைய தலைமுறைகளில் இருந்திருக்க வேண்டும்), மற்றும் அவனுடைய தந்தை இரண்டாம் விஷ்ணு கோபன் (முந்தைய முதல் விஷ்ணுகோபன் இருந்திருக்கவேண்டும்) என்று சரித்திரப்பெயர்கள் கேள்விப்படுகிறோமே (தகவல்: விக்கிபீடியா), அவர்களைப் பற்றி விவரணங்கள் தெரியவில்லை. சிம்மவிஷ்ணுவின் காலமே, உத்தேசமாக கி.பி. 555-590 என்று சொல்லுகிறார்கள்.. மேலும் தமிழர்களின் இருண்டகாலமாகச் சித்தரிக்கப்படும் (சைவமும், வைணவமு ஒடுங்கியிருந்து, ஜைனமும் பௌத்தமும் முன்னிருந்த காலமாக இருந்தததினால் முன்வைக்கப் பட்ட கருந்து) களப்பிரர்களிடமிருந்து தமிழகத்தை மீட்டவன் அவனிசிம்ஹன் என்று புகழப்பட்ட சிம்மவிஷ்ணு, மற்றும் பாண்டியன் கடுங்கோன். அதற்கு முந்தைய பல்லவர்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களும் ஒரு நூறு ஆண்டு கால அளவில்  குறுகி 4ம், 5ம் நூற்றாண்டுகளில் வந்துவிடுகிறார்கள்.. போதிவர்மனோ, 6 ம் நூற்றாண்டிலேதான் சீனாவுக்கு சென்றதாக, ( 550 களில்), அவர்களின் குறிப்பும் தெரிவிக்கிறது.

சரித்திரத்தகவல்களே சிதறுண்டு, ஆராய்ச்சியாளர்களின் பார்வைகளில் வேறுபட்டு இருக்கையில் எந்த பல்லவனைப் பற்றி பேசுகிறார்கள் படத்தில்? சீன சரித்திரத் தகவல்களும், பின்வந்த பல நூற்றாண்டுகளில், சென் பௌத்த மத ஆசிரியகளால் மேல்பூச்சு பூசப்பட்டு கோர்க்கப்பட்ட கதைகளாகவே கருதப்படுகின்றன்.. அவர்களும் ஒத்துக்கொள்ளுகிற ஒரு சரித்திரத் தகவல், போதிதர்மன் இந்தியாவிலிருந்து, தென்னகத்திலிருந்து, வந்த ஒரு மனிதன் என்பதுதான். காஞ்சிபுரம், பல்லவ இளவல் என்பதெல்லாம் பிற்சேர்க்கையாகக் கூட இருக்கலாம்!) எனக்கும் கூட அவன் தமிழனாக இருக்கக்கூடாதா என்கிற ஏக்கமுண்டு.

தவிர பல்லவர்களே, மத்திய இந்தியாவிலிருந்து வந்த, பாலி மொழியும் சமஸ்க்ருதமும் பேசிய ஒரு குடி என்கிற ஆராய்ச்சியும் இருந்திருக்கிறது. அவர்கள் முழுக்கத் தமிழர்களாக இருந்திருப்பது சந்தேகமே. பிற்கால தெலுங்கு சோழர்களைப் போல அவர்களும் தமிழை வளர்த்திருக்கலாம், ஆனால் அக்மார்க் தமிழர்கள் என்று சொல்வது உறுதிச் செய்யப்படாத, இதுவரைக்கும் முடியாத, ஆராய்விலே முடிவுறாத வீண் தற்பெருமை மட்டுமே!

ஏதோ ஒட்டுமொத்த இந்தியாவின் மருத்துவம், தற்காப்புக்கலைகள் இங்கிருந்து சென்ற போதிதர்மனோடு, சீனதேசத்துக்குச் சென்றுவிட்ட மாதிரி பேசுவது அபத்தம்.. ! "மீதிவர்மர்"களே இல்லையா? குறைந்த பட்சம் "பாதி வர்மர்கள்'" கூடவா இல்லை? அவர்களுக்கும் எதேனும் வைரஸ் தாக்கி, அழிந்துவிட்டார்களா? அவன் சென்ற பிறகு வந்த நூற்றாண்டுகளில் இருக்கும் இலக்கியங்கள் காக்கப் பட்டிருக்கின்றன, இந்த கலை மட்டும் முற்றாக அழிந்து ஒழிந்து போனதா? குறைந்த அளவு, பின்னாள் சோழர்கள், நாயக்கர்கள் காலம் வரையாவது இருந்திருக்க வேண்டுமே! இன்றும் கூட வர்மக்கலை இருப்பதாக கேள்விப்படுகிறோமே.! ஏன் பரவலாக வெளியில் வரவில்லை?

நோக்கு வர்மம் என்பது இப்போது நாம் வர்மக்கலையினைத் தேடி எடுத்து கொண்டாடும் விஷயம். இதை மிகவும் அற்புதமாக, தற்காப்புக்கலையின் ஒரு உயர்ந்த விஷயமாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்வந்த "ஷாவோலினின் 36ம் வகுப்பறை" என்ற படத்தில் காட்டியிருப்பார்கள். அதன் உயர்வை ஒரு மூன்றாம் தர வில்லனின் கையில் கொடுத்து, ஏதோ ஏக்கப் பார்வையிலேயே (பாதி தூக்கப் பார்வை போல இருக்கிறது) எல்லோரையும் அழிக்கிற கருவியாக சித்தரித்திருப்பது கொடுமை!

பிறகு அறிவியல், மரபணு ஆராய்ச்சி, அதை செய்யும் ஸ்ருதிஹாஸனின் அதீத தமிழ் ஆர்வம் (தத்தி தத்தி தமிழில் பேசும் தங்க பாப்பா!), மீண்டும் போதிதர்மனை கொண்டுவர உருவாக்கப்பட்ட போதிதர்மன் பரம்பரையிலே வந்தவரான சர்க்கஸ் சாகஸக்காரர் அர்விந்த், இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல், சீனாவின் இந்திய ஆக்ரமிப்பு முயற்சி, அதற்காக உருவாக்கப்பட்ட டாங் ஈ (டான்கியா?) , அவருக்குத் துணை போகும், சீனாவுக்கு விலைபோன இந்திய விஞ்ஞானி ரங்கநாதன், கொஞ்சம் காதல், நிறைய சண்டை, ஹாரிஸ் ஜெயராஜின் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட பாத்திரக்கடை களேபர ஓசை (இசையென்பது சரியில்லை!) என்று ஒரே அமர் களம்தான் படம் ('க்' விடுபட்டிருப்பதை கவனிக்க!). ஒரு பாட்டு, சுமார் ரகம். ஆனால் கேட்ட மெட்டுபோல தோற்றம். ஆனாலும்.. ரொம்பத்தான் பில்ட் அப்பு!

கடைசீயில், சூர்யாவை வைத்து பிரசாரப் பேச்சு, அதை மானிடரில் பார்த்துக்கொண்டிருக்கும் முருகதாஸ் என்று படம் முடிகிறது. நெட்டி முறித்துக்கொண்டு எழுந்தபோது, அப்பாடா என்று இருந்தது..! முருகதாஸின் முகத்தில், இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறோமே, ஓடுமா, ஒடாதா என்கிற கவலைதான் தெரிகிறது...!

தமிழனின் பெருமை அறைகுறை ஆராய்ச்சியிலும், ஆரவாரமான தற்பெருமையிலும் இல்லை. இது காசுக்காக, காசுள்ளவர்கள், தமிழர்களை மேலும் சுரண்டுவதற்காக எடுத்த கமர்ஷியல் படம்.. இதை எடுத்த, நடித்த தமிழர்களுக்கும் இதனால் பெருமை வரப்போவதில்லை. பார்க்கும் தமிழர்களுக்கும் பெருமையும், எழுச்சியும் வரப்போவதில்லை.


அக்டோபர் 28, 2011

எல்லாம் சிவபயம்


வெற்றுச்சுவரைப் பார்க்கின்றேன்

முற்றுமுணரும் நிலைவேண்டி
கற்றதுவெல்லாம் காய்ந்துப்போக
இற்றதுஎண்ணம் என்றேயாக  4

முடிவும்முதலும் இல்லாத
முடிச்சுப்போட்ட மூலமெது?
மூளையின்மூச்சு முட்டும்மட்டும்
மூலைகள்தோறும் தேடுகிறேன்.. 8

அதுவாஅவரா ஜடமாஉயிரா?
எதுவுமில்லா சூனியமதுவே
விதையொன்றாகி விளைநிலந்தேடி
விந்தையுலகை எட்டிப்பார்த்து   12

வினைகளமாடி விதிமுடிவாலோ
வருமுதிர்வாலோ விழுந்தபின்னர்
மீண்டுமதுவாய் மறைவதுதானே
மீண்டும்மீண்டும் காணுமியற்கை?  16

இடையில்வாழ்கை! எத்தனைநித்திரை?
தொடர்ந்தகனவுகள்? தொய்ந்த நினைவுகள்!
விழித்தகணங்களும் எத்தனை வேதனை?
விழுந்துஎழுந்த கதைகள் ஆயிரம்  20

அழுதகண்கள் அதுபல்லாயிரம்
கேட்டாலுந்தன் பழவினையென்பார்.
இருந்தபிறப்புகள் யாரேஅறிவார்?
எல்லாம்கடந்தவன் நாடகமென்பார். 24

சுழற்சியில்லா நிலையினைநாடு
சுத்தப்பிரம ஜோதியைகூடு
பிறவிகளில்லா பெருநிலைதேடு
துறவினைநாடி அடைவாய்வீடு  28

காலந்தோறும் ஞானிகள்ஜாதி
ஞாலத்தோர்க்கு உரைத்தபாடம்
அவனேஎழுதி அவனேநடத்தி
அவனேகளிக்க நடக்கும்கூத்தெனில் 32

எதற்காயித்தனை நாடகம்செய்தாய்?
இறைவாஎன்று கேட்கத்தோன்றி
அதையுமறிவு கழித்துப்போட்டது
இறைபொருளென்ன ஆணவக்குறியா? 36

விதையில்லாத விருட்சமில்லை
இயற்கையின்நியதி இதுவேயாகில்
இறைக்கும், வித்து இருக்குமன்றோ?
முதலில்லாமல் முடிவும் உண்டோ? 40

அகன்றுவிரியும் அண்டம் தொடங்கிய
அணுவின்முதலும், பூஜ்ஜியநொடித்துளி
தொடங்கி, இன்றும் முடியாப்பயணம்
தொடரும், முடிவில் காலக்கோடும் 44

ஜனித்தவேளை, கடவுள் என்னும்
கருத்தும் ஒன்றாய் உதித்தவேளை!
காலம் என்னும் அருவப்பொருளும்
காணும் அண்ட உருவப்பொருளும் 48

தானேநிகழ்ந்த தற்செயல்அற்புதம்!
ஏனோதோன்றுது எனக்குள்ளாக.
ஆனால்படித்த படிப்பும்பயமும்
ஊனில்கலந்த உலகியல்வழக்கும் 52

ஒத்துப்போகச் சொல்வதினாலே
செத்துப்போக சிந்தனையெல்லாம்
சத்தியமாகச் சொல்வேனெந்தன்
சித்தமெல்லாம் சிவபயமே! 56

அக்டோபர் 18, 2011

மீண்டும் வேண்டும் சுதந்திரப் போர்

 [ கால ஓட்டத்தில் சில மனதுக்குப் பிடித்த விஷயங்களை, நேரமின்மை என்கிற ஒரு சுய நொண்டிச் சமாதனத்திலே, தள்ளிப்போடுகிற குணம் எல்லோருக்குமே இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் அதிகமே. ஆனாலும், இந்த கவித்துவ வெளிப்பாடு, கடந்த ஆண்டுமுதல் எல்லோரையும் பரபரப்பாகி, இப்போது முழுவதுமாக ஓய்ந்துவிடாமல், ஆனால் வெகுவாக மந்தமாகி, மரணப்படுக்கைக்குத் தள்ளப்பட்டிருக்கிற, 2G முதல் மற்ற எல்லா ஊழல் செய்திகளுக்குக்கிடையில், ஆற்றாமை காரணமாக எழுதப்பட்டது. ஆனால், எழுதி என்ன பயன் என்ற எண்ணத்திலே இங்கே இடுகையாகப் பதியாமல் போனது..! மக்களின் மறதி மண்ணாகிப் போகாமலிருக்க, இது போன்ற ஆதங்க வெளிப்பாடுகள் தேவை என்கிற எண்ணம் இன்று இதை தற்செயலாக மீண்டும் படிக்கையில் ஏற்பட, இதோ கொள்வாருக்காக விரிக்கப்படுகிற கவிதைக் கடைச் சரக்கு! ]

மீண்டும் சுதந்திரப் போரினைச் செய்வோம்
அடிமைப் புத்தியின் அசதியைத் தொலைத்து
மாண்டநம் முன்னோர் உயிர்விலை விளைத்த
விடியலை வீணாய் செய்து விடாமல்!
அன்னிய உருவிலே, அடக்கு முறையிலை
ஆனால் இங்கே எத்தனை தளைகள்?
அன்னிய மொழிமுதல் அனைத்து கலப்பையும்
ஊனாய் உயிராய் உவந்து விட்டோம்!
தாலிகள் கோடியில் தாரை வார்த்தித்
தாலியின் கைகளில் கொடுத்து விட்டோம்

தொகைபல கோடியில் இருந்தும் தலைமைத்
தகைமை கொண்டோர் ஒருவரும் இல்லை!
தொகைபல கோடியில் சேர்ப்பதும் அரசியல்
பகைவரை அடியொடு அறுப்பதும், மக்கள்
மனங்களில் ஆயிரம் பிரிவுகள் விதைப்பதும்
வனங்களில் வாழ்பவை போல்நிலை ஆக்கலும்
ஆள்பவர் இங்கே ஆடிடும் ஆட்டம்
ஆட்டின மக்கள் பாடுதிண் டாட்டம்
பிணங்கள் தின்னும் சாத்திர மெல்லாம்
பேய்க்குணம் கொண்ட மக்களி னாலே

ஆள்பவர் வழியிலே மாக்களாய் ஆவதா?
தோள்வலி குன்றிநாம் தோல்வியில் துவள்வதா?
நம்மொழி நம்மினம் நம்கலா சாரம்!
நாவிலே நயம்பட நவிலத் தானா?
அன்னை மடிதனை அறவே மறந்து
அவலப் பிறப்பாய் திரியத் தானா?
என்பெலாம் கூசிடும் உணர்வுகள் இற்றதா?
எண்ணவும் இயலாச் செயலுமொ ழிந்ததா?
அரசியல் பிழைத்தால் அறமே கூற்றென
அருந்தமிழ் இளங்கோ அறிந்ததும் பொய்யா?

வாய்மை வெல்லும் என்னும் வாசகம்
வாய்-மெய் தனைவெலும் என்றோ வாகிடும்?
அரசிடம் தொடங்கி, அடித்தள மக்கள்
அனைவரும் சமமென ஆச்சுது ஊழலில்
கல்வியில் தொடங்கி கார்ப்பரேட் வரையில்
பாழும் பணமே பாயுது வெள்ளமாய்
கலைகள் எல்லாம் காசில் மாசாய்
குலைந்து போனது குப்பை மேடாய்!
மக்கள் உணர்வில் மறத்துப் போனார்.
சுவாசம் மறந்து மரித்துப் போனார்.

ராமன் வந்தே ஆண்டால் என்ன?
ராவண னால்நான் மாண்டால் என்ன?
மணியடித் தாலே கிடைக்குது சோறெனும்
மானங் கெட்ட வாழ்வே போதும்!
என்றே இருந்தால் எங்கே வாழ்வு?
எத்தனை நாட்கள் இத்தனைத் தாழ்வில்?
எழுமின் எழுமின் என்னுயிர் மக்காள்
கழுவில் கிடந்த நாட்களைத் தொலைத்து
உழுமின் உள்ளச் சிந்தனை நிலத்தை
பழுதில் எண்ணம் வளர்ப்பீர் உளத்தில்

அரசியல் அவலம் அடித்தளம் அரிக்கும்
கரையான் போல! அறிவீர் அறிவீர்
புரையோ டிப்போய் புழுத்து விடாதீர்.
உரமுடன் உள்ளத் துடிப்புடன் எழுவீர்
சூரியன் பெயரால் சூழ்ந்திடும் இருளை
வீரியங் கொண்டு விரட்டுவோம் வாரீர்!
சூழ்சியில் மக்களை சுரண்டிடும் கேடரும்
வீழ்ந்திட, விடுதலை பெற்றிட வாரீர்!
அயலான் நம்மை அடிமைப் படுத்த
அழகாய் வகுத்த, பிரித்தே ஆளும்

சூழ்ச்சிப் பின்னலை பிடித்துக் கொண்டார்
சூதினை நம்முள் விதைத்து விட்டார்
சூதை வென்று தருமம் வெல்ல
பாதைக் காட்டி கீதை தந்த
பார்த்தன் சாரதி கண்ணன் கனிவுடன்
பார்த்தருள் புரிவான் பாரதம் விழித்திடும்
அதுவரை சுதந்திர வேள்வித் தீயை
அணைய விடாதீர் ஆருயிர் நண்பீர்!


ஜனவரி 19, 2010

நம்பிக்கை - உணர்தல்

இந்த நாள், இனிய நாள் என்று எல்லா நாட்களையும் தொடங்குவது, ஒரு எண்ணம். ஆனால் இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று ஏங்குவதும், அந்த நாள் இனி வருமோ என்று வாடுவதும், என்றுதான் உண்மையான விடியலோ என்ற புலம்பலும்தான் வாடிக்கையாகி விட்டது.

சன் டீவியில் வரும் மிகவும் குறைவான நல்ல நிகழ்ச்சிகளில், அதிகாலையில் வரும், "இந்த நாள் - இனிய நாள்”, ஒரு சுவையான, பயனுள்ள நிகழ்ச்சி. மறைந்த தென்கச்சி கோ. சுவாமிநாதனும், தற்போது சுகி. சிவமும் நல்ல செய்திகளைப் பயனுள்ள வகையிலே சொல்லி வருகிறார்கள். இந்த வாரத் தொடக்கத்தில், நம்பிக்கை - உணர்தல் என்பவற்றைப் பற்றிய சுகி. சிவத்தின் எண்ண வெளிப்பாடுகள் சிந்திக்கவைக்கும் செய்திகள். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே புழக்கத்தில் இருக்கிற, நன்கு அறிமுகமான வார்த்தைகள். எத்தனைச் சொற்களை அவற்றின் உட்பொருளை அறியாமல், உணராமல் நாம் சொல்லாடல் செய்கிறோம் என்று என்னை உணரவைத்த மணித்துளிகள் சுகி. சிவம் பேசிய தருணங்கள்.

நம்பிக்கை, உணர்தல் என்பவை இரண்டுமே தனிமனித அனுபவங்களாகக் கொள்ளப்பட்டாலும், நம்ப வைப்பதும், நம்புவதும், பிறர் ஊக்கியோ, அல்லது சுய சிந்தனையில் பிறந்த முடிபினாலோ ஏற்படுபவை. நான் அல்லது நாங்கள் நம்புவதை நீயோ, நீங்களோ, பிறரோ நம்பவில்லையானால், பிணக்கும், மனக்கசப்பும், சமயங்களில் சண்டைகளும் ஏற்பட்டுவிடுகின்றன.

கடவுள் நம்பிக்கை, கடவுள் இல்லை என்ற நம்பிக்கை, சமய நம்பிக்கை, சாதி நம்பிக்கை, கருத்தில் நம்பிக்கை, காதலில் நம்பிக்கை, தலைவனில் நம்பிக்கை என்று எல்லாமே கட்சிகட்டும் விவகாரங்கள், மற்றும் அடிப்படையிலே பிரிவினை ஏற்படுத்துபவை. ஒன்றுபடுத்துவது போல தோன்றி, கூட்டங்களைச் சேர்த்து, உன்பலமா, என்பலமா என்று தோள் தட்டுபவை.

உணர்தல் என்பது உள்ளொளி பெருகுதல், நம்பிக்கை உள்ளிட்ட அத்தனை மாயங்களும் அருகுதல்; உள்ளுக்கு மெய்யைக் காட்டும் தரிசன வாயில். உணர்ந்தபின் உவகை, உணர்ந்தவரோடும், அல்லாதவரோடும், சமநோக்குடைமை, கண்டவர் விண்டிலராகும் தன்மை இவையெல்லாம் தானாகவே அமைகின்றன. ஏனென்றால் உணர்ந்தவர் உணர்வது ஒன்றுதாம். சொல்லுக்கடங்கா, வேற்றுமைகளும், சுயபுத்தி என்கிற ஆணவமும் அடங்காத மனங்கள் உண்மையின் தரிசனத்துக்குப் பண்படாதவை, தொலைவில் உள்ளவை. நான், எனது என்பவை ஒழிந்தாலே, அதன் விளைவாம் கட்சிகூட்டல்களும் அழிந்து, சுயதரிசனத்துக்கும், உண்மையின் தேடலுக்குமான பக்குவம் வந்துவிடும்.

எனக்கும் கூட சிந்திப்பது எளிதாக செயலாக்கம் கடினமாக உள்ள ஒன்று இது. இதற்காகத்தான் சொன்னார்களோ... ? “ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள்.. ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்: என்று?

டிசம்பர் 31, 2009

சென்னயில் கச்சேரி ஸீஸன் 2009-2010

ஜனவரி ஒன்று, 2010:

அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, ஏதோ எல்லா கச்சேரிகளுக்கும், செல்லப்போவதாக நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும், சென்னை போக்குவரத்து நெரிசல்களும், மற்ற வாகன வசதி சிக்கல்களும், உறவினர் வருகைகளும், அழைப்புகளும் ஒட்டுமொத்தமாக நேரத்தை ஆக்ரமிப்பு செய்து கொள்ள, முடிந்த நேரத்தில் செல்லக்கூடிய கச்சேரிகள் மிகவும் குறைவுதான்.

இந்தவருடம், சௌமியா, டி.என்.எஸ், க்ருஷ்ணா, சஞ்சை, அஷோக் ரமணி, சங்கர நாராயணன் இவர்களின் கச்சேரிகளுக்குத்தான் செல்ல முடிந்தது... தவிர சில உதிரி ஆய்வு விரிவுரைகள்-விளக்க நிகழ்வுகள், குறிப்பாக எஸ்.ஆர்.ஜானகிராமன் அவர்கள் பார்த்தஸாரதி அரங்க நிகழ்ச்சி, என்று சில்லரை சில்லரையாக நிகழ்ச்சிகள்.

சௌமியாவின் சென்னை ம்யூஸிக் அகாதமி கச்சேரி மிகவும் நிறைவு. அதிகம் பாடப்படாத கோரி ஸேவிம்பராரே (கரஹரப்ரியா) அழகாகப் பாடப்பட்டது.. அதிக ஆர்ப்பாட்டமில்லாத கச்சேரி.

நாரதகான சபாவில், டி.என்.எஸ் அவர்களின் கச்சேரி, நிறைவான ஒன்று. ஆள் இளைத்தாலும், இசையில் இளைக்காத, இளமை உள்ளவர் சேஷூ. அவ்ர் எடுத்துக்கொண்ட பெரிய உருப்படி சிந்தாமணி ராகமும், ஸ்யாம ஸாஸ்த்ரியின் "தேவி ப்ரோவ" க்ருதியும்தான். அவரால் மட்டுமே செய்யமுடிந்த செயல், அந்த ராகத்தை அவ்வளவு விரிவாகப்பாடியது.

டி.எம்.க்ருஷ்ணாவின் அகாதமி கச்சேரி, வேகமும், விவகாரமும் நிறைந்த, கைத்தட்டல்களை அள்ளிக்கொண்ட கச்சேரி. பாபனாசம் சிவனின், அப்பன் அவதரித்த கதாம்ருததில் பாடிய மின்னல் ஸ்வரப் பின்னல்களுக்குப் பிறகு பாடிய தோடி கொஞ்சம் சுமார் ரகம்தான். ப்ருந்தாவன ஸாரங்க க்ருதியான சௌந்தர்ராஜத்துக்கு பாடப்பட்ட ராக ஆலாபனை மிகவும் சுமார் ரகம்தான்.. க்ருஷ்ணா ரொம்பவும் பேசுகிறார். ரசிகர்களின் கூட்டம் இன்று இருக்கும், நாளைக்கே வேறு திசைக்கு மாறிவிடும்.. வித்யா கர்வம் நியாயமானது என்று வாதிப்பவர்கள் பலர் இருந்தாலும், வித்தைக்கு அழகு வினயம்..

சஞ்சய் நன்றாகப் பாடுகிறார், குரல் சிறிது கனைசலாக இருந்தாலும். அன்று பாடிய ஆபோகி நன்றாக இருந்தது.. ஆனால் கோபால க்ருஷ்ண பாரதியின் "சபாபதிக்கு" தேவலாம் ரகம். ஆகிரி நல்ல முயற்சி.. ஆனால் வந்தது வராமல் பாடுவது கஷ்டம்தான்.. அகாதமி கச்சேரியில் அவருக்கு குரல் கொஞ்சம் படுத்தல். அதனாலேயே நிறைய ஸ்ருதிக்குற்றங்கள், தவறல்கள்..

இவர் எம்.டி.ஆர் மாதிரி பாடுகிறார்.. கல்யாணராமனாய் மாறிவிடுகிறார். ஏன் அவரைப்போல பாடமாட்டேன் என்கிறார்? சஞ்சய், நீங்கள், நீங்களாகப் பாடுவதே பிடித்திருக்கிறது..

அஷோக் ரமணி, இவர் குரலில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. மேல் ஷட்ஜத்தில் சேரும் சமயங்களில் தேய்தல் இருக்கிறது.. ஆனால், அபரிமிதமான ஞானமும், தாளக் கட்டுப்பாடும் அமைந்த பாட்டு இவருடையது. காம்போஜியில் பாடிய மரிமரி நின்னே, கச்சேரி மேடைகளில் மிகவும் அபூர்வமாகப் பாடப்படும் க்ருதி.. மிகவும் நிறைவாகப் பாடினார். அவர் பாடிய பல்லவி திஸ்ர ரூபகம், ஸங்கீர்ண நடை (இதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்). மிகவும் கஷ்டமான ஒன்று.. மிகுந்த கவனத்துடன் பாடினார். ஷண்முகப்ரியா ராகத்தில் ஒரு இடத்தில் ஸ்ருதி விலகிய உடனே, அதை அவசரமாக முடித்துவிட்டால் போல பட்டது...! கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிறைவான கச்சேரி... ஆனால் கூட்டம்? நம் ரசிகர்கள் ஆர்பாட்டத்துக்கும், ஆரவாரத்துக்கும் ஆர்.எம்.கே.விக்கும் தான் கூடுவார்கள் போலிருக்கிறது...!

டி.வி.எஸ்.. விவகாரங்கள் குறைந்த, இசையனுபவம் மட்டும் மிகுந்த சுகமான கச்சேரி...

இன்னும் கச்சேரிகள் இருக்கின்றன செல்வதற்கு, ஊருக்குக் கிளம்புவதற்குள்.. மீண்டும் எழுதுகிறேன் ஊருக்கு வந்தவுடன்..!

இன்றைய சிந்தனை..

புத்தாண்டு ஹைக்கூ:

பிச்சைக்காரர்கள் - கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும்...!

நவம்பர் 10, 2009

ரொம்ப நாளாச்சு.. மறந்தே போச்சு..

வலைப்பூ பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. எழுத்தே மறந்துவிடும் போல ஆகிவிட்டது. என்ன செய்வது..? அன்றாட வாழ்க்கை அலுவல்கள், அலுப்புகள் ஆக்ரமிப்பு செய்துவிட்ட நிலையில், வெற்று ஆர்வம் மட்டும் என்ன செய்யமுடியும்?
எழுத எத்தனையோ இருந்தாலும், இப்போதைக்கு ஒரு கவித்துவமான வெளிப்பாடு மட்டும்…! இது ஒரு பொது நிலை வெளிப்பாடுதான். எல்லோருக்கும், எண்ண அளவிலாது கடந்து செல்லக்கூடிய நினைவுதான். தவறான வெளிப்பாடு என்பவர்கள் தவிர்க்கலாம் – உண்மையானவர்கள் முகத்திலில் ஒரு சிறு புன்னகை வரலாம்….! முதல் காதல் இல்லாத உள்ளமே இருக்காது.. அதுவே முடிவான காதலாய் கொண்ட உள்ளங்கள், இதைப் படிக்க வேண்டாம்..! வாழ்ந்து முடிந்து, வயோதிகத்தில் அசைபோடும் நினைவுகளில் இதுவும் இருக்குமே!

“முதல் காதல்”
மூவாறு வயதினிலே முகிழ்த்தது என் முதல்காதல்
முதுமையதன் வாசலிலும் முகங்காட்டி முறுவலிக்கும்.
என்றோவென் எண்ணத்திலே ஏறிவிட்ட அவள் நினைவு
என்றென்றும் என்னுடனே இதயத்தில் பயணிக்கும்.
தூரங்கள், தேசங்கள், புதிதான நேசங்கள்
சுமையான பாசங்கள், சுமந்துவந்த வாசங்கள்
முதலென்று அறியுமா? முடிவைதான் அறியுமா?
மூச்செல்லாம் அவளென்று இருப்பதைத்தான் புரியுமா?
அவள்நினைவு கீற்றாக மனத்திரையில் ஓடுகையில்
அகம்நிறையும்- அண்ணாந்து பார்த்துகண் விழிப்பனிக்கும்!
பிறவுறவில் இருந்தாலும், பிழையென்று சொன்னாலும்,
அறமுறைக்கிது அடுக்காது விழைவதுவும் வீணாகும்,
என்றெல்லாம் தெரிந்தாலும், என்மனத்தின் ஓரத்தில்
என்றைக்கும் தங்கிவிட்ட ஏக்கம்தான் என்செய்யும்?
தேகத்தின் தாகத்தை தீர்ப்பதற்கா இக்காதல்?
மேகத்தில் கருமுகிலாய் கனப்பதற்கா இக்காதல்?
இதயத்தின் கருவறையில் காதலையே தெய்வமென
உதயத்தில் தரிசிக்க உள்ளத்தில் பூட்டிவைத்தேன்
எங்கிருந்தாலும் வாழ்கென்று வாய்சொன்னாலும்
என்னவளே என்னிதயத்தில் என்றைக்கும் வாழ்வாயா?

பொன்னியின் செல்வன் நாடகம் - ஒரு பார்வை

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு மிகவும் வியக்கத்தக்க ஒன்று. கலைவழி பண்பட்ட கடந்தகாலச் சரித்திரத்தின் சுவடுகள், நமது பெருமை மிக்க முன்னோர்களின் ஆழ்ந்த அறிவாற்றலையும், அவற்றால் விளைந்த அற்புத வெளிப்பாடுகளையும் உன்னத காவியங்களாகவும், ஏனைய நாகரிகங்கள் போலல்லாமல், பொதுமக்களின் நல்வாழ்வோடு இயைந்த கலைச் செல்வங்களாகவும் இன்றும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

அவற்றின் பெருமைகளை உணர்ந்து, அவற்றின் நீட்சியாக இன்றைய சமுதாயத்தை நடத்திச் செல்லவும், குறைந்தபட்சம் அவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்லவும் கூட இன்றைய போக்கு இடமளிக்காமல் இருப்பது ஆழ்ந்த சோகத்தையும், கவலையையும் தந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரது தணியாத ஆர்வத்தினால், அப்பொக்கிஷங்கள் முழுவதும் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் விடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

பல்லவப் பேரரசும், பின்னால் வந்த சோழர்களும், பிற்கால நாயக்கர்களும், தஞ்சை மராத்தியரும், கலைகளை வளர்ப்பதிலும், கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் காட்டிய அக்கறையின் அகச்சான்றாக, அக்காலத்திய அறிவுப்பொக்கிஷங்கள் ஓலைசுவடிகளாகவும், உயர்ந்து நிற்கும் தென்னகக்கோவில்களாகவும் பிரதிபலிக்கின்றன இன்றும்.

பெருவுடையார் ஆலயம் என்று தஞ்சையில் சிறந்த சிற்பக்கலை சின்னமாக, ராஜராஜ சோழனின் ஆட்சியின் உன்னத வடிவமாக உயர்ந்து நிற்கும், பெரிய கோவிலும், அதைப்போன்ற நூற்றுக்கணக்கான கோவில்களும் தமிழரின் பொற்கால கட்டிடக்கலைச் சிறப்பை இன்றும் உரத்துச் சொல்கின்றன.

சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும், சரித்திரக் கதை புனைவோர்களுக்கும், வியப்பையும், கற்பனையயும் ஒருங்கே தரக்கூடிய அமர சின்னங்கள் அவை.

அமரர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, தமிழக சரித்திர வரலாற்றுக் கதை ஆசிரியர்களில் முதன்மையானவர், முக்கியமானவர். அவருடைய சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும், அவற்றில் உலவிடும் பாத்திரங்களும், சரித்திர ஆர்வலர்களையும், ஏன், ஆராய்ச்சியாளார்களையும் கூட பல்லவ, சோழ பேரரசுகளின் காலம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், இந்த மனிதர்கள் எல்லாம் உயிரோடு, இரத்தமும் சதையுமாக மாமல்லபுரத்திலும், வாதாபியிலும், தஞ்சையிலும், இலங்கையிலும் உலவி வந்திருக்கவேண்டும் என்றே எண்ணவும், நம்பவும் வைக்ககூடியவை..

செப்பேட்டு, கல்வெட்டு குறிப்புகளிலிருந்தும், சிறந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை அமரர் கல்கியின், ஈடு, இணையற்ற, கவித்துவமான கற்பன நயத்தோடு, உயிரோடு உலவிய பாத்திரங்களோடு, கற்பனைப் பாத்திரங்களையும் இணத்து புனையப்பட்ட அமரகாவியங்கள் இரண்டு நாவல்களுமே.

பொன்னியின் செல்வனின் சிறப்பு என்னவென்றால், கதைத்தலைப்பின் நாயகன், கதாநாயகன் இல்லை! கதாநாயகன் வந்தியத்தேவன் ஆனாலும், கதை இறுதியில் உத்தமச்சோழ சக்ரவர்த்தியின் மணிசூட்டு விழாவோடு நிறைவு பெறுகிறது. இந்த விசித்திர கதையமைப்பு, சரித்திர நிகழ்வோடு ஒத்துப்போவதானலும், இதற்கு முன்பும், பின்பும் இல்லாத காவியமரபு.

இந்த முரண் மரபே, திரைக்கதை ஆசிரியர்களையும், நாடகமாக்குவோரையும் சிறிது குழப்பகூடும். கதையில் வரும் ஏறக்குறைய அறுபது கதாபாத்திரங்களையும், பல்வேறு இடங்களையும், நம்பகமான முறையிலே வெளிக்கொணர்வது பெரும் பொருட்செலவு மட்டுமல்லாது, தயாரிப்புக்கும், கதை சொல்லும் நேர்த்திக்குமே பெரிய சவால்கள்.

ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றமும், நாடகவடிவமாக்கி, இயக்கிய பாகீரதி சேஷப்பனும், அவருடைய தயாரிப்பு நிர்வாகக் குழுவும், நடிகர்களும் இந்த சவால்களை சந்தித்தது மட்டுமல்லாமல், அவற்றைக் கடந்து சாதித்திருக்கிறார்கள்.

தயாரிப்பு நிர்வாகத்திலும், காட்சி வடிவமைப்புகளிலும் ஸ்ரீதரன் மைனரும், வேணு சுப்ரமணியனும் ஆற்றிய பங்கு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய ஒன்று. காட்சிகளை வேகமாக நகர்த்துவதில், நடிக, நடிகையர்களை, காட்சிகளுக்கு மேடையில் குறித்த நேரத்தில் இருத்தியதில் பல்லவி நாகிரெட்டியின் சிரித்த முகத்திற்கு சிறப்பான பங்கு உண்டு.

தடுமாற்றங்களும், வசன மறப்புகளும், தொழில்வழி நாடக நடிகர்களுக்கே நேர்வதுதான். ஆனால் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே முக்கியம். நம்முடைய வளைகுடா நடிகர்கள், தங்களுடைய ஆர்வங்காரணமாக, சொந்த வேலைகள் மிகுந்த வார இறுதிகளை தியாகம் செய்தும், அலுவலக நெருக்கடிகள், வீட்டோர் அலுத்துக் கொள்ளல்கள் இவற்றை சமாளித்தும், நாக்கை உருட்டி, பிறட்டி போடக்கூடிய தமிழ் வசனக்களை, உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள் கெடாமலும், மிகவும் நேர்த்தியாக நடித்தது மட்டுமல்லாமல், ஏறக்குறைய அறுநூறுக்கும் மேற்பட்ட, நாடக ரசிகர்களை ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கு கட்டிப்போட்டது ஒரு உயரிய சாதனைதான்!

“தங்கத்திலே ஒரு குறையிருந்தால் அது தரத்தினில் குறைவதுண்டோ”?

பாகீரதி சேஷப்பன் சொன்னது போல, சரித்திர நாடகத்தினை, தூயத் தமிழ் வசனங்களோடு, இத்தனையாயிரம் மைல்களுக்கப்பால் அரங்கேற்றும் போது, அதற்கு உண்டான வரவேற்பினைப் பற்றிய சந்தேகங்களுக்கு, நேற்றைய இரசிகர் கூட்டம் உரத்துச் சொல்லிவிட்டது பதிலினை!

தலைமுறைகளைக் கடந்த, காவியம் இது என்ற அங்கீகாரத்தினை, அமரர் கல்கி வானுலகிலிருந்து பார்த்து, கண் விழிகள் பனித்துக் கொண்டிருப்பார்!

ஜூன் 20, 2009

ஆலிலை மேலொரு அழகிய பாலகன்

ஏக்நாத் ஈஸ்வரன் (1910-1999) அண்மையில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த தன்னையுணர்ந்த தத்துவ தரிசி. இந்தியாவில் நாக்பூர் பல்கலை கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக் கழகத்து ‘ஃபுல் ப்ரைட் அறிஞராக”, (Fulbright Scholar) 1960-களில் வந்த அவர், நீலகிரி பிரசுரம் (Nilgiri Press), மற்றும் “நீலமலை தியான வளாகம்” (Blue Mountain Center of Meditation), முதலியவற்றை நிறுவி, ஆன்மிகம், தியானம், பகவத் கீதை, உபநிஷத்துக்கள், தம்மபாதா போன்றவற்றுக்கு விளக்க உரையாக, நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார்.

அவருடைய “தினசரி வாழ்க்கைக்கான பகவத்கீதை” தொடர் புத்தகங்களின் இரண்டாவது தொகுப்பான “ஆயிரம் சூரியர்களைப் போல” என்ற புத்தகத்தின் சில பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்க்கண்டேயன் கிருஷ்ணனைப் பார்த்து, ‘மாயைப்” பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்க, நடக்கும் நிகழ்வுகளை, மிகவும் அழகாக, பிரமிப்பாக விளக்கியிருப்பார். அந்த விளக்கங்களை படித்தன் காரணமாக எழுந்த உள்ள எழுச்சியில் பிறந்த பாடல்தான் இதோ…! கவிதைக்கான முதல் காரணமான “உள்ள எழுச்சி” என்பதைத்தவிர மற்று இலக்கண விதிகளுக்கெல்லாம் உட்பட்டுள்ளதா என்று சிந்திக்காமல் எழுதிய வெளிப்பாடு இது…!

ஆலிலை மேலொரு அழகிய பாலகன்

கால்விரல் கனியிதழ் வாயினில் குலவிட

மாயங்கள் செய்கின்றான் – எல்லாமவன்

மாயயை என்றே சொல்கின்றான்.


ஆலமுண்ட நீலகண்ட ஆதிசிவ நாதன்

காலனை கடிந்தே கார்த்தமார் கண்டன்

காலமும் ஞாலமும் கடந்த மாயையின்

கருத்துரைக்கக் கேட்டான் – கண்ணனோ

கருத்தையே அழித்தான் – அகமாயக்

கருத்தையே அழித்தான் -


உள்ளிழுக்கும் மூச்சிலே உயிரெலாம் ஒடுங்கும்

உள்ளும் புறமுமென்ற உணர்வுமே அடங்கும்

எல்லாம் ஓய்ந்துவோர் எல்லையிலா மெளனம்

ஏகாந்தமாய் அங்கே நிலைபெறும் மோனம்


ஹூங்கார நிஸ்வாஸம் உண்டாக்கும் ப்ரபஞ்சவெளி

ஆங்கார மாயைதனை அழிக்கின்ற ஞானஒளி

இருவினை இருள்மாயக் களியினிலே களைப்பார்

கருமவினையில் இங்கே பிறந்திறந் திளைப்பார்-பின்

பரமயோக பாதன் பக்தியிலே திளைப்பார்.


எல்லாம் துறந்த துறவியருக்கும் இலக்கியமும், இலக்கணமும் துறக்கமுடியவில்லையே என்று நினைப்பதுண்டு. ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, அக்கூற்றையும் கவியாகச் சொன்னவர்கள் நம் துறவிகளும் ஞானியர்களும். கவிதை ஆசைமட்டும் எவரையும் விட்டதில்லை! இதற்குக் காரணம் எதுவாக இருக்கமுடியும்? சிந்திப்போம் அடுத்தமுறை சந்திப்பதற்குள்..

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...