நவம்பர் 10, 2009

ரொம்ப நாளாச்சு.. மறந்தே போச்சு..

வலைப்பூ பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. எழுத்தே மறந்துவிடும் போல ஆகிவிட்டது. என்ன செய்வது..? அன்றாட வாழ்க்கை அலுவல்கள், அலுப்புகள் ஆக்ரமிப்பு செய்துவிட்ட நிலையில், வெற்று ஆர்வம் மட்டும் என்ன செய்யமுடியும்?
எழுத எத்தனையோ இருந்தாலும், இப்போதைக்கு ஒரு கவித்துவமான வெளிப்பாடு மட்டும்…! இது ஒரு பொது நிலை வெளிப்பாடுதான். எல்லோருக்கும், எண்ண அளவிலாது கடந்து செல்லக்கூடிய நினைவுதான். தவறான வெளிப்பாடு என்பவர்கள் தவிர்க்கலாம் – உண்மையானவர்கள் முகத்திலில் ஒரு சிறு புன்னகை வரலாம்….! முதல் காதல் இல்லாத உள்ளமே இருக்காது.. அதுவே முடிவான காதலாய் கொண்ட உள்ளங்கள், இதைப் படிக்க வேண்டாம்..! வாழ்ந்து முடிந்து, வயோதிகத்தில் அசைபோடும் நினைவுகளில் இதுவும் இருக்குமே!

“முதல் காதல்”
மூவாறு வயதினிலே முகிழ்த்தது என் முதல்காதல்
முதுமையதன் வாசலிலும் முகங்காட்டி முறுவலிக்கும்.
என்றோவென் எண்ணத்திலே ஏறிவிட்ட அவள் நினைவு
என்றென்றும் என்னுடனே இதயத்தில் பயணிக்கும்.
தூரங்கள், தேசங்கள், புதிதான நேசங்கள்
சுமையான பாசங்கள், சுமந்துவந்த வாசங்கள்
முதலென்று அறியுமா? முடிவைதான் அறியுமா?
மூச்செல்லாம் அவளென்று இருப்பதைத்தான் புரியுமா?
அவள்நினைவு கீற்றாக மனத்திரையில் ஓடுகையில்
அகம்நிறையும்- அண்ணாந்து பார்த்துகண் விழிப்பனிக்கும்!
பிறவுறவில் இருந்தாலும், பிழையென்று சொன்னாலும்,
அறமுறைக்கிது அடுக்காது விழைவதுவும் வீணாகும்,
என்றெல்லாம் தெரிந்தாலும், என்மனத்தின் ஓரத்தில்
என்றைக்கும் தங்கிவிட்ட ஏக்கம்தான் என்செய்யும்?
தேகத்தின் தாகத்தை தீர்ப்பதற்கா இக்காதல்?
மேகத்தில் கருமுகிலாய் கனப்பதற்கா இக்காதல்?
இதயத்தின் கருவறையில் காதலையே தெய்வமென
உதயத்தில் தரிசிக்க உள்ளத்தில் பூட்டிவைத்தேன்
எங்கிருந்தாலும் வாழ்கென்று வாய்சொன்னாலும்
என்னவளே என்னிதயத்தில் என்றைக்கும் வாழ்வாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...