ஏப்ரல் 27, 2009

மெய்ப்பொருள் - விமரிசனம்

பிரமாண்டம், பெரிய தயாரிப்பு மற்றும் விளம்பர செலவு, மார்க்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோ, ஹீரோயிணி, பிற நட்சத்திரப் பட்டாளம், பாடல்களுக்கு வெளிநாட்டு லொகேஷன்கள், சினிமா ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கிறது என்கிற சுய, மற்றும் திணிக்கப்படுகிற, வர்த்தக வரையறுப்புகள், இவை எதுவுமில்லாமால், கதை, சொல்லும்விதம், வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்கிற முனைப்பு, கதையும், காமிராவுமே உண்மையான நாயக நாயகிகள் எனும் வெளிப்பாடு, இவைகளோடு மட்டும் வந்திருக்கிற படம் “மெய்ப்பொருள்”.

ஸாம் (நியூரோ ஸர்ஜன்), மனைவி தேவி (தென்றல் மாத இதழின் நிருபர்), இவர்களின் நண்பன் விஸ்வா, விண்வெளி இயல்பியல் (அஸ்ட்ரோ பிஸிஸிஸ்ட்) விஞ்ஞானி ராஜன் என்னும் நால்வரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது. தவிர விஸ்வாவின் காதலி லக்ஷ்மி (கொசுறு), ஸாமின் பெற்றோர்கள், மனோத்ததுவ நிபுணர், முதலில் வந்து கொலையுண்டு போகும் தம்பதியினர், அவர்களின் குழந்தை, குழந்தையைக் கடத்தி செல்லும் வெள்ளைக்காரப் பெண்மணி, மூளை அறுவை சிகிச்சைக்காக வரும் சிறுமி, அவளின் பெற்றோர்கள், தென்றல் பத்திரிக்கையின் குழு, போட்டி நிருபிணி(?), சர்ஜரிக்காக அமெரிக்கா வரும் தமிழ்ப்பட ஹீரோ தரன், என்று இணைப்பாத்திரங்கள் கதை நகர்த்திகள்!

நடித்தவர்கள் எல்லோருமே புதுமுகங்கள், என்பதுடன் படத்தயாரிப்பிலும் பங்களித்திருக்கிறார்கள். இயக்குநர்களான நாட்டிகுமாரும், க்ரிஷ் பாலாவும், இணை இயக்குநர் நாராயனும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். செயற்கைத்தனம் இல்லாத இயல்பான நடிப்பு. மிகவும் தேர்ந்த நடிகர்களே இறுக்கமான உணர்ச்சிகளை காட்டும்போது, சமயங்களில் கேலிக்கூத்தாக ஆகிவிடுவது உண்டு. ஆனால், இந்த மூவர் கூட்டணி அதிலும் சாத்திருக்கிறது. க்ரிஷ் பாலாவுக்கு கதாநாயக பாத்திரம் கொஞ்சம் “ஓவர்லோட்”-தான். சில இடங்களில் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும், நிறைய இடங்களில் அளவாக நடித்திருக்கிறார்.

அனுஷாவுக்கு அழகான, துறுதுறுவென்னும் முகம், துள்ளலான உருவம் என்றிருந்தாலும், நடிப்பில் ஒரு செயற்கைத்தனம், நம்பகமின்மை தெரிகிறது. தங்கள் நடிப்பில் கவனம் செலுத்திய இயக்குநர்கள் சக நடிகர்களின் மீது சரியான கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவோ, வெளியீட்டாளராகவோ வரும் நபர், நன்றாக தமிழ் பேசுபவராக இருந்திருக்கக் கூடாதா?

உளவியல் சார்ந்த திரில்லர்கள் எடுப்பதற்கு, நல்ல பரந்த,, ஆழ்ந்த படிப்பும், புரிதலும், ஆராய்ச்சியும், நம்பத்தகுந்த கதைக்கோர்வையும் தேவை. இவைகள் எல்லாமே இக்குழுவிடம் இருக்கிறது என்று தெரிகிறது.

கதை என்ன? மூச்! முழுவதும் சொன்னால் மெய்ப்பொருளைக் காண்பது எப்போது…! நன்றாகப் படித்தவர்கள் கூட சில சமயங்களில் தங்களுக்கு வரும் செய்திகளை, செய்தியின் நம்பகத்தன்மை, சொல்பவரின் நம்பகத்தன்மை, என்று ஆராயமல் அப்படியே நம்பிவிடுவதால் விளையக்கூடிய விபரீதங்களை சுட்டுவதே இக்கதையின் அடியிழை!

மீதியை “வெள்ளித்திரையில் காண்க” என்பதைவிட முழுவதுமே வெள்ளித்திரையில் காண்க!

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” –

வித்தியாசமான முயற்சி என்பதாலேயே, சில குறைகள் இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி!

ஸான் ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிற க்ரிஸ் எல்ரிட்ஜ், பின்னணி இசையமைத்திருக்கும் ஜான் மஸே, படத்தொகுப்பு செய்திருக்கும் B.லெனின் எல்லோருமே, படத்தின் தொய்வில்லாத கதை நகர்வுக்குக் காரணம்! பாடல்கள் இல்லாத தமிழ்படமா? இதிலும் உண்டு.. ஆனால் ஆங்கிலப் படங்களைப் போல பின்னணி இசையாக மட்டுமே சேர்த்திருப்பதும், மாண்டேஜாகக் காட்சிகளை அமைத்திருப்பதும் வித்தியாசம்தான்..!

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஸேன்ஹோஸேயில் ஐஎம்ஸீ-6 திரையரங்கில் வெளியிடப்பட்ட முன்னோட்டக் காட்சிக்கு குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் என்று நல்ல கூட்டம். இந்தப்படம் சென்னை போன்ற மாநகரங்களில் கட்டாயம் வெற்றி பெறும் சாத்தியக்கூறு உள்ளது.

இந்த படத்துக்கான விழுக்காடு என்று பார்த்தால் 70% கொடுக்கலாம்!

ஏப்ரல் 25, 2009

மென்பொருள் தேசத்திலிருந்து “மெய்ப்பொருள்”



[மெய்பொருளைப் பார்ப்பதற்கு முன்பு செய்தி முன்னூட்டமாக எழுதியது.. நேற்றுதான் படத்தின் முன்னோட்ட வெள்ளோட்டம் ஸான் ஹோசேயில்! விமரிசனம் விரிவாக கூடிய விரைவில்!)


சாதிக்கும் வெறியும், அயர்ச்சி இல்லாத முயற்சியும், உறுதியான வெற்றிக்கான கூட்டணி! ஸிலிக்கன் வேலியின் மென்பொருள் என்ஜினீயர்களாக இருக்கும் நாட்டி (நடராஜன்) குமாரும், க்ரிஷ் பாலாவும் இணைந்து தொடங்கிய ‘ட்ரீம்ஸ்-ஆன்- ஃப்ரேம்ஸ்’ திரை நிறுவனத்துக்கும் இந்த வெற்றி நிச்சயமே! அவர்கள் இருவரும் இணந்து தயாரித்து, இயக்கியுள்ள, அமெரிக்காவிலேயே முற்றும் தயாரான முதல் தமிழ் படம் என்கிற முத்திரையுடன் வருகிறது “மெய்பொருள்”. நாராயண் சுந்தர்ராஜன், இணையாக இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே “ஸான் ப்ரான்ஸிஸ்கோ” வளைகுடாப் பகுதியைச் சார்ந்தவர்கள்.

வள்ளுவரின் திருக்குறள்களான “ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” மற்றும் “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பவை எல்லோரும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைக்கானவை.

இத்திரைப்படத்தின் உண்மையான பொருள்கூட மேற்கண்ட கருத்தை, தமிழ்த்திரை கண்டிராத கதை இழை, மற்றும் திரைக்கதை அமைப்பினால், மிகவும் நேர்த்தியாக, சொல்லியிருப்பதில்தான் இருக்கிறது.

இந்த முழுநீள திரைப்படம், புலம்பெயர்ந்த இந்தியர்களை, வழக்கமான முத்திரைகுத்திய, வார்ப்புகளில் காட்டாது, ஒரு நேர்த்தியான மனோதத்துவ த்ரில்லராக வெளிவந்திருப்பது, ரசிகர்களை தங்கள் இருக்கைகளின் விளிம்புகளில் உட்கார வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

டாக்டர்களும், இன்ஜினியர்களும், விஞ்ஞானிகளுமாக பல்வேறு தொழில்களில் வெற்றிகரமாக இருப்பவர்கள், தொழில்ரீதியான திரைபடக் கலைஞர்களோடு இணந்து, ஒருவருடத்துக்கும் மேலாக, உழைத்து உருவாக்கியுள்ள படம், “மெய்ப்பொருள்”.

“மோகமுள்” தயாரிப்பாளரான டி.ஜானகிராமினின் மகனான நாட்டி குமாரும், க்ரிஷூம் இயக்கம்(பெர்க்லியில்), மற்றும் படத்தொகுப்பும் பயின்றவர்கள்.

அப்படிபட்ட வித்தியாசமான கதைக் களன்தான் என்ன?

“ஸாம்” (க்ரிஷ் பாலா) ஒரு வெற்றிகரமான “ந்யூரோ சர்ஜன்”, தன் மனைவி (அனுஷா) தேவியுடன் (தென்றல் மாத இதழின் நிருபர்) மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்கள் வாழ்வில், அவர்களுடைய பழைய நண்பர்களான விஸ்வா, சஷி, லக்ஷ்மியும் (நாரயண் சுந்தர்ராஜன், ரித்து பார்க்கவா, ராணி), புதிய அறிமுகங்களாக தரணும், ராஜனும் (சுரேன் விஜயகுமார், நாட்டி குமார்) நுழைகிறார்கள்.

தேவியின் தொழில்முறை போட்டியான சஷி, வேலிக்கும் காவல், ஓணானுக்கும் சாட்சியான விஸ்வா, வரப்போகும் சிக்கல்களை முன்னதாகவே ஆருடம் போல் கூறும் வானவியல் நிபுணர் ராஜன், பிரபல நடிகர் தரன், இவர்களின் நுழைவு, ஸாம், தேவி இவர்கள் உறவிலே உரசல்களயும், விரிசலையும், விளைவிக்கின்றன. ஆருடங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு, உண்மைகளாகும் போது, ஸாம், யாரை நம்புவது என்றும், அவன் வாழ்க்கையில், மேலும் என்ன விபரீதங்கள் நடக்கும் என்றும் தெரியாமல் தவிக்கிறான்.

அவன் யாரை நம்புவான்..? நட்பா? குடும்பமா? உறவுகளா? உடன் பணிபுரிபவர்களா? ஸாம், உண்மை, கற்பனை இவற்றில் வித்தியாசம் காண முடியாமல் தவிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு முடிவும் இன்னும் சிக்கலை உண்டு பண்ணுகின்றன. நேரம் கடந்து, நிலைமை கை மீறுவதற்கு முன்பு அவன் இந்த சிக்கல்களை விடுவிக்கவேண்டும், அவற்றிலிருந்து விடுபடவேண்டும்!

வழக்கமான சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள், ஐட்டம் நடனங்கள், திணிக்கப்பட்ட, கதைக்கு சம்பந்தமில்லாத நகைச்சுவைக் காட்சிகள், மரங்களை சுற்றும், சமவெளிகளை அளக்கும், வெளி நாடுகளை வீடியோ சுற்றுப்பயணமாக அழைத்துச்செல்லும் கதா நாயக நாயகிகளின் காதல் பாடற்காட்சிகளும் தவிர்க்கப்பட்டு, நுண்ணிய புரிதலோடும், புத்திசாலித்தனமான கற்பனைகளோடும் அமைந்திருக்கும் இறுக்கமான, “நச்” கதைச்சொல்லுதல், தமிழ் திரைத்துறைக்கு வித்தியாசனமவைதான்!

கலிஃபோர்னியாவைச் சுற்றியுள்ள இடங்களில், எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் பல்வேறு இந்தியர், அமெரிக்கர், ஆப்ரிக்கர், ஆசியாவினர், லாட்டினோக்கள் என்று பல இனத்தவர்களும், பங்குபெற்றுள்ள படம்!

சென்னை திரை உலகின் சிறந்த எடிட்டர்களுள் ஒருவரான B.லெனின், இப்படத்தை எடிட் செய்திருப்பதுடன், ஹாலிவுட்டைச் சார்ந்த க்ரிஸ்டோபர் எல்ட்ரிட்ஜ் (சினிமாட்டோக்ராபி), ஜான் மேஸே (பின்னணி இசை) போன்றவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.

திரையில் சுமார் 120 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு (எதி நிஜம்?) , ஒரே சமயத்தில் வெளியிடப்படுகிறது. யூ.எஸ்.ஏ-வில், ஏப்ரல் 24-ம் தேதியும், சென்னையில் மே 1-ம் தேதியும் வெளியிடப்பட இருக்கிற “மெய்ப்பொருள்”, உண்மையிலேயே, தமிழ் திரையுல வரலாற்றின் மற்றுமொரு மைல்கல்!


படத்தைப்பற்றிய விவரங்களுக்கு: www.meipporulthemovie.com

ஏப்ரல் 15, 2009

சமீபத்தில் நான் ரசித்தவை

எனக்கு மிகவும் பிடித்த ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் 70களின் பிரபலமாயிருந்த பஞ்சாப் ஷாம்சௌராஸி கரானாவைச் சார்ந்த உஸ்தாத் சலாமத்-நஸாகத்கான்சகோதரர்கள். என்னுடை 12 வயதிலிருந்து அவர்கள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சலாமத்கானுக்கு மிகவும் கனமான நினைத்தைப் பேசக்கூடிய சாரீர வசதி. விளம்பம், மற்றும் துரிதகால சங்கதிகளில் சிறிது கூட பிசிறு தட்டாமல், துல்லியமான அதிரடி ரவை, பிருகாக்களுடன் கூடிய சங்கீதம். நஸாகத், சன்னமான, ஆனால் அதிவேக சங்கதிகளை உதிர்க்கும் சாரீர வசதி.. மூன்று ஸ்தாயிகளிலும் சிறிதுகூட பிரயாசைபடாமல் சஞ்சரிக்கும் லாவகம்.. கிடுகிடுவென்று உச்சஸ்வரங்களை எட்டுவதும், பங்கீ-ஜம்ப் என்பதுபோல் அதல பாதாளத்துக்கு குதிப்பதும் இவருடைய பிரத்தியேக பிரயோகங்கள். சத்தியமாக எனக்குத் தெரிந்து எந்த இசைக்கலைஞர்களும் இதுவரை சாதிக்காதவை. உண்மையிலேயே பிரமிப்பூட்டும் சங்கீத ஸாம்ராட்டுகள்தான். 80களில் நஸாகத்தும் (இளையவர்), 90களின் இறுதியில் சலாமத்தும் மறைந்த பிறகும், அவர்களது இசை இன்னும் அவர்களது ரசிகர்களின் இதயங்களில் வாழ்கிறது.
ஈ.எம்.ஐ ரெகார்டுகளில் 70களின் வெளிவந்த அவர்களது ஆபோகி கானடா, காவதி, மிஸ்ரகமாஜ், மார்வா, பூர்யாதனஸ்ரீ போன்ற ராகங்கள் இன்னும் காதுகளிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
யூ-ட்யூப் வந்த பிறகு, பலருடைய சொந்த சேகரிப்பிலே இருந்த பல அரிய ஒலி நாடாக்களும், வீடியோக்களும், சக ரசிகர்களை சென்றடைய வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நான் மூழ்கி எடுத்த முத்துக்கள் இதோ…!
நீங்களும் கேட்டு மகிழலாம்..!
http://www.youtube.com/watch?v=2cuVbGC94QM - சலாமத்-நஸாகத் - பாகேஸ்ரீ
http://www.youtube.com/watch?v=N2cecpeCTbA&feature=related
- சலாமத்கான் – பதினோரு வயது வயதில் பாடியது
http://www.youtube.com/watch?v=aTj451U7pYI&feature=related – உஸ்தாத் சலாமத், நூர்ஜஹானுடன் – மொஸீகர் படத்தில் பாடியது
http://www.youtube.com/watch?v=A1z_xs_gC-8&feature=related - உஸ்தாத் சலாமத், நூர்ஜஹானுடன் – மொஸீகர் படத்தில் பாடியது - ஜூகல்பந்தி
http://www.youtube.com/watch?v=KGz18qTELCg&feature=related
http://www.youtube.com/watch?v=b2L67CMnOy8&feature=related - ப்ரத்யேக ரசிகர்கள் -1
http://www.youtube.com/watch?v=5NwiIqxnj-s&feature=related - ப்ரத்யேக ரசிகர்கள் -2

http://www.youtube.com/watch?v=yFdfH1Bq8Wo&feature=related - சலாமத்-நஸாகத்
http://www.youtube.com/watch?v=c7GErB3UTj0&feature=related
http://www.youtube.com/watch?v=Vq1ePCUFIfY&feature=related
http://www.youtube.com/watch?v=Lj14mFPg89E&feature=PlayList&p=D35C48610B138B89&playnext=1&playnext_from=PL&index=12
http://www.youtube.com/watch?v=n58YSW3I-PY&feature=related
http://www.youtube.com/watch?v=j_aKD2DODgg&feature=related
http://www.youtube.com/watch?v=wxW3wFGfQEc&feature=related

எனக்கு பிடித்த உஸ்தாத் அமீர்கான், உஸ்தாத் ரஷீத்கான், கிஷோரி அமோங்கர், ஷோபா குர்த்து, ராஜன் – சாஜன் சஹோதர்களைப் பற்றியும் அவர்களின் சங்கீத சிகரங்களைப் பற்றியும் பின்பு எழுதுகிறேன்..

க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை – மீண்டுமொரு பார்வை.

சில சமயங்கள் நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளும், நம்பிக்கைச் சார்ந்த எண்ணங்களும், நம்மை உண்மைகளிலிருந்து விலக்கி, திரிந்த நோக்கினையும், அபிப்பிராயங்களையும் தந்துவிடும். திங்களன்று, கலிஃபோர்னியாவுக்கு வந்த பிறகு, ஐந்து நாட்களின் அலைச்சல், சாப்பாடு காரணமான சங்கடங்கள், உளைச்சல்கள் தந்த அயர்வுகள் அகன்றபிறகு, மனமும், உடலும் ஒரு நிலைக்கு சமன் ஆகியிருக்கிறது. சங்கீதத்தின் சிறப்பு என்னவென்றால், எந்த வித உணர்ச்சிகளின் உச்சமும், வெளி விளிம்புகளும், நொடிகளில் சமனாகி விடுகின்றன. நான், எனது என்கிற எண்ணங்களிலிருந்து விலகி, விஷயம், விஷய-சாரம் என்கிற அளவிலே மனம் திரும்பிவிடுகிறது.

என் பெண், என் பெண் சார்ந்த இசைப் பள்ளி, நானும் ஒர் இசையாசிரியன் என்கிற வட்டங்களிலிருந்து விலகி வந்து பார்க்கும் போது, நிரவல், கல்பனா ஸ்வர போட்டிகளின் நடுவர்களின் எண்ண ஓட்டங்களும், அவர்களுடைய குடைசலான கேள்விகளின் பின்புலமும் ஓரளவுக்கு தெளிவாகின்றன. உண்மையிலேயே, இந்த வருடம் கடுமையான போட்டிதான்! ஸப்-ஜூனியர் தொடங்கி, ஸீனியர் வரைக்கும், எல்லாதரப்பிலும், அபரிமிதமான திறமைசாலிகள், உழைப்பாளிகள். இவர்களில் சல்லடைப் போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால், அது கட்டாயம் கடினமான காரியம்தான் நடுவர்களுக்கு. நான் ஏற்கனவே சொல்லியிருந்தால் போல, சில நடுவர்களின் துடுக்கான விமரிசனங்களும், கிண்டலான, தன்மானத்தை தூண்டிவிடுகிறார் போல பேச்சும், போட்டியின் அங்கமாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்டத் தாக்குதல்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

தவிரவும், அவர்களும் சாதாரண மனிதர்கள்தான், கடவுளர்கள் அல்லர். எல்லோருக்கும் நடந்தவைகளிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமானால், அவர்களுக்கும் அது முடியும். இளமை இரத்தம், புகழ், தொழில் வெற்றி என்பவை எத்தனையோ பேரை என்னவெல்லாமோ செய்ய வைக்கும்போது, இதெல்லாமும் கடந்து போம்.

நான் நண்பர்கள் இரவி கிரணிடமும், சந்தான கோபாலன், மற்றும் சௌமியாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்கள் எல்லோரும், சொன்னதும் இதுதான். யாரிடம் அதிகம் எதிர்பார்த்தார்களோ, அவர்களையே அதிகம் குடைந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு கச்சேரி வித்வானாக, விதூஷியாக பரிமளிக்க வேண்டுமென்றால், அதற்கு வித்தை தெரிந்தால் மட்டும் போதாது, துரிதமாக, உறுதியாக, புத்திசாலிதானத்தனமாக, பதட்டமில்லாமல் சவால்களை, போட்டிகளினை எதிர்நோக்கும் திறமை வேண்டும். இல்லாவிட்டால் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கச்சேரிப் போட்டியில் வென்ற இளைஞர் வருண் கணேசன் அப்படியொன்றும் குற்றமில்லாத பாடகர் இல்லை. இருந்தாலும், அவருடைய துரிதமான எதிரடிகளும், மிகவும் நம்பிக்கையோடு கூடிய வெளிப்பாடும், உடனுக்குடன் நிலைமைக்கு தன்னை சரி செய்துகொள்ளும் போக்கும், நிச்சயமாக பாராட்டத் தக்கவைதான். கட்டாயம் அந்த பரிசுக்குத் தகுதியானவர்தான். அவருக்கு பெரிய எதிர்காலம் இருப்பதை, அவருடைய கண்களில் இருக்கும் தேடலும், நெருப்பும், அவர்தன்னை மேடையில் நிர்வகித்துக்கொள்ளும் பாங்கும் உறுதிப்படுத்துகின்றன.

கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம்.. ஹூஸ்டனைச் சேர்ந்த திருமதி ராஜராஜேஸ்வரி பட் அவர்களின், பள்ளியின் மிகவும் ஸூஸ்வரமான, ஞான பூர்வமான சிறுவ சிறுமியரின் குழுவிசைதான். சிறந்த பள்ளிகளுக்கான போட்டியில், 13ம் தேதி (திங்களன்று) இந்த பள்ளியும், ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியின் ஸாரடோகாவைச் சார்ந்த திருமதி. அனுராதா ஸ்ரீதர் அவர்களின் குழுவும் முதல் கட்டமாகப் பங்கேற்றன. முதலில் பாடிய ராஜராஜேஸ்வரி குழுவினரில் பாடிய அவருடைய புதல்விகள் கீர்த்தனா, க்ருதி பட் இருவரும், நல்ல முதிர்ந்த இசைப் பயிற்சியும் ஞானமும் பெற்ற சிறுமிகள். குறிப்பாக, க்ருதி பட் நல்ல அழுத்தமான சங்கீதமும், ஸ்ருதி சுத்தமும், அபரிமிதமான தன்னம்பிக்கையுடன் பாடுகிறார்.

திருமதி. அனுராதா ஸ்ரீதர் பற்றியோ கேட்கவே வேண்டாம். நிதானமான, ஆழமான, காதுகளை நிறைக்கும் லால்குடி இசைப் பாரம்பரியம். ஒருவர் கூட சோடைபோகாத ஒத்த இசை வெளிப்பாடு. தேர்ந்த விதூஷியான அவர் வயலின், வாய்ப்பாட்டு, விசில் என்று ஒரு அசத்தலான குழுவையே தயார் படுத்தியிருக்கிறார். உமையாள் புரம் சிவராமனின் தயாரிப்பான விக்னேஷ் வெங்கட்ராமனின் ம்ருதங்க வாசிப்போடு, இந்த குழுவின், பைரவி ராக முருகன் மீது அமைந்த லால்குடி ஸ்ரீ கோபாலய்யரின் க்ருதியும், கல்யாணியில் தீக்ஷிதரின் கமலாம்பாவும், லால்குடி ஸ்ரீ ஜெயராமய்யரின் பஹாடி தில்லானா என்று ஒரே ஆற்றொழுக்காக அமைந்த ஸூஸ்வர சௌந்தர்ய லஹரி (இன்னிசை அழகு வெள்ளம்). வாய்பாட்டிலும் அசத்திய ஸ்ருதி/ஜெயஸ்ரீ சாரதி சகோதரிகள், அபூர்வா முரளி, ஹரிணி ஜெகந்நாதன் மற்றும் வயலின் பக்க பலமான பார்த்திவ் மோஹன், விசிலிசை வித்தகன் நரேன், மாயா, நயந்தாரா, அனன்யா என்று மிகவும் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, குழு.

இன்னும் ஒரு பள்ளி இருக்கிறதாம், வரும் வெள்ளிக்கிழமையன்று போட்டியிட. எத்தனையோ திறமைகள் எங்கெல்லாமோ கொட்டிக்கிடக்கின்றன. இசையென்றால் சென்னை என்கிற ஏகபோக உரிமை மெல்ல மெல்ல, ஆனால் நிச்சயமாக இழக்கப்படும். அது நல்ல மாற்றம்தான். இசைக்கு எல்லைகள் கிடையாது, கூடவும் கூடாது…!

ஏப்ரல் 12, 2009

முடிவதெல்லாம் தொடர்ந்துவிட்டால்.. (சிறுகதை)

‘கிருஷ்ணவேணி'.. சுந்தரத்தமிழில், ‘கார்குழலி!'... ஆஹா.. என்ன அற்புதமான பெயர்..? இந்தக் கதையின் நாயகியும் ஒரு அற்புதமான பெண்மணிதான்..!

புதுமைப்பெண், புரட்சிப்பெண் என்ற அடைமொழிகளெல்லாம் இல்லாத, அதேசமயத்தில், மௌனமும், அழுத்தமும் கலந்த பார்வையும், இருகண்விழிகளிளாலேயே, எதிரிலிருப்போரை மில்லிகிராம் துல்லியத்திற்கு எடைபோடக்கூடிய திறமையும் கொண்டவள்.

தெளிவான சிந்தனை, மேல்பூச்சு இல்லாமல், எவருக்காகவும் உண்மைகளை மாற்றாமல், உள்ளதை, உள்ளபடியே உரைக்கின்ற நெஞ்சத்துணிவு, அதேசமயத்தில் அசட்டுப் பிடிவாதங்கள் இல்லாத உண்மையான பெண்மணி..! கலியுக ஔவை என்று சொல்லக்கூடிய அறிவு முதிர்ச்சி.

ஐ.ஐ.டி-யில், எம்.டெக் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனமொன்றில், டிசைன் இன்ஜினீயரிங் மேனேஜராக பணிபுரிகிறாள்.

கல்யாணமாகி, ஒரு 10 வயது பெண்ணுக்குத் தாயாக இருந்தபோதிலும், வயதை சிறிதும் காட்டாத ஆட்ரே ஹெப்பர்ன் போன்ற உடல் வாகு.

கல்யாணமாகி, கௌரவான குடும்பத்தலைவியாக இருப்பதால், விவரமாக வருணிக்க முடியாவிட்டாலும், பார்ப்பவர்கள் மறுமுறை திரும்பிப்பார்க்கக் கூடிய ஒரு 'பர்ஸனாலிட்டி'. அளவான பேச்சு, அமைதியான முகம்....

எல்லாம் இருந்தும், இவள் வாழ்க்கையில் எதோ ஒரு நிறைவின்மை..!

அவளுடைய கணவன் ஷ்யாம், கண்ணுக்கு நிறைவானவன், அதி புத்திசாலி, அவனும் இன்ஜினீயரிங் டைரக்டராக, ஒரு சா•ப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான்.

மற்றவர்களுக்குத் தெரியும்படியாக ஒரு குறைவும் இல்லைதான். ஆனால், மிகவும் உள்ளார்ந்த மனிதன். எவரையும் சுலபமாக நம்பிவிட மாட்டான்.

தான், தன் மனைவி, தன் குழந்தை இவர்களைத்தவிர மற்றவர்களோடு உறவெல்லாம், வெறும் உதட்டளவில்தான்..! தன் மனைவி, தன் நண்பர்களோடு பேசுவதைக் கூட விரும்பாதவன்.

இவ்வளவு ஏன்...? கார்குழலி, தன்னுடைய, நெருங்கிய உறவினர்களோடு சிறிது அதிகமாகப் பேசுவதைக் கூட பொறுக்கமுடியாதவன். கார்குழலி தன் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதைதான் விரும்பினான்.

கார்குழலிக்கு, ஷ்யாமுடைய வியாபார நிமித்தக் குடிப்பழக்கம், புலால் உணவுப்பழக்கம் இவைகள் எல்லாம் பிடிப்பதே இல்லை. எப்போதும், எல்லா விஷயங்களிலும், தானே விட்டுக்கொடுப்பது, அவளுடைய ஔவை அறிவுக்கும், தன்மான உணர்வுக்கும் சம்மதமாக இல்லையென்றாலும், சுற்றம், தாய் தந்தையர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, ஷ்யாமின் பிற நல்ல குணங்களைமட்டும் பாராட்டிக்கொண்டு, தன் கல்யாண வாழ்க்கையை சீராக நடத்திக்கொண்டிருந்தாள்.

ஷ்யாமுக்கு, கார்குழலி, படித்த பத்தாம் பசலி என்னும் எண்ணம்.. தனக்கு சமமாக, அலுவலகப் 'பார்ட்டி'களில், கார்குழலியும் ஒரு 'கம்பெனி'க்காகக் கூட குடிப்பதில்லை, புலால் உணவு சமைக்கும் விடுதிகளில் நுழைவதுகூட இல்லை என்கிற வருத்தம் ஒருபுறம்.

தேவையில்லாத, உறவுகளையும், நண்பர்களையும் கொண்டாடி, தனக்கு மட்டுமே சொந்தம் என்னும் தன் எண்ணத்தை அலட்சியப்படுத்துகிறாள் என்னும் கோபம் மறுபுறம்.

வெளித்தோற்றத்தில், பொருத்தமான தம்பதியரைப் போல இருந்தாலும், இவர்களுக்குள்ளாக, எத்தனைப் மனத்தாங்கல்கள்..? பனிப் போர்கள்..? எத்தனை நெஞ்சுவரை வந்து அடக்கப்பட்டு, அடைக்கப்பட்டுள்ள குமுறல்கள்..?

போன மே மாதம், ஒருநாள் மாலை நேரம், வேலையிலிருந்து வீடு திரும்பி கொண்டிருக்கிறாள் கார்குழலி.

ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தன் வீட்டுக்கு ஜெமினி முக்கிலிருக்கும் அலுவலகத்திலிருந்து, கதீட்ரல் சாலை வழியாக கார்குழலி, மதியம் நடந்த 'டிசைன் மீட்டிங்கைப்' பற்றி சிந்தனையில் ஆழ்ந்துகொண்டே தன் காரை ஓட்டிக்கொண்டே வர, ஸ்டெல்லா மேரீஸ் அருகில் திடீரென்று, 'ஸ்க்ரீச்'சிட்டு நிறுத்தினாள்..

மனம் எங்கோ இருந்தாலும், கண்கள் சாலையில் இருந்ததால், எதிரே வந்த '•போர்ட் ஐகான்' தன் காரை உரசும் அருகில் இருப்பதை கணநேரத்தில் ஊகித்து ப்ரேக் போட்டதில்தான் 'ஸ்க்ரீச்'. எளிதில் கோபப்படாத கார்குழலிக்கு, ஏகப்பட்ட எரிச்சல்.. கோபம்..! காரை விட்டு இறங்கி, நாலு வார்த்தைகள் சூடாக பேசிவிடுவது என்ற தீர்மானத்தோடு இறங்கியவளுக்கு, எதிரில் வந்த காரிலிருந்து அதே தீர்மானத்தோடு இறங்கிய ஆளைக் கண்டதும், ஆச்சரியம்..துக்கம்..சந்தோஷம்..!

எதிர்காரிலிருந்து இறங்கிய ஆளுக்கும்... துக்கம் நீங்கலாக மற்ற இரண்டும் இருந்ததை, அவன் கண்களும், அகண்டு நீண்ட அவன் வாயும் சொல்லின.

"ஹே ஜெயந்த்"..நீ எப்படிடா இங்க..? ஸாரி.. நீங்க எப்படி..." என்று தடுமாறினாள் கார்குழலி..

"கார்குழலி... நீ எப்படி இங்க..! யூ.எஸ்-ஸிலிருந்து எப்ப வந்த..? ஸச் எ ப்ளஸென்ட் ஸர்ப்ரைஸ்..! சரி.. சரி.. நடு ரோட்டில இருந்து காரை எடுத்துருவோம் வா... ஹேய்..காரைத்திருப்பி, உட்லண்ட்ஸ் வரைக்கும் வரமுடியுமா..? கொஞ்சம் கா•பி குடிச்சிண்டே பேச டைம் இருக்குமா..?".....

மூச்சுவிடாமல் பேசும் அழகிலிருந்து இவர் இன்னும் மாறவில்லையே என்று எண்ணிக்கொண்டே, "ஜெயந்த்...இத்தன வருஷம் கழிச்சு உங்களப் பாக்கறதில ரொம்ப சந்தோஷமா இருக்கு...! ஆனா.. நான் ரொம்ப அவசரமா போயிண்டிருக்கேன்..! 6.30 மணிக்கு, என் பொண்ணை டான்ஸ் க்ளாசுக்குக் கூட்டிண்டு போகணும்..' உங்க டெலிபோன் நம்பரக் கொடுங்களேன்.. நான் நாளைக்கு கூப்பிடறேன்...", கார்குழலி குரலில் அவசரத்தைக் காட்டினாள்...

"வேணாம் வேணி.. உன் நம்பர நீ குடு.. நானே உன்னக் கூப்பிடறேன்.. நம்ப கடைசியாப் பாக்கும் போது, இதோ கூப்பிடறேன்னு சொல்லிட்டு, கூப்பிடவே..ல்லியே நீ..!

கிண்டலும், அதே சமயம் குரலில் வருத்தத்துடனும் ஜெயந்த் சொன்னதை உணர்ந்தாலும், ஒரு தளர்வான புன்னகையை மட்டும் பதிலாக உதிர்த்துவிட்டு, "சாரி.. ஜெயந்த்.. அது ஒரு கதை..! உனக்கு சொன்னாப் புரியாது.. ப்ளீஸ்.. என்னோட ஆபீஸ் நம்பரை எடுத்துக்கோ..! நாளைக்கு, என் லன்ச் டைம்ல கூப்பிடு..! இவ்வளவு நாள் கழிச்சுப் பாக்கறோம்.. ! ஆனா, அவசரமா ஓட வேண்டியிருக்கு.. ப்ளீஸ்.. நாளைக்கு கண்டிப்பா கூப்பிடு" என்று நம்பரைச் சொல்லிவிட்டு, அவசரமாகக் காரில் ஏறி காரைக் கிளப்பினாள் வேணி...

அவள் கார் சென்ற திக்கைப் வெறித்துப்பார்த்து கொண்டிருந்த ஜெயந்த்.. பின்னால் நிற்கும் கார் கூட்டத்தின் காதைப் பிளக்கும் ஹார்ன்களின் சத்தத்தால், சுய நினைவுக்கு வந்து தன் காரை நோக்கி நகர்ந்தான்...

மறுநாள், லன்ச் டைம் எப்போது வரும் என்று காத்திருந்து, சரியாக 12.30 மணிக்கு, டெலிபோன் டயலில் கார்குழலியின் எண்களைச் சுற்றி, ரிசீவரைக் காதில் வைத்துக்கொண்டே, ஒரு நெடியமூச்சுடனும், உடம்பு பரபரப்புடனும், மறுமுனையின் குரலுக்கு காத்திருந்த அந்த விநாடிகள் மிகவும் மெதுவாக நகர்ந்தன.

"திஸ் ஈஸ் கார் ஹியர்... ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ..?" வருவித்துக் கொண்ட அமெரிக்க உச்சரிப்பு தூக்கலாக இருந்தாலும், ஜெயந்த்துக்கு, கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை.

"என்ன கார்குழலி..? ஆக்ஸென்ட் எல்லாம் பலமாயிருக்கு? நான் தான் ஜெயந்த், அதுக்குள்ள லன்ச் டேட்-ஐ மறந்தாச்சா..?"...நான் எப்ப உன்னப் பாக்கலாம்..?

ஜெயந்த்.. நான் உட்லண்ட்சுக்கு லன்ச்சுக்கு போகலாம்னு இருக்கேன்.. உன்னால வரமுடியுமா..? நீ எங்க இருக்க..?

ஹேய்.. நான் ரொம்ப தூரமில்ல.. இங்கத்தான்.. ஹாடோஸ் ரோட்டிலதான்.. 'ஐ வில் பீ தேர் இன் •பி•ப்டீன் மினிட்ஸ்... வெய்ட் பண்ணமுடியுமா..?'

சிறிது நேரத்துக்குப் பின் கார்குழலியின் கம்பெனி லாபியில் பிரசன்னமான கார்குழலியும், ஜெயந்தும், காரில் ஏறி, ட்ரைவ்-இன் உட்லண்ஸ்-ஐ நோக்கிச் செல்லும் வழியில்...

"ஸாரி.. ஜெயந்த், கொஞ்சம், ப்ரபோஸல் அனுப்பவேண்டிய அவசரத்தில, டைம் போனதையே கவனிக்கல..!. ஸோ.. உட்லண்ட்ஸ் பரவாயில்லையா..?"

முகத்தில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டே, தலையை ஒரு பக்கமாக சாய்த்துக் கொண்டே கேட்ட கார்குழலியையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயந்த்,

'வேற எங்க போகறது கார்குழலி..? நீதான், காலில வெந்நீர் கொட்டிண்டா மாதிரி, இரண்டு மணிக்குள் போகணுங்கறயே..! இப்பவே மணி ஓண்ணாகிறது.. சாப்பிட்டுட்டு போகறதுக்குத்தான் டைம் சரியாக இருக்கும்...உட்லண்ஸே போகலாம்..'

உட்லண்ஸில் இறங்கி இரண்டு தக்காளி பாத்தும், காபியும் ஆர்டர் செய்துவிட்டு, பெருமூச்சு வாங்கிக் கொண்டு, கார்குழலியைப் பார்த்து... கொஞ்சம் கூட நேரத்தை கடத்தாமல், பளிச்சென்று கேட்டுவிட்டான்..!

'சொல்லு... கார்குழலி.. எங்க இருந்த இத்தன நாளா..? அப்படி, கான்டாக்ட் கூட பண்ணமுடியாத அளவுக்கு என்ன நிர்பந்தம்..? கடைசீயா நம்ப பாத்து, பேசி பத்து வருஷம் இருக்குமா..? உன்னால எப்படி இந்தமாதிரி இருக்க முடிஞ்சுது..?'... ஜெயந்த் எப்போதும் போல சரமாரியாக கேட்டுக்கொண்டே போக...

'டேபிளில் மேல் தன் கைகளை வைத்துக் கொண்டு, அவற்றையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கார்குழலி... நிமிர்ந்து ஜெயந்தைப் பார்த்தாள்... அவள் கண்களில் நீர் பூத்திருந்தது...!

'ஹேய்.. ஜெயந்த் ஸாரியா..! உன்னக் கூப்பிட முடியாதபடி நிர்பந்தம்...! அவருக்கு அவ்வளவா பிடிக்கலை, அப்போது....! இப்பவும், பெரிசா மாறல்ல..! அவருக்குன்னு ஒரு சின்ன வட்டம் இருக்கு ஜெயந்த்... அதில அவருடைய உறவுகள், அவருடைய பெண், தவிர நான் மட்டும்தான், ரொம்பப் போனா.. என்னுடைய அப்பாவும் அம்மாவும் சேர்த்தி... என்னோட பழைய நண்பர்கள், என்னோட 'கஸின்கள்' கூட அந்த வட்டத்துக்குள்ள வரமுடியாது.. வரக்கூடாது...!

என் கல்யாணத்துக்கு அப்புறம் நாம் வெறும் நண்பர்களாகத்தான் பழகினாலும், அது அவரால தாங்கமுடியலய்யா..! நான் என்ன பண்ணியிருக்க முடியும்...? நான் உன்ன (நேற்றைய மரியாதை ஒருமைக்கு மாறிவிட்டது, ஜெயந்துக்கு சரியாகப் பட்டது..!) அப்புறம் கூப்பிடறேன்னு சொன்னதுக்கப்பறம் கூப்பிடாம போனதுக்கும் காரணம் அதான் ஜெயந்த்.. நாம கடைசியா பார்த்த அன்னிக்கு, நாம சிரிச்சி பேசினது அவருக்கு சுத்தமா ரசிக்கல..! வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரே 'லாங் •பேஸ்'.. முகத்தத் தொங்க போட்டுகிட்டு ஒருவாரம் சரியாக்கூட பேசாம, கண்ணாலேயே அடிச்சிருக்கார்..

நானும், கல்யாணமான புதிசானதினாலே..அதத் தாங்காம, என்னுடைய அம்மாகிட்ட சொல்லி அழுதப்போ, எங்கம்மா என்னத்தான் திட்டினா..! உன்னையும் சேத்துத்தான்..! எனக்குத் தாங்கல ஜெயந்த்...அதனாலத்தான் உன்ன கூப்பிடல...என்னால நீ எதுக்கு அவமானப் படணும்..? திட்டு வாங்கணும்..? உன்ன ஏன் மத்தவா ஏதாவது சொல்லணும்.. எங்கம்மாவாகவே இருந்தா கூட..? சொல்லிவிட்டு, ஒரு சிறு கேவலுடன், யாரும் பார்த்துவிடக் கூடாதே என்று, கண்ணைத் துடைத்துக் கொண்டாள்...!

மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜெயந்த், அவள் கண்ணைத் துடைப்பதைப் பார்த்ததும் பதறிப்போய், "ஹேய்.. குழலி...என்ன இது.. ப்ளீஸ்..! ரொம்ப சாரிம்மா..! ஐ ஷ¤ன்ட் ஹேவ் ஆஸ்க்ட் யூ..!முட்டாள்தனமா அந்த கேள்விய கேட்டிருக்கக் கூடாது.. வெரி ஸாரி டியர்..! " என்று கரிசனத்தோடு சொன்னவன், சற்று நேரம் அவள் கண்களையே ஊடுறுவிப் பார்ர்துவிட்டு,...மிகவும் கனத்த மனதோடு, "அப்போ.....நான்.... உன்ன இப்ப பாக்கறது கூட தப்புதான்னு இப்ப நினைக்கிறேன்.." என்று சொல்லி நிறுத்தினான்...!

"அப்படியெல்லாம் இல்ல ஜெயந்த்...நானும் உன்னப் பாத்து பேசணும்னுதான் ஆசைப் பட்டு இங்க வந்திருக்கேன் ஜெயந்த்..! நீ கூட என்னை, மத்த எல்லாரையும் போலத்தான் நினச்சிருப்ப இல்லையா..?.. நான் சொல்றது, உனக்கு முழுசா ஒத்துக்கும்படியாக இருக்கோ.. இல்லையோ..! உண்மை இதுதான்...! பக்கத்திலேயே இருந்து, உன்னப் பாத்து,நானும், என்னப் பாத்து நீயும் வேதனப் படவேணாம்னுதான்.. நானே கத்திரிச்சிட்டேன் ஜெயந்த்... நீ இப்பவாவது, என்ன புரிஞ்சிப்பன்னு, நினைக்கிறேன்...இத உன்கிட்ட எப்பவாவது சொல்லணும்னு நினச்சேன்... சொல்லி, உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு ..." பேசிக்கொண்டே இருந்த குழலியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயந்த்...!

"இந்த பத்து வருஷங்கள் எனக்கு ஒரு தாய்ங்கற கவுரவத்தக் கொடுத்திருக்கு.. ஊரும் ரொம்ப மாறிப் போயிட்டிருக்கு..! இன்னிக்கு நாம இங்க பாத்து பேசறது யாருக்கும் தப்பாவும் படாது.. பட்டாலும், அதை ஹேன்ட்ல் பண்ணக்கூடிய மனோபலம் எனக்கும் இருக்கு...! ஷ்யாமும்.. கொஞ்ச மாறியிருக்கார்ன்னு நினைக்கிறேன்.. அப்படியே இல்லைன்னாலும்.. முன்னே மாதிரி முகத்தை தொங்கப்போட்டுக்க மாட்டார்.."

ஷ்யாமை அவள் விட்டுக்கொடுக்காமல் பேசினாலும், அதில் உண்மை இல்லை என்பது, ஜெயந்துக்கு உடனே புரிந்துவிட்டது,..

ஜெயந்த் அவளை நேராகப் பார்த்து... "லுக் ஹியர் குழலி...நானும் உன் வாழ்க்கையிலேயிருந்து விலகி இருக்கணும்னுதான், உன்னைக் கூப்பிடாம இருந்தேன்..நிறைய சமயங்கள்ள போன் கிட்டப் போய், உன்ன கூப்பிட்டு கொஞ்ச நேரம் பேசலாமேன்னு தோணும்.. ஏதோ ஒரு •பால்ஸ் ப்ரைட்.. தவிர ஒர் ஊகம்.. எதுக்காகவோ என்ன நீ அவாய்ட் பண்ணறயோன்னு..! உன் •ப்ரண்ட் மாலா சொல்லித்தான் தெரியும், நீ அமெரிக்கா போனது கூட..! அவளப் பாக்கறப்போதெல்லாம், உன்னப் பத்தி விசாரிப்பேன்..! கொஞ்சநாளா நானும் அவளப் பாக்கல.. அதானலத்தான் நீ ஊருக்கு திரும்பி வந்ததுகூடத் தெரியாது..! கிடக்கட்டும்..நீ எப்ப திரும்பி வந்த குழலி? இது என்ன தற்காலிக அரேன்ஞ்மென்டா..? திரும்பி அமெரிக்கா போயிடுவியா..?"

குழலி, சிறிது லேசானப் புன்னகையுடன்.. இல்ல ஜெயந்த்.. பெர்மனென்டாத்தான் வந்துட்டோம்..அவருக்கும் இங்கயே நல்ல வேலை.. எனக்கும் நல்லவேலை.. எங்களுக்கு இருக்கறதோ ஒரே பொண்ணு.. அவரோட அப்பா அம்மாவுக்கும் வயசாகிகிட்டே வருதே..! இதனாலத் திரும்பி போகவேண்டாம்ன்னு நினச்சுதான் திரும்பி வந்திருக்கோம்..ஷ்யாமிடத்திலேயும், நிறைய சேன்ஞ் பாக்கறேன்.. அவரோட இந்த பத்து வருட அமெரிக்க வாசம், கொஞ்சம் அவரையும் மாத்தியிருக்கு.. அட்லீஸ்ட்.. அப்படீன்னு தான் நான் நினைக்கிறேன்..!

ஜெயந்த் முகத்தில் 'ஷ்யாமைப்' பற்றி ஏன் இரண்டாவது முறையும், நான் கேட்காமலேயே சொல்லுகிறாள் என்னும் கேள்விக்குறி அப்பட்டமாகத் தெரிந்தது..குழலி அவசர அவசரமாக...

'ஜெயந்த்.. நான் என்னப்பத்தியேப் பேசிக்கிட்டிருக்கேன்.. உன்னப்பத்தி ஒண்ணுமே கேக்கலியே..! நீ எப்படி இருக்கே..? எப்ப கல்யாணம் பண்ணிகிட்டே..? குழந்தைகள் எத்தனை..? உன்னோட வொய்•ப் எப்படி..? உன்னமாதிரியே நிமிஷத்துக்கு முன்னூறு கேள்விகளா..?".. அடுக்கிக்கொண்டே போன குழலியைக் கையமர்த்தி..

"குழலி.. நீ எனக்கில்லன்னு ஆனதுக்கு அப்புறம்.. கொஞ்ச நாள் கல்யாணமே வேண்டாம்னுதான் இருந்தேன்.. அப்பத்தான்.. பார்வதி எங்க ஆபீஸிலே அகௌண்ட்ஸ் டிபார்ட்மென்ட்லே இன்டர்னல் ஆடிட்டரா சேர்ந்தா..! ரொம்ப ரிசர்வ்ட் டைப்.. ரொம்ப பேச மாட்டா.....ஒரு நாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்குப் போகும்போது, பஸ் ஸ்டாப்பில நின்னுகிட்டிருந்தவகிட்ட காரை நிறுத்தி, அவ வீடு போகற வழியிலே இருந்தா ட்ராப் பண்ணிடறேன்னு சொல்லி, ஆரம்பிச்ச பரிச்சயம், லன்ச், அவ வீட்டில ஒரு நாள் டின்னர்..அப்படின்னு வளர்ந்து, ஒரு நாள் அவளே.. என் கிட்ட, 'ஐ லவ் யூ' ன்னு சொல்லும் படியா ஆயிடுத்து..

குலம், கோத்திரமெல்லாம் பொறுத்தமாக இருக்கவே.. என்னோட வீட்டிலேயும் ரொம்ப அப்ஜெக்ட் பண்ணல.. உனக்குக் கல்யாணம் ஆகி ஒண்ணரை வருஷத்துக்கெல்லாம் எனக்கும் கல்யாணம் ஆயிடுத்து..

எனக்கு என் மேலேயே ஆச்சரியம். அவ்வளவு சீக்கிரமா உன்னை என் நினப்பிலே இருந்து எப்ப, எப்படி தூக்கி எறிஞ்சேன்..? அவ்வளவு சலன புத்திக்காரனா நான்..? நான் உன் உருவத்தத்தான் காதலிச்சேனா..? நான் என்ன பண்ணியிருக்கணும்..? தேவதாஸ் மாதிரி தாடி வளத்துண்டு, லொக் லொக்னு இருமி செத்திருக்கணுமா..? நான் இப்படி ஒன்ன மறந்து கல்யாணம் செஞ்சிக்கறது சரிதானா..? இப்படி ஒரே குழப்பங்கள்..

அதே சமயம்.. உன் மேலே கொஞ்சம் கோபம், வருத்தமெல்லாம் கூட இருந்தது..! எவ்வளவு சுலபமா உன்னாலே நம்ப பழகினதையும், நம்மோட காதலையும் மறக்க முடிஞ்சது..? நம்ப ரெண்டு பேரும், அவங்களா பார்த்து செய்யாம, 'லவ்' செய்துட்டோங்கறதுதானே உன்னோட அப்பா அம்மாவுக்கு பெரிய அப்ஜெக்ஷன்..? அது அப்படி என்ன மேனேஜ் பண்ண முடியாத ஒண்ணா..? எனக்கும் எதிர்க்க தைரியம் இல்லை.. உனக்கும், உன்னோட அப்பா அம்மாவை மீறி என்ன கல்யாணம் செஞ்சிக்க மனசில்ல..! எனக்கு நானே சமாதானம் செஞ்சிகிட்டேன்.. தைரியமில்லாமல்.. காதல் செய்தது தவறுன்னு... அதுக்காக எனக்கு தண்டன கொடுத்துக்கறது நியாயம்.. என்னோட அப்பா அம்மா என்னத் தவறு பண்ணினாங்க..? இப்படி, என் வசதிக்கு - வெக்கமில்லாமல் சொல்றேன் குழலி - எனக்குள்ளேயே தர்க்கம் செய்துகொண்டு... ஆட்சேபணை சமாதானங்களைச் செய்து கொண்டு, அந்த கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டேன்..

பண்ணிகிட்ட மூணு மாசத்தில எனக்கும் பாருவுக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள்னு தெரிஞ்சது..! அவளுக்கு.. நான்.. என்னோட முழு கவனம் எல்லாம் அவள் மேலே மட்டும்தான் இருக்கணும். நான் அவள் ரசிக்கிற விஷயங்களைத்தான் ரசிக்கணும்.. அதுக்கப்பறம் வேற என்ன..? வாழ்க்கை அப்படியே ஓடவேண்டியதுதானே..!

வெறும் கணவன் மனைவின்னா.. விவாகரத்து செய்துடலாம்.. அப்பா, அம்மாவாக வேறு ஆகிட்டோமே..! ஆமாம்.. குழலி...எனக்கு ஒரே பையன்.. 'க்ருஷ்'.. ஆறு வயசு ஆகறது...

திடீரென்று, நேரத்தைப்பார்த்த குழலி, .. "ஜெயந்த்.. சாரி.. டைம் போனதையே கவனிக்கல..!நான் அவசரமாக ஆபீசுக்கு போகணும்.. நீ என்ன ஆபீசிலே நாளைக்கு கூப்பிடேன்..பேசலாம்...'

பேச்சை, மொட்டையாக பாதியில் நிறுத்திவிட்டு, குழலி கிளம்பியது, ஜெயந்துக்கு என்னவோ போல் இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்... "சரி.. நான் ஆபீசில், கூப்பிட்டா உனக்கு தொந்தரவு இல்லையே... ?" அவள்.. "அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லவேண்டும்" என்று எதிர்பார்த்தான்.. அவளும், அவனது எதிர்பார்ப்பை உடைக்கவில்லை..! மெலிதாக புன்னகைத்துவிட்டு, 'செர்ட்டன்லி நாட் டியர்'... என்று சொல்லிவிட்டு காரை நோக்கி நகர்ந்தாள்.. ஜெயந்த் அவளை அலுவலகத்தில் இறக்கி விட்டு, அவள் சொன்ன "டியர்" என்னும் வார்த்தையின் சந்தோஷத்தில் தன் காரை...வீட்டுக்குத்திருப்பினான்..

மறுநாள்.. மதியம் ஒரு இரண்டு மணிவேளையில், குழலியின் டெலிபோன் மணி அடித்தது...! குழலி போனை எடுத்து ஹலோ சொல்வதற்கு முன்னாலேயே...! "குழலி.. நான்தான் ஜெயந்த் பேசறேன்.. ஏதாவது முக்கியமான வேலையில் இருக்கியா..?" என்று கேட்கவும், குழலி.. "இல்லை ஜெயந்த்.... ஆறு மணிக்குத் தான் மீட்டிங் இருக்கு.... என்ன எப்படி இருக்கே..? எல்லா சுமையும் இறக்கி வச்ச மாதிரி மனசு லேசா இருக்கு இல்ல... உன்கிட்ட பேசினது ரொம்ப சந்தோஷம் ஜெயந்த்.."..

குழலி, ஆபிஸை விட்டு வெளியே, உட்லன்ட்ஸ் வரைக்கும் வரமுடியுமா, கா•பி குடிக்க..? அப்படியே கொஞ்ச நேரம் பேசலாமே..! டைம் இருந்தா..

"ஜெயந்த்..ப்ளீஸ்.. நோ •பார்மாலிட்டீஸ்.., இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நான் அங்கே இருக்கேன்."

அடுத்த இருபது நிமிஷத்திலே, உட்லன்ட்ஸ் டிரைவ்-இன்னில், கூட்டமில்லாத பகுதியில் ஜெயந்தும், குழலியும் கா•பிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு.. தங்கள் நாற்காலிகளில் சாய்ந்து உட்கார்ந்தார்கள்..

"குழலி.. உன்கிட்ட ஒண்ணு சொன்னா.. நீ கோவிச்சுப்பியா..?" - ஜெயந்த்.. ஒரு பட படப்புடன் கேட்டான்..

"சொல்லு ஜெயந்த்..! என்னிடத்தில என்ன •பார்மாலிட்டி உனக்கு..?"

"நான் கேக்கறது, உனக்குப் பிடிக்கலேன்னா, அல்லது, ஒத்துவராதுன்னு தோணித்துன்னா, நீ மறுத்துடலாம்.." எனக்கு வருத்தமா இருக்காது... உண்மையில வருத்தமாகத்தான் இருக்கும்..! ஆனா, அதைத் தாங்கிக்கிற பக்குவம் இருக்குன்னு நினைக்கிறேன்! - ஜெயந்த்..தட்டித்தடுமாறி சொல்லி முடிக்கவும்...

"ஜெயந்த்.. ப்ளீஸ்.. சுத்தி வளைக்காம சொல்லேன்..!" - குழலி குரலில் பரிவான கடுமையைக் காட்டினாள்.

"இல்ல குழலி.. எனக்கு, உன்னோட 'நார்மலான ப்ரண்ட்ஷிப்' மறுபடியும் வேணும் குழலி.. முன்னப்போல இல்லேன்னாலும்.. மாசத்துக்கு ஒருதடவையாவது, உன் கூட ஒருமணி நேரமாவது பேசணும் குழலி..! உன்னோட, தற்போதைய நிலையில, உனக்கு அது சம்மதமா இருக்குமான்னு தெரியல..! " ஜெயந்த் குரலில் ஏக்கம் கொஞ்சம் ஏற்றமாகத் தொனித்தது..! அவனுக்கே எதனால் இது அவசியம் என்று புரியவில்லை,,! காரண காரியங்கள் யோசிக்கும் நிலையிலும் அவனில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது..

அங்கே நிலவிய, சிறிது நேர மௌனம், ஜெயந்துக்கு, என்னவோ செய்தது..

குழலியின் ஒரு நெடிய பெருமூச்சு, அந்த மெளனத்தை விரட்டியது.

"ஜெயந்த், என்னோட எண்ணத்தைதான் நீயும் சொல்லியிருக்க..நேத்து உன்னைப் பாத்து, பேசிட்டு வந்ததுக்கப்புறம்... என்னவோ பழைய நினைவுகள் எல்லாம் மறுபடியும்... எனக்கே என்னப் புரியல ஜெயந்த்...உன்னப்பாத்து அடிக்கடி பேசணும், மறுபடியும் நல்ல நண்பர்களா இருக்கணும்னு ஆசையா இருக்கு...ஆனால் எனக்கு கொஞ்சம் பயமாவும் இருக்கு ஜெயந்த்.. ! நமக்கு கல்யாணம் ஆகி, குழந்தைகள், என் கணவர், உன் மனைவி என்று ஆன பிறகு.. அவர்களோட உணர்வுக்கள நாம மதிக்கணும் இல்லையா..? உலகத்தைப் பத்தி எனக்கு கவலை இல்ல ஜெயந்த்.. நம்ப நெருங்கிய உறவுகளைப் பத்திதான் கவலை, பயம் எல்லாம்.. உன் மனவிக்கு, இந்த நட்பு சம்மதமா இருக்குமா..? ஷ்யாமுக்கு.. என்று நிறுத்தினாள் குழலி.

அவளும் அவள் வசம் இல்லை என்பதை அவளின் முகமும், அதில் தெரிந்த குழப்பமும் தெரிவித்தன..!

"என்ன குழலி..? நீதான்.. ஷ்யாம்கூட இப்பல்லாம் மாறிட்டதா சொன்னியே..? இப்பகூட நம்ப நட்பை தப்பா எடுத்துப்பார்ன்னு நீ நினைக்கிற..?" - ஜெயந்த், அவளுடைய வாக்குமூலத்தையே சுட்டிக்காட்டினான், குரலில் குறும்போடு..

"ஜெயந்த்.. உண்மைய சொல்லணும்னா.. எனக்கு நிச்சயமாத் தெரியல்லேன்னுதான் சொல்லணும்..! அமெரிக்க வாசம், பத்துவருட தாம்பத்தியம் எல்லாம், என்மேலேயும், எங்க உறவின் மேலேயும் அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கணும்..." குழலியின் சந்தேகத்தோடு கூடிய முற்றுப் புள்ளி, ஜெயந்தின் புருவத்தை உயர்த்தியது..

அது முற்றுப்புள்ளியல்ல.. மேலும் தொடர்வதற்கு முன்பாக, இறுக்கம் நிறைந்த தற்காலிகமான நிறுத்தம்...!

குழலி தொடர்ந்தாள்...

"ஜெயந்த்.. நம்மோட கல்யாண அமைப்புல, இரண்டு பேர் சேர்ந்து வாழறதுல நிறைய கட்டாயங்கள் இருக்கு. நம்ம பெண்களுக்கு, பொதுவாக, கல்வியறிவோ, சுயமா வேல செய்து சம்பாதித்து, சொந்தக் காலில் நிற்கக் கூடிய திறமை இல்லாத நாட்களிலே, கணவனுக்குக் கட்டுப்பட்டு, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'னு சொல்லி அவங்களையே சமாதானப் படுத்திகிட்டு, கணவனுடைய கயமைகளையெல்லாம், கண்ணீரிலே கரைச்சிட்டு, குங்குமத்தோடயும், பூவோடவும் போய் சேருவோம்னு வாழ்ந்த காலமிருந்தது...

இன்றைய கால கட்டத்திலே நிலமை அப்படி இல்ல.. ஸொசைட்டிலே, மத்திய அல்லது மேல் மட்டத்தில இருக்கவங்க மத்தியிலே, கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேர், ஏறக்குறைய, ஒரேவிதமான படிப்பு, உத்யோகத் தகுதியோடு இருக்காங்க..! அப்படி இல்லேன்னாலும் கூட, இரண்டு பேருக்குமே, சுயமா சிந்திக்கக்கூடிய திறமை இருக்கு.,..சுயமான விருப்பு வெறுப்புகள் இருக்கு...அவங்க பலபேரை கல்யாணத்துக்கு முன்னும், பின்னும் பார்த்து, பழகக்கூடிய சூழ்நிலைகள் இருக்கு.! தனக்கு வாய்திருப்பதையும், வெளியில் இருப்பதையும் 'கம்பேர்' செய்து பார்க்கத் தோணுவது, மனித மனசுக்கு இயல்பா இருக்கறதுதானே..! அது நகை நட்டாக இருந்தாலும் சரி, கார், வீடாக இருந்தாலும் சரி..! தன்னிறைவோட, கிடைச்சது இவ்வளவுதான்னு சமாதானப்படுத்திக்காம, நாம் உயர்வுன்னு நினைக்கிறத வேண்டறதும், அது கிடைக்கறதுக்காக, பாடு படறதும் இயற்கைதானே...! உயர்வானதுங்கறதுனால மட்டுமல்ல, இது நமக்கு பொருத்தமானதுங்கறதுனாலேயும் ஆசை படறதும் சரிதானே...! இதை இந்தக்கால பெண்களாகட்டும், ஆண்களாகட்டும், தங்களுடைய கணவன் அல்லது மனைவி விஷயத்திலும் செய்யலாமில்லையா?.... பெரும்பாலானவங்க செய்யவிரும்பறாங்க.. சிலபேர் செய்யறாங்க..ஜெயந்த்..."

ஜெயந்த் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.. குழலியின் சிந்தைனையோட்டமும், சிதைவடையாமல் வரும் வார்த்தைப் பிரவாகமும், அவன் புருவங்களை உயர்த்தின..!

ஜெயந்துடனான கடந்த இரண்டு சந்திப்புகளில், அவள் மனம் சிறிது சஞ்சலப்பட்டிருப்பது உண்மை..! அடுத்து அவள் பேசப்போவது, அறிவின் முதிர்ச்சியில் விளைந்ததா, அல்லது, அவளுடைய தற்போதைய நிலைமைக்கு அவளே தேடிக்கொள்ளும் சமாதான விளக்கங்களா..? குழலி தொடர்ந்தாள்...

"ஜெயந்த்.. ஆச்சரியமா இருக்கா..? நான் கணவன்-மனைவி உறவு என்கிற சமூக அமைப்பை உடைச்சிட்டு, வாழ்நாள் முழுவதும் இருப்பதைவிட உயர்ந்தது எது என்று அலையணும்னு சொல்லவில்லை.. ஆனால், பெரும்பாலான ஆண்கள், இந்த தங்களுக்கு மட்டுமேயான நியாயம் என்று நினைக்கிறார்கள்..

மாற்றானை மனதில் நினத்தாலே ஒழுக்கம் தவறிய குற்ற மனப்பான்மையைத்தானே நம் சமூகம் பெண்களுக்குள் தலைமுறை தலைமுறையாக விதைத்து, வேர் ஊன்றச் செய்திருக்கிறது?..! தினசரிகளிலும், மற்ற பத்திரிக்கைகளிலும், சினிமாக்களிலும், கற்பழிக்கப் பட்டப் பெண், கற்பிழந்தவள் என்றெல்லாம் வருவது போல, ஆண்களைப் பற்றி வந்திருப்பதைப் பார்த்திருக்கிறாயா..? கேள்விப் பட்டிருக்கிறாயா..? ஏதோ, கற்புங்கறது.. பெண்களுக்கு மட்டுமேயான குணம் மாதிரி..!

இந்தமாதிரி கேள்விகளெல்லாம் மனசுல எழுந்தாலும், சமூகத்துக்கு இன்னும் பயப்பட வேண்டியிருக்கே ஜெயந்த்..! அந்நிய புருஷனோட நட்பாகூட தைரியமா பழகமுடியலயே..! நம்ப நட்பை புரிந்துகொள்ளக் கூடிய பக்குவம், ஷ்யாமுக்கு இப்பகூட இருக்குமான்னு சந்தேகம்தான்!.. முன்னேமாதிரி, வெடுக்கென்று ஏதாவது சொல்லாவிட்டாலும், மெளனமாகவே என் நெஞ்சை சுடுவது ஷ்யாமுக்கு சுலபம் ஜெயந்த்..!

கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்ற கட்டுப்பாட்டு கோப்பு ஒருபுறம், இதெல்லாம் இரண்டாம் பட்சம், தனி மனித மனசின் சந்தோஷங்கள், கட்டுகள் இல்லாத சுதந்திரம் என்று வளர்ந்து வரும் மனப்பான்மை மறுபுறம்.. இந்த இரவும் இல்லாத, பகலும் இல்லாத, சந்தியா காலத்தில்தான் என்னைப் போன்ற பெண்கள் இருக்கோம் ஜெயந்த்.."

"குழலி.. எனக்கு புரியறது குழலி...

ஏன் ஜெயந்த், உன்ன ஒண்ணு கேட்கிறேன்.. கற்புங்கறது என்ன ஜெயந்த்...? தெரியுமா உனக்கு? - குழலியில் கேள்விக்குப் பின்னால், அவள் எந்த பதிலை எதிர்பார்க்கிறாள் என்பது ஜெயந்துக்கு நிச்சயமாகத் தெரியவில்லை..!

"குழலி.. கற்புங்கறது.. ஆண், பெண் இரண்டு பேருக்கும் பொதுவான ஒண்றுங்கறத நான் மட்டுமில்ல... இந்த காலத்துல படிச்ச நிறைய ஆண்கள் ஒத்துக்கறாங்க குழலி..! நடைமுறைல, தங்களப் பொறுத்தவரைக்கும் கடைபிடிக்கறது.. அவங்க அவங்க மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்..! கற்புங்கறது.. ஒழுக்க நெறி.. ஒரு ஆணும், பெண்ணும், தங்களை ஒருவொருக்கொருவர் ஒப்படைச்சிக்கிட்ட பிறகு, அந்த கட்டில இருந்து விலகாமல்.. தங்களுக்குள்ள உண்மையா இருக்கறதுதானே.. குழலி..!".. அவளின் ஆமோதிப்பினை ஆவலோடு எதிர் பார்த்தான் ஜெயந்த்..!

குழலி....அவனை கூர்ந்து பார்த்துக்கொண்டே, "நீ சொல்றது சரிதான் ஜெயந்த்.. ஔவையார் என்ன சொல்லியிருக்காங்கத் தெரியுமா..? கற்பெனப்படுவது சொற்திறம்பாமை... ஒருத்தருக்கு கொடுத்த வாக்கை மீறாமல் இருப்பதுதான் கற்புதான்.. இதுக்கு, ஒரு பழைய தமிழ் பண்டிதரோட அரை வேக்காட்டு விளக்கம் ஓன்றை படிச்சேன்.. அதுல, 'கற்பு எனப்படுவது, பெண்கள், கணவன் சொல்லுக்கு மாறி நடவாமல், அவன் வழி நடப்பதுவாம்' என்று விளக்கத்தைப் பார்த்து, எனக்கு ஒரே ஆச்சரியம்.! ஔவை என்பவள் பெண் புலவி, அதிலும், மிகவும் அறிவார்ந்தவள்.. கேள்வி வழிக் கதைகள்படி, திருமணம் செய்யாமலே முதிய பிராயத்தை அடைந்து, தமிழுக்கே தன்னை கொடுத்தவள்.! அப்படிப்பட்ட அவள் எப்படி, பெண்குலத்தின் தன்மானத்தை அடகு வைத்தாற் போல எழுதியிருக்க முடியும்..?"

நம்முடைய கல்யாண முறைகளில், கன்னிகாதானம், பாணிக்கிரஹணம், மற்றும் சப்தபதி போன்ற சடங்குகள் மூலமாக, ஆண், பெண் இருவரும், வாழ்கை ஓடத்தின் சம துடுப்புதாரர்களாக, ஒப்பந்தம் செய்துக்கறாங்க,, இல்லையா..? இது போல, ஒருவொருக்கொருவர், பறிமாறிக்கொள்ளும், உறுதிச் மொழி சொற்களிலிருந்து, மாறாமல் இருப்பதுதான் கற்பாக இருக்கமுடியும்.. இது திருமண விஷயத்தில் மட்டுமல்ல ஜெயந்த்.. பொதுவாக, அன்றாட வாழ்க்கையில, நாம செய்யும் தொழிலில், மற்றவர்களுடனான பறிமாற்றங்களில், சொன்ன சொல் மாறாம நடந்துக்கறதுதான் கற்பு ஜெயந்த்..! - குழலியின்.. பட்டிமன்ற பேச்சாளரின் உத்வேகத்தோடு கூடிய சொற்பொழிவுக்கு, மீண்டும் தற்காலிக நிறுத்தம்..

"குழலி.. நான் உன்னோட சிந்தனையை, 'அனாலிஸிஸை' ரொம்ப அப்ரிஷியேட் பண்றேன்.. ஆனா.. நீ என்ன சொல்ல வரேங்கறது.. எனக்குப் புரியல..! - ஜெயந்த், நிஜமாக குழப்பத்தோடு புருவங்களை உயர்த்தினான்..

"நாம் இரண்டுபேரும், ஒருத்தர ஒருத்தர் விரும்பறப்ப, இரண்டு பேரும், ஒருத்தருக்கொருத்தர்.. எவ்வளவு உத்தரவாதம் கொடுத்துக்கிட்டோம்..? எந்த தடங்கல் வந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருப்போம்.. கடைசீ மூச்சு வரைக்கும், உனக்காக நானும், எனக்காக நீயும்னு வாழ்வோம், எது வேண்டுமானாலும் செய்வோம்..!..காதலின் உத்வேகம், எல்லோரையும் வசனகர்த்தாக்களாக ஆக்கிவிடுகிறது..!" - சற்று வெறுப்பு கலந்த கேலியுடன் மெலிதாக சிரித்தாள்..

மீண்டும் சிறிது, பெருமூச்சுடன், "நாம் இரண்டு பேருமே, சுலபத்தில, கொஞ்சம் கூட எதிர்ப்பு இல்லாம, நம்மை பெற்றவர்களோட விருப்பதுக்கு உட்பட்டு, கல்யாணமும் செய்துகொண்டு, நமக்குள் செய்துகிட்ட உறுதி வார்த்தைகளை தொலச்சிட்டமே! எனக்கு உன்கிட்ட சொல்றதில தயக்கமோ, வெக்கமோ இல்ல ஜெயந்த்.. இப்போதும், என் மனசு, உனக்காக துடிக்கறது..ஏங்கறது.. ஆனால் கூடவே.. ஷ்யாமோட நெருப்பின் முன்னால் செய்த சத்தியமும், பறிமாறிக்கொள்ளப்பட்ட உறுதி மொழிகளும், என்னுடை கற்பை கேலி செய்வது போலிருக்கே..! எனக்குள்ளே பெரிய போராட்டமா இருக்கே ஜெயந்த்.. நிச்சயமாச் சொல்றேன் ஜெயந்த்.. எனக்கு ஷ்யாமுகிட்ட, பயம் கலந்த மரியாதை இருக்கு.. என்னோட குழந்தைக்கு தந்தை என்ற ஸ்தானம் இருக்கு.. அதையும் மீறி அன்பு இருக்கான்னு தெரியலே.. இத்தன வருஷமா, பிரிஞ்சிருந்தும், உன்னைப் பார்த்த உடனே வந்த சந்தோஷம், உன்னிடத்தில பேசும் போது இருக்கக்கூடிய சுதந்திரம், எதுமே அவரிடத்தில இருந்ததில்ல...எனக்கு ஆச்சரியமாக இருக்கு.. என் உள் மனசுக்கு இவ்வளவு பிடிவாதமா..?"

இந்த சமயத்தில் ஜெயந்தும், குழலியும்.. இந்த பேச்சின் நோக்கையும், போக்கையும் புரிந்துகொள்ளாவிட்டாலும்.. அவர்கள் மீண்டும் மீண்டும் சந்திக்கப்போவது நிச்சயமென்று தோன்றுகிறது.. அவர்கள் இருவருமே புத்திசாலிகள்.. எதையுமே தீர ஆய்பவர்கள்.. இவர்களது, இப்போதைய உரையாடலைக் கூட...இவர்களது சந்திப்புகளும், பேச்சுகளும் இவர்களை எங்கே கொண்டு செல்லுமென்று நினைக்கிறீர்கள்..?

இவர்களது கடந்தகாலக் காதலை இவர்கள் மீண்டும் உயிர்பித்துக் கொள்ளுதல் அவசியம்தானா..?
அல்லது, இருவருமே, தங்களுக்கு முழுவதுமாக ஈடுபாடில்லாத, தங்கள் மணவாழ்க்கையிலே தொடர்ந்து, சமூகத்தின் பார்வைக்காகவும், அல்லது, அவர்களின் குழந்தைகள் அல்லது நெருங்கிய உறவுகளுக்காக, இருக்கவேண்டுமா..? என்ன செய்யவேண்டும்..

எழுத்தாளனாக, நான் கூட இதற்கு ஒரு முடிவை வழங்க முடியாது.. ஏனென்றால்.. இது தனிப்பட்ட இருவரின் சொந்த விஷயம்.. குழலி, ஜெயந்த், ஷ்யாம், பார்வதி தொடர்பான உறவுப் பின்னல்கள் போல, எத்தனையோ சிக்கலான, சிக்கிக்கொண்டு வெளிவரமுடியாமல் தவிக்கும் உறவுகள்.. ஒவ்வொன்றின், நிகழ் களங்களும், சூழ் நிலைகளும், கட்டாயங்களும் வெவ்வேறானவை.. அந்தந்த சூழ்நிலைகள், உறவுச் சங்கிலிகளின் வலிமை, அது இன்மை போன்ற பல சங்கதிகள் ஒவ்வொரு ஜெயந்தையும், குழலியையும் அவர்களுக்கு ஏதுவான, ஏதுவாக இல்லாவிட்டாலும், சூழ்நிலை வசதியோடு ஒட்டிய முடிவுகளை எடுக்க வைக்கும்.. ஆனால் ஒன்று.. காரணமில்லாது காரியமில்லை.. அவர்களின் மற்ற சந்திப்புகள், அமைத்துக்கொண்டவையாக இருந்தாலும், நீண்ட பிரிவுக்கப்புறமான முதல் சந்திப்பு முற்றிலும் தற்செயலானதே.. அந்தக்கணம்.. அவர்கள் உறவின் ஒரு முடிவான முடிவை நோக்கித்தான் அவர்களைச் செலுத்தும்..! இல்லையா?

க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை..

வட அமெரிக்காவில் வருடந்தோரும் நடைபெறும் இசை மேளா… த்யாகராஜரின் பெயராலே அவருக்குச் சற்றும் சம்மதமிருந்திருக்காத வகையிலே, நடைபெறுகிற விழா என்றுதான் தோன்றுகிறது சில விஷயங்களைப் பார்க்கும் போது! இந்த ஆராதனை, சென்னை சங்கீத ஸீசனுக்குப் பிறகு, ராசி ஜிப்பா குர்த்தாக்களும், போத்தீஸ், ஆரெம்கேவீ பட்டுப்புடவைகளும், புத்தம் புதிய நகை டிசைன்களும் போட்டிப் போட்டுக்கொண்டு உலா வரும் இடம்.

விட்டுவந்துவிட்ட கலாச்சார அடையாளங்களை தங்கள் குழந்தைகளிடம் தேடும் பெற்றோர்கள் ஒன்று சேரும் இடம். வருடா வருடம் போட்டிப் போட்டுக்கொண்டு இங்கேயே பிறந்து, வளர்ந்து, கலாச்சார சூழலோ, மொழி பழகலுக்கு சரியான வாய்ப்புகளோ இல்லாமல், கர்நாடக இசையை தங்கள் வேர்ச் சொத்தென ஸ்வீகரித்து, அதிகபட்ச உழைப்புடனும் ஆர்வத்துடனும் இசை பயின்று வரும் சிறுவ, சிறுமியரும், இளைஞ, இளைஞிகளும், அவர்களின் அதிகரித்து வரும் ஆரோக்கிய போட்டி மனப்பாங்கும் அதிசயிக்கத் தக்கவை!

இங்கேயே திரிசங்கு நரகத்தில் (சிலருக்கு சொர்க்கமாகவும் இருக்கலாம்) உழலவேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய சங்கீத ஆசிரியர்களுக்கு, இது ஒரு வடிகாலாக இருப்பது மட்டுமல்லாமல், தங்களுக்கு தாய் தேசத்தில் கிடைத்திருக்கக் கூடிய, வேண்டிய அங்கீகாரமும், கவன ஈர்ப்பும் இதன் மூலம் ஓரளவுக்குக் கிடைப்பது உண்மைதான்.

ஆனால், இந்த போட்டிகள் ஆரோக்கிய சூழ்நிலைக்கு இங்கே வளரும் குழந்தைகளை இட்டுச்செல்கின்றனவா அல்லது, புண்பட்ட சீழ்நிலைக்கு தள்ளுகின்றனவா என்பது, கோடி ரூபாய் கேள்வி..

போட்டியை கணிக்கவரும் சில இசைத் தாரகர்களும், தாரகைகளும், ஏதோ தாங்கள் வளரும் போதே அபரிமிதமான அறிவோடு வளர்ந்தார்ப் போல நடந்து கொள்ளுவதும், அமெரிக்க ஐடல் போட்டி நடுவர்களைப் போல, அவமதிப்பாகப் பேசுவதும், நடத்துவதும், கொஞ்ச நஞ்ச ஆர்வத்தினை இங்கே வளரும் வருங்கால இசை கலைஞர்களிடையே குலைப்பதாகத்தான் இருக்கிறது.

இதைத்தான் சொன்னேன், இதெல்லாம் தியாகராஜருக்கே சம்மதமாயிருந்திருக்குமா என்று.

வித்தைக்கழகு விநயம். இந்த விநயத்தை பயிற்றுவிக்க வேண்டிய மூத்த கலைஞர்களே, விநயம் வீசை என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருந்தால்… அவர்களுக்கெல்லாம் ஓரே வேண்டுகோள்.. தயவுசெய்து தியாகராஜ ஸ்வாமிகளின் சரிதத்தினை தினமும் பாடம் செய்யுங்கள்…

நமது இசைக்கலை தெய்வீகக் கலை, பரம்பொருளோடு ஐக்கியமாக ஒரு எளிய சாதனம், என்பதிலிருந்து வெகு தூரம் விலகி வந்து, வெறும் போட்டி படோடாபமான கச்சேரிகள், என்றெல்லாம் ஆகிவிட்டிருப்பது, அந்த சில இந்திய கர்நாடக இசை வாணர்களின் குறைவான புரிதலையே காட்டுகிறது.. போட்டிகள் தேவைதான், கலையை வளர்ப்பதற்காக.. கலைவாண, வாணிகளின் தேடலை அதிகரிப்பதற்காக, ஊக்குவிப்பதற்காக!

திரு.க்ளீவ்லேண்ட் சுந்தரமும், அவருடைய சகாக்களும் இதைத் தொடங்கிய காரணமும், 32 வருடங்களாக நடத்திவருகிற உறுதியும், மிகவும் சிறந்தவைதான், பாராட்டத்தக்கவைதான். ஆனால், அவர்களுக்கே கூடத்தெரியாமலோ என்னவோ, இந்த விழா வேறு நிலைக்கு கடத்திச் செல்லப்படுகிறது, மிகவும் மெதுவாக, ஆனால் உறுதியாக…

க்ளீவ்லேண்ட் வட அமெரிக்காவின் திருவையாறாகி விட்டிருப்பது உண்மைதான். இந்த பாரம்பரியமும் போற்றிப் பாதுக்காக்கப் படவேண்டியதுதான். ஆனால் இந்த விழா நேரம் தவறாமை, மீறாமை, போட்டிகளின் விதிமுறைகள் என்பதில் மிகவும் கடுமையான ஒழுங்கினைக் கடைபிடிக்கவேண்டும். இதைச் சொல்வதன் காராணம், இப்போது அப்படி இல்லை என்பதால்தான்!

போட்டியாளருக்கென்று விதிமுறைகள் இருப்பது போல, நடுவர்களுக்கும் சரியான வழிகாட்டுதல் இருக்கவேண்டும். உதாரணமாக, சில நடுவர்கள் அனுமதிக்கப் பட்ட நேரத்துக்கு மேலாக சிலரை பாட அனுமதிப்பது, கேள்விகள் கேட்பது, போட்டியாளர்களை கிண்டலாகப் பேசுவது போன்றவற்றைக் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.

சென்னை அகேடமியின் நேர ஒழுங்கினை இங்கும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும், கச்சேரிகள் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிக்கப்படவேண்டும். இந்தமுறை போட்டிமுடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்குவது தள்ளிப்போனது, திருமதி சுதா ரகுநாதனின் கச்சேரி குறித்த நேரத்துக்கு ஆரம்பித்து முடிக்காததினால்..மிகவும் நன்றாகத்தான் பாடினார். நேரத்தைப்பற்றிய நினைவு அவருக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஆர்கனைசர்களுக்கு?

நேர ஒழுங்கு கடைபிடிக்கமுடியுமானால், பல போட்டிகளில் பங்கெடுக்கும் பலர், அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்காமல் குறித்த நேரத்திற்கு சற்று முன்பாக குறித்த இடத்தில் இருக்கலாம்.. இதெல்லாம் வெகு இலகுவாக செய்யக்கூடியவைதான்..

இந்தியாவில் மட்டுமே இருந்தால் வணிக வெற்றி இருக்காது என்பதால்தானே இசைக்கலைஞர்கள் வெளிநாடுகளுக்கு வருடம் தவறாமல் வருகிறார்கள், வர ஆசைப்படுகிறார்கள். இவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இசை ஆர்வலர்களை, பிரியர்களை, ரசிகர்களை, கற்பவர்களை, கற்பிப்பவர்களை, ஏதோ இரண்டாம்தர இசைகுடிகள் போல நடத்துவது, நடந்துகொள்வது, வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். டாலரோ, டாயிட்ச் மார்கோ, யூரோவோ, பவுண்டோ இவைகள் முக்கியமாக இருக்கும் போது, இவற்றை செலவழிக்ககூடிய புலம் பெயர்ந்த குடிகளும் முக்கியமானவர்கள்.

சென்னை ஆர்.ஆர் சபா, சாஸ்த்ரி ஹால், அகேடமி, நாரதகான சபா, க்ருஷ்ணகான சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாக்கள் இவற்றுக்கு வரும் ரசிகர்கள் எப்படியோ, அதே போல்தான் க்ளீவ்லேண்டுக்கு, அமெரிக்கா முழுவதிலுமிருந்து வரும் ரசிகர்களும். அவர்களை மதிக்க அந்த சில இசைக் கலைஞர்கள் கற்றுக்கொள்வார்களா? காலம்தான் பதில் சொல்லும்…!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...