டிசம்பர் 31, 2009

சென்னயில் கச்சேரி ஸீஸன் 2009-2010

ஜனவரி ஒன்று, 2010:

அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, ஏதோ எல்லா கச்சேரிகளுக்கும், செல்லப்போவதாக நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும், சென்னை போக்குவரத்து நெரிசல்களும், மற்ற வாகன வசதி சிக்கல்களும், உறவினர் வருகைகளும், அழைப்புகளும் ஒட்டுமொத்தமாக நேரத்தை ஆக்ரமிப்பு செய்து கொள்ள, முடிந்த நேரத்தில் செல்லக்கூடிய கச்சேரிகள் மிகவும் குறைவுதான்.

இந்தவருடம், சௌமியா, டி.என்.எஸ், க்ருஷ்ணா, சஞ்சை, அஷோக் ரமணி, சங்கர நாராயணன் இவர்களின் கச்சேரிகளுக்குத்தான் செல்ல முடிந்தது... தவிர சில உதிரி ஆய்வு விரிவுரைகள்-விளக்க நிகழ்வுகள், குறிப்பாக எஸ்.ஆர்.ஜானகிராமன் அவர்கள் பார்த்தஸாரதி அரங்க நிகழ்ச்சி, என்று சில்லரை சில்லரையாக நிகழ்ச்சிகள்.

சௌமியாவின் சென்னை ம்யூஸிக் அகாதமி கச்சேரி மிகவும் நிறைவு. அதிகம் பாடப்படாத கோரி ஸேவிம்பராரே (கரஹரப்ரியா) அழகாகப் பாடப்பட்டது.. அதிக ஆர்ப்பாட்டமில்லாத கச்சேரி.

நாரதகான சபாவில், டி.என்.எஸ் அவர்களின் கச்சேரி, நிறைவான ஒன்று. ஆள் இளைத்தாலும், இசையில் இளைக்காத, இளமை உள்ளவர் சேஷூ. அவ்ர் எடுத்துக்கொண்ட பெரிய உருப்படி சிந்தாமணி ராகமும், ஸ்யாம ஸாஸ்த்ரியின் "தேவி ப்ரோவ" க்ருதியும்தான். அவரால் மட்டுமே செய்யமுடிந்த செயல், அந்த ராகத்தை அவ்வளவு விரிவாகப்பாடியது.

டி.எம்.க்ருஷ்ணாவின் அகாதமி கச்சேரி, வேகமும், விவகாரமும் நிறைந்த, கைத்தட்டல்களை அள்ளிக்கொண்ட கச்சேரி. பாபனாசம் சிவனின், அப்பன் அவதரித்த கதாம்ருததில் பாடிய மின்னல் ஸ்வரப் பின்னல்களுக்குப் பிறகு பாடிய தோடி கொஞ்சம் சுமார் ரகம்தான். ப்ருந்தாவன ஸாரங்க க்ருதியான சௌந்தர்ராஜத்துக்கு பாடப்பட்ட ராக ஆலாபனை மிகவும் சுமார் ரகம்தான்.. க்ருஷ்ணா ரொம்பவும் பேசுகிறார். ரசிகர்களின் கூட்டம் இன்று இருக்கும், நாளைக்கே வேறு திசைக்கு மாறிவிடும்.. வித்யா கர்வம் நியாயமானது என்று வாதிப்பவர்கள் பலர் இருந்தாலும், வித்தைக்கு அழகு வினயம்..

சஞ்சய் நன்றாகப் பாடுகிறார், குரல் சிறிது கனைசலாக இருந்தாலும். அன்று பாடிய ஆபோகி நன்றாக இருந்தது.. ஆனால் கோபால க்ருஷ்ண பாரதியின் "சபாபதிக்கு" தேவலாம் ரகம். ஆகிரி நல்ல முயற்சி.. ஆனால் வந்தது வராமல் பாடுவது கஷ்டம்தான்.. அகாதமி கச்சேரியில் அவருக்கு குரல் கொஞ்சம் படுத்தல். அதனாலேயே நிறைய ஸ்ருதிக்குற்றங்கள், தவறல்கள்..

இவர் எம்.டி.ஆர் மாதிரி பாடுகிறார்.. கல்யாணராமனாய் மாறிவிடுகிறார். ஏன் அவரைப்போல பாடமாட்டேன் என்கிறார்? சஞ்சய், நீங்கள், நீங்களாகப் பாடுவதே பிடித்திருக்கிறது..

அஷோக் ரமணி, இவர் குரலில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. மேல் ஷட்ஜத்தில் சேரும் சமயங்களில் தேய்தல் இருக்கிறது.. ஆனால், அபரிமிதமான ஞானமும், தாளக் கட்டுப்பாடும் அமைந்த பாட்டு இவருடையது. காம்போஜியில் பாடிய மரிமரி நின்னே, கச்சேரி மேடைகளில் மிகவும் அபூர்வமாகப் பாடப்படும் க்ருதி.. மிகவும் நிறைவாகப் பாடினார். அவர் பாடிய பல்லவி திஸ்ர ரூபகம், ஸங்கீர்ண நடை (இதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்). மிகவும் கஷ்டமான ஒன்று.. மிகுந்த கவனத்துடன் பாடினார். ஷண்முகப்ரியா ராகத்தில் ஒரு இடத்தில் ஸ்ருதி விலகிய உடனே, அதை அவசரமாக முடித்துவிட்டால் போல பட்டது...! கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிறைவான கச்சேரி... ஆனால் கூட்டம்? நம் ரசிகர்கள் ஆர்பாட்டத்துக்கும், ஆரவாரத்துக்கும் ஆர்.எம்.கே.விக்கும் தான் கூடுவார்கள் போலிருக்கிறது...!

டி.வி.எஸ்.. விவகாரங்கள் குறைந்த, இசையனுபவம் மட்டும் மிகுந்த சுகமான கச்சேரி...

இன்னும் கச்சேரிகள் இருக்கின்றன செல்வதற்கு, ஊருக்குக் கிளம்புவதற்குள்.. மீண்டும் எழுதுகிறேன் ஊருக்கு வந்தவுடன்..!

இன்றைய சிந்தனை..

புத்தாண்டு ஹைக்கூ:

பிச்சைக்காரர்கள் - கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும்...!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...