அக்டோபர் 28, 2011

எல்லாம் சிவபயம்


வெற்றுச்சுவரைப் பார்க்கின்றேன்

முற்றுமுணரும் நிலைவேண்டி
கற்றதுவெல்லாம் காய்ந்துப்போக
இற்றதுஎண்ணம் என்றேயாக  4

முடிவும்முதலும் இல்லாத
முடிச்சுப்போட்ட மூலமெது?
மூளையின்மூச்சு முட்டும்மட்டும்
மூலைகள்தோறும் தேடுகிறேன்.. 8

அதுவாஅவரா ஜடமாஉயிரா?
எதுவுமில்லா சூனியமதுவே
விதையொன்றாகி விளைநிலந்தேடி
விந்தையுலகை எட்டிப்பார்த்து   12

வினைகளமாடி விதிமுடிவாலோ
வருமுதிர்வாலோ விழுந்தபின்னர்
மீண்டுமதுவாய் மறைவதுதானே
மீண்டும்மீண்டும் காணுமியற்கை?  16

இடையில்வாழ்கை! எத்தனைநித்திரை?
தொடர்ந்தகனவுகள்? தொய்ந்த நினைவுகள்!
விழித்தகணங்களும் எத்தனை வேதனை?
விழுந்துஎழுந்த கதைகள் ஆயிரம்  20

அழுதகண்கள் அதுபல்லாயிரம்
கேட்டாலுந்தன் பழவினையென்பார்.
இருந்தபிறப்புகள் யாரேஅறிவார்?
எல்லாம்கடந்தவன் நாடகமென்பார். 24

சுழற்சியில்லா நிலையினைநாடு
சுத்தப்பிரம ஜோதியைகூடு
பிறவிகளில்லா பெருநிலைதேடு
துறவினைநாடி அடைவாய்வீடு  28

காலந்தோறும் ஞானிகள்ஜாதி
ஞாலத்தோர்க்கு உரைத்தபாடம்
அவனேஎழுதி அவனேநடத்தி
அவனேகளிக்க நடக்கும்கூத்தெனில் 32

எதற்காயித்தனை நாடகம்செய்தாய்?
இறைவாஎன்று கேட்கத்தோன்றி
அதையுமறிவு கழித்துப்போட்டது
இறைபொருளென்ன ஆணவக்குறியா? 36

விதையில்லாத விருட்சமில்லை
இயற்கையின்நியதி இதுவேயாகில்
இறைக்கும், வித்து இருக்குமன்றோ?
முதலில்லாமல் முடிவும் உண்டோ? 40

அகன்றுவிரியும் அண்டம் தொடங்கிய
அணுவின்முதலும், பூஜ்ஜியநொடித்துளி
தொடங்கி, இன்றும் முடியாப்பயணம்
தொடரும், முடிவில் காலக்கோடும் 44

ஜனித்தவேளை, கடவுள் என்னும்
கருத்தும் ஒன்றாய் உதித்தவேளை!
காலம் என்னும் அருவப்பொருளும்
காணும் அண்ட உருவப்பொருளும் 48

தானேநிகழ்ந்த தற்செயல்அற்புதம்!
ஏனோதோன்றுது எனக்குள்ளாக.
ஆனால்படித்த படிப்பும்பயமும்
ஊனில்கலந்த உலகியல்வழக்கும் 52

ஒத்துப்போகச் சொல்வதினாலே
செத்துப்போக சிந்தனையெல்லாம்
சத்தியமாகச் சொல்வேனெந்தன்
சித்தமெல்லாம் சிவபயமே! 56

அக்டோபர் 18, 2011

மீண்டும் வேண்டும் சுதந்திரப் போர்

 [ கால ஓட்டத்தில் சில மனதுக்குப் பிடித்த விஷயங்களை, நேரமின்மை என்கிற ஒரு சுய நொண்டிச் சமாதனத்திலே, தள்ளிப்போடுகிற குணம் எல்லோருக்குமே இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் அதிகமே. ஆனாலும், இந்த கவித்துவ வெளிப்பாடு, கடந்த ஆண்டுமுதல் எல்லோரையும் பரபரப்பாகி, இப்போது முழுவதுமாக ஓய்ந்துவிடாமல், ஆனால் வெகுவாக மந்தமாகி, மரணப்படுக்கைக்குத் தள்ளப்பட்டிருக்கிற, 2G முதல் மற்ற எல்லா ஊழல் செய்திகளுக்குக்கிடையில், ஆற்றாமை காரணமாக எழுதப்பட்டது. ஆனால், எழுதி என்ன பயன் என்ற எண்ணத்திலே இங்கே இடுகையாகப் பதியாமல் போனது..! மக்களின் மறதி மண்ணாகிப் போகாமலிருக்க, இது போன்ற ஆதங்க வெளிப்பாடுகள் தேவை என்கிற எண்ணம் இன்று இதை தற்செயலாக மீண்டும் படிக்கையில் ஏற்பட, இதோ கொள்வாருக்காக விரிக்கப்படுகிற கவிதைக் கடைச் சரக்கு! ]

மீண்டும் சுதந்திரப் போரினைச் செய்வோம்
அடிமைப் புத்தியின் அசதியைத் தொலைத்து
மாண்டநம் முன்னோர் உயிர்விலை விளைத்த
விடியலை வீணாய் செய்து விடாமல்!
அன்னிய உருவிலே, அடக்கு முறையிலை
ஆனால் இங்கே எத்தனை தளைகள்?
அன்னிய மொழிமுதல் அனைத்து கலப்பையும்
ஊனாய் உயிராய் உவந்து விட்டோம்!
தாலிகள் கோடியில் தாரை வார்த்தித்
தாலியின் கைகளில் கொடுத்து விட்டோம்

தொகைபல கோடியில் இருந்தும் தலைமைத்
தகைமை கொண்டோர் ஒருவரும் இல்லை!
தொகைபல கோடியில் சேர்ப்பதும் அரசியல்
பகைவரை அடியொடு அறுப்பதும், மக்கள்
மனங்களில் ஆயிரம் பிரிவுகள் விதைப்பதும்
வனங்களில் வாழ்பவை போல்நிலை ஆக்கலும்
ஆள்பவர் இங்கே ஆடிடும் ஆட்டம்
ஆட்டின மக்கள் பாடுதிண் டாட்டம்
பிணங்கள் தின்னும் சாத்திர மெல்லாம்
பேய்க்குணம் கொண்ட மக்களி னாலே

ஆள்பவர் வழியிலே மாக்களாய் ஆவதா?
தோள்வலி குன்றிநாம் தோல்வியில் துவள்வதா?
நம்மொழி நம்மினம் நம்கலா சாரம்!
நாவிலே நயம்பட நவிலத் தானா?
அன்னை மடிதனை அறவே மறந்து
அவலப் பிறப்பாய் திரியத் தானா?
என்பெலாம் கூசிடும் உணர்வுகள் இற்றதா?
எண்ணவும் இயலாச் செயலுமொ ழிந்ததா?
அரசியல் பிழைத்தால் அறமே கூற்றென
அருந்தமிழ் இளங்கோ அறிந்ததும் பொய்யா?

வாய்மை வெல்லும் என்னும் வாசகம்
வாய்-மெய் தனைவெலும் என்றோ வாகிடும்?
அரசிடம் தொடங்கி, அடித்தள மக்கள்
அனைவரும் சமமென ஆச்சுது ஊழலில்
கல்வியில் தொடங்கி கார்ப்பரேட் வரையில்
பாழும் பணமே பாயுது வெள்ளமாய்
கலைகள் எல்லாம் காசில் மாசாய்
குலைந்து போனது குப்பை மேடாய்!
மக்கள் உணர்வில் மறத்துப் போனார்.
சுவாசம் மறந்து மரித்துப் போனார்.

ராமன் வந்தே ஆண்டால் என்ன?
ராவண னால்நான் மாண்டால் என்ன?
மணியடித் தாலே கிடைக்குது சோறெனும்
மானங் கெட்ட வாழ்வே போதும்!
என்றே இருந்தால் எங்கே வாழ்வு?
எத்தனை நாட்கள் இத்தனைத் தாழ்வில்?
எழுமின் எழுமின் என்னுயிர் மக்காள்
கழுவில் கிடந்த நாட்களைத் தொலைத்து
உழுமின் உள்ளச் சிந்தனை நிலத்தை
பழுதில் எண்ணம் வளர்ப்பீர் உளத்தில்

அரசியல் அவலம் அடித்தளம் அரிக்கும்
கரையான் போல! அறிவீர் அறிவீர்
புரையோ டிப்போய் புழுத்து விடாதீர்.
உரமுடன் உள்ளத் துடிப்புடன் எழுவீர்
சூரியன் பெயரால் சூழ்ந்திடும் இருளை
வீரியங் கொண்டு விரட்டுவோம் வாரீர்!
சூழ்சியில் மக்களை சுரண்டிடும் கேடரும்
வீழ்ந்திட, விடுதலை பெற்றிட வாரீர்!
அயலான் நம்மை அடிமைப் படுத்த
அழகாய் வகுத்த, பிரித்தே ஆளும்

சூழ்ச்சிப் பின்னலை பிடித்துக் கொண்டார்
சூதினை நம்முள் விதைத்து விட்டார்
சூதை வென்று தருமம் வெல்ல
பாதைக் காட்டி கீதை தந்த
பார்த்தன் சாரதி கண்ணன் கனிவுடன்
பார்த்தருள் புரிவான் பாரதம் விழித்திடும்
அதுவரை சுதந்திர வேள்வித் தீயை
அணைய விடாதீர் ஆருயிர் நண்பீர்!


அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...