நவம்பர் 10, 2009

பொன்னியின் செல்வன் நாடகம் - ஒரு பார்வை

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு மிகவும் வியக்கத்தக்க ஒன்று. கலைவழி பண்பட்ட கடந்தகாலச் சரித்திரத்தின் சுவடுகள், நமது பெருமை மிக்க முன்னோர்களின் ஆழ்ந்த அறிவாற்றலையும், அவற்றால் விளைந்த அற்புத வெளிப்பாடுகளையும் உன்னத காவியங்களாகவும், ஏனைய நாகரிகங்கள் போலல்லாமல், பொதுமக்களின் நல்வாழ்வோடு இயைந்த கலைச் செல்வங்களாகவும் இன்றும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

அவற்றின் பெருமைகளை உணர்ந்து, அவற்றின் நீட்சியாக இன்றைய சமுதாயத்தை நடத்திச் செல்லவும், குறைந்தபட்சம் அவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்லவும் கூட இன்றைய போக்கு இடமளிக்காமல் இருப்பது ஆழ்ந்த சோகத்தையும், கவலையையும் தந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரது தணியாத ஆர்வத்தினால், அப்பொக்கிஷங்கள் முழுவதும் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் விடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

பல்லவப் பேரரசும், பின்னால் வந்த சோழர்களும், பிற்கால நாயக்கர்களும், தஞ்சை மராத்தியரும், கலைகளை வளர்ப்பதிலும், கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் காட்டிய அக்கறையின் அகச்சான்றாக, அக்காலத்திய அறிவுப்பொக்கிஷங்கள் ஓலைசுவடிகளாகவும், உயர்ந்து நிற்கும் தென்னகக்கோவில்களாகவும் பிரதிபலிக்கின்றன இன்றும்.

பெருவுடையார் ஆலயம் என்று தஞ்சையில் சிறந்த சிற்பக்கலை சின்னமாக, ராஜராஜ சோழனின் ஆட்சியின் உன்னத வடிவமாக உயர்ந்து நிற்கும், பெரிய கோவிலும், அதைப்போன்ற நூற்றுக்கணக்கான கோவில்களும் தமிழரின் பொற்கால கட்டிடக்கலைச் சிறப்பை இன்றும் உரத்துச் சொல்கின்றன.

சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும், சரித்திரக் கதை புனைவோர்களுக்கும், வியப்பையும், கற்பனையயும் ஒருங்கே தரக்கூடிய அமர சின்னங்கள் அவை.

அமரர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, தமிழக சரித்திர வரலாற்றுக் கதை ஆசிரியர்களில் முதன்மையானவர், முக்கியமானவர். அவருடைய சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும், அவற்றில் உலவிடும் பாத்திரங்களும், சரித்திர ஆர்வலர்களையும், ஏன், ஆராய்ச்சியாளார்களையும் கூட பல்லவ, சோழ பேரரசுகளின் காலம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், இந்த மனிதர்கள் எல்லாம் உயிரோடு, இரத்தமும் சதையுமாக மாமல்லபுரத்திலும், வாதாபியிலும், தஞ்சையிலும், இலங்கையிலும் உலவி வந்திருக்கவேண்டும் என்றே எண்ணவும், நம்பவும் வைக்ககூடியவை..

செப்பேட்டு, கல்வெட்டு குறிப்புகளிலிருந்தும், சிறந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை அமரர் கல்கியின், ஈடு, இணையற்ற, கவித்துவமான கற்பன நயத்தோடு, உயிரோடு உலவிய பாத்திரங்களோடு, கற்பனைப் பாத்திரங்களையும் இணத்து புனையப்பட்ட அமரகாவியங்கள் இரண்டு நாவல்களுமே.

பொன்னியின் செல்வனின் சிறப்பு என்னவென்றால், கதைத்தலைப்பின் நாயகன், கதாநாயகன் இல்லை! கதாநாயகன் வந்தியத்தேவன் ஆனாலும், கதை இறுதியில் உத்தமச்சோழ சக்ரவர்த்தியின் மணிசூட்டு விழாவோடு நிறைவு பெறுகிறது. இந்த விசித்திர கதையமைப்பு, சரித்திர நிகழ்வோடு ஒத்துப்போவதானலும், இதற்கு முன்பும், பின்பும் இல்லாத காவியமரபு.

இந்த முரண் மரபே, திரைக்கதை ஆசிரியர்களையும், நாடகமாக்குவோரையும் சிறிது குழப்பகூடும். கதையில் வரும் ஏறக்குறைய அறுபது கதாபாத்திரங்களையும், பல்வேறு இடங்களையும், நம்பகமான முறையிலே வெளிக்கொணர்வது பெரும் பொருட்செலவு மட்டுமல்லாது, தயாரிப்புக்கும், கதை சொல்லும் நேர்த்திக்குமே பெரிய சவால்கள்.

ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றமும், நாடகவடிவமாக்கி, இயக்கிய பாகீரதி சேஷப்பனும், அவருடைய தயாரிப்பு நிர்வாகக் குழுவும், நடிகர்களும் இந்த சவால்களை சந்தித்தது மட்டுமல்லாமல், அவற்றைக் கடந்து சாதித்திருக்கிறார்கள்.

தயாரிப்பு நிர்வாகத்திலும், காட்சி வடிவமைப்புகளிலும் ஸ்ரீதரன் மைனரும், வேணு சுப்ரமணியனும் ஆற்றிய பங்கு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய ஒன்று. காட்சிகளை வேகமாக நகர்த்துவதில், நடிக, நடிகையர்களை, காட்சிகளுக்கு மேடையில் குறித்த நேரத்தில் இருத்தியதில் பல்லவி நாகிரெட்டியின் சிரித்த முகத்திற்கு சிறப்பான பங்கு உண்டு.

தடுமாற்றங்களும், வசன மறப்புகளும், தொழில்வழி நாடக நடிகர்களுக்கே நேர்வதுதான். ஆனால் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே முக்கியம். நம்முடைய வளைகுடா நடிகர்கள், தங்களுடைய ஆர்வங்காரணமாக, சொந்த வேலைகள் மிகுந்த வார இறுதிகளை தியாகம் செய்தும், அலுவலக நெருக்கடிகள், வீட்டோர் அலுத்துக் கொள்ளல்கள் இவற்றை சமாளித்தும், நாக்கை உருட்டி, பிறட்டி போடக்கூடிய தமிழ் வசனக்களை, உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள் கெடாமலும், மிகவும் நேர்த்தியாக நடித்தது மட்டுமல்லாமல், ஏறக்குறைய அறுநூறுக்கும் மேற்பட்ட, நாடக ரசிகர்களை ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கு கட்டிப்போட்டது ஒரு உயரிய சாதனைதான்!

“தங்கத்திலே ஒரு குறையிருந்தால் அது தரத்தினில் குறைவதுண்டோ”?

பாகீரதி சேஷப்பன் சொன்னது போல, சரித்திர நாடகத்தினை, தூயத் தமிழ் வசனங்களோடு, இத்தனையாயிரம் மைல்களுக்கப்பால் அரங்கேற்றும் போது, அதற்கு உண்டான வரவேற்பினைப் பற்றிய சந்தேகங்களுக்கு, நேற்றைய இரசிகர் கூட்டம் உரத்துச் சொல்லிவிட்டது பதிலினை!

தலைமுறைகளைக் கடந்த, காவியம் இது என்ற அங்கீகாரத்தினை, அமரர் கல்கி வானுலகிலிருந்து பார்த்து, கண் விழிகள் பனித்துக் கொண்டிருப்பார்!

1 கருத்து:

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...