நவம்பர் 09, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் - 13

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்றார் வள்ளுவர்!

அதாவது, ஒருவர் தன் நெஞ்சு அறிவது ஒன்றைப்பற்றி பிறர்தாம் அறிந்திலரே என்று பொய் சொல்லாதிருக்கவேண்டும்; அன்றி பொய்கூறினால், அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்தின் பயனாய துன்பத்தை எய்துவிக்கும் என்கிறது இக்குறள்..

இன்றைய வாழ்வியல் நடைமுறையில் இப்படியா இருக்கிறது? தனி மனிதரில் தொடங்கி, சமூகத்தோடு குற்றவுணர்வென்பதே எதற்கும் இல்லாமல் போய்விட்டது.. இன்னொன்றையும் பார்ப்போம். என்ன! கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்னும் மனப்பாங்குதான். வர்த்தகமய உலகத்தில் எல்லாமே விலைபோகக் கூடியவைதாம்.. மனசாட்சி உட்பட.! எதுவும் தவறில்லை என்கிற மனப்பான்மையை வளர்த்துவிட்டிருக்கிறோம்.

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாவதும் என்பது சிலப்பதிக்காரத்தில் மூன்று அடிப்படைப்படைகளின் முதலாயதாக இளங்கோவடிகள் முன்வைப்பது, இன்றைய உலகந்தழுவிய அரசியலையும், நாடுகளை நடத்துகிற தலைவர்களையும் காணும்போதும், அறமே அற்றதோ, அரசியலே காப்பதோ என்று தோன்றுகிறது. தமக்கு பொய்யென்று தெரிந்தும் தனிமனிதரிலிருந்து பெருந்தலைவர்கள் தனிக்காரணங்களுக்காகவோ, அல்லது பொது அரசியல் இலாபங்களுக்காகவோ செய்கின்றனர். அதிகம் கொள்ளையடித்தவனும், கொலை செய்தவனும் திறமுள்ள தலைவர்களாக மதிக்கப்படுகின்றனர். நாடறிந்த கொள்ளையர்கள் அரசியல் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரும் அசிங்கம், மக்களின் அறியாமையிலேதான் என்றாலும்.. அவ்வாறு வருபவர்களுக்கு நெஞ்சம் என்ன மஞ்சத்திலே தூங்கப்போனதா? 

கீழிடப்பட்டுள்ள நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் வள்ளுவரின் குறள் கருத்தைக் கூறுவதுதான்..

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காத தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்
     நல்லந்துவனார். கலித் . 125 : 1 - 4

உலகத்துள் தாம் செய்வவற்றுள் தாமே உணர்ந்து, விலக்கத்தக்கவை இவை என்று விலக்க வேண்டும். தடுப்பவர் இன்றியே தீயவை இன்னவை என்று  ஒதுக்க வேண்டும் ; அவ்வாறின்றி, கண்டவர்தான் யாரும் இல்லையே என்று சிலர், தாம் நெஞ்சு அறியவே செய்த கொடிய தீய வினைகளைப் பிறர் அறியாமல் மறைத்தலும் செய்வர்;  ஆயினும் அவர்தம் நெஞ்சத்துக்கு அவற்றை மறைக்கக் கூடுமோ? – நெஞ்சத்தைக் காட்டிலும்  கண்கண்ட சாட்சி வேறில்லையென்று சொல்லவும் வேண்டுமோ ? 

கயமையும், குற்றத்தை உணராமையும், அன்றும் இன்றும் என்றும் இருப்பவைதான்போலும்..
அளவுகள் வேண்டுமானாலும் வேறுபடலாம். அதனால்தானோ அன்று அவர்களும் பாடினார்கள்.. இன்று நாமும் பாடுகிறோம்..

நெஞ்செனும் சாட்சி நெருடுமே என்பதைக்
கொஞ்சமும் கொள்ளார் கயவராம் - அஞ்சார்
உலகிலே காணார் ஒருவருமென் றாலும்

விலகுமோ குற்றமுளம் விட்டு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...