செப்டம்பர் 19, 2014

மாண்டலின் ஶ்ரீனிவாஸ் மறைவு...

கலைஞரும் போற்றும் கலைஞன் - இசையும் விரும்பு இசை - மாண்டலின் ஶ்ரீனிவாசன் மறைவு மனதை பிசைகின்றது.. அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படவைக்கும் அவருடைய திறமை, எளிமை, அன்றலர்ந்த மலர்போல் சிரித்தமுகம், அசைவெல்லாம் இசையாக்கும் கைவிரல்களின் வேகம்.. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.. மாண்டலின் என்ற இசைக் கருவிக்கு ஒரு பெருமதிப்பு இவராலேயே வந்தது என்றே சொல்லவேண்டும். இரவு முழுவதும் தூக்கமற்றுப் போனேன். எழுந்து அவருடைய காணொளி இசை நிகழ்ச்சிகளை சிலமுறைக் கேட்டேன்.. காலையில் வழக்கமாக எழுதுகிற திருக்குறள் உரையிலும் மனம் ஏனோ ஒன்றவில்லை.. இசையென்ற ஒன்றைத் தவிர எவ்விதத்திலும் தொடர்பில்லாத எனக்கேன் இத்துணை துக்கம்? ஈன்றவருக்கு எப்படியிருக்கும்?

எழுதத்தோன்றியதை கவிதையாக வடித்தாலும் கண்ணீர் வற்றாது.. ஆனாலும்.. இதை இரங்கற்பா என்பதைவிட இறைவன் (இருந்தால்) அவனை இறைஞ்சும் பாவாக காணிக்கையாக்குகிறேன் என்பதுதான் பொருந்தும்.

ஆண்டவனே ஏன்கோரத் தாண்டமாய் ஆடிவிட்டாய்?
மாண்டலினா வீணையிதா என்றுளத்தில் தோன்றுமாறு
தீண்டியவன் தீம்பாகாய் தூண்டுமிசை தந்தானே!
தூண்டிவிட்ட தீபமென்ன மென்சுடராய் மேலொளிர்ந்து
தோண்டிய தெல்லாமே சொக்கமான தங்கமென
ஈண்டுயிசை என்றன்றோ தந்திருந்தாய்? இன்றுயேனக்
கூண்டினை நீகலைத்து மாண்டுவிடச் செய்துவிட்டாய்?
வேண்டுவது ஒன்றுண்டு உன்னிடமே ஶ்ரீனிவாசன்
மீண்டுமிங்கு வேண்டுமய்யா ஆண்டவனே அற்புதமாய்
நீண்டவாழ்வு வாழ்ந்தந்த மாண்டலினை ஆள்வதற்கு
பூண்டறமாய் செய்வாயோ இன்று?


ஶ்ரீனிவாஸ் உன்னிசைக்கு நீண்ட ஆயுள் உண்டு.. மரித்தது நீயன்று மாண்டலினே!


பின்சேர்ப்பு: உன்னிசைக்கு மரணமில்லை என்றுதான் சொல்லியிருக்கவேண்டும்! உன் அகால மரணம் சிந்தனையை சிதறடித்துவிட்டது..மன்னிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...