செவ்வாய், 10 நவம்பர், 2009
ரொம்ப நாளாச்சு.. மறந்தே போச்சு..
எழுத எத்தனையோ இருந்தாலும், இப்போதைக்கு ஒரு கவித்துவமான வெளிப்பாடு மட்டும்…! இது ஒரு பொது நிலை வெளிப்பாடுதான். எல்லோருக்கும், எண்ண அளவிலாது கடந்து செல்லக்கூடிய நினைவுதான். தவறான வெளிப்பாடு என்பவர்கள் தவிர்க்கலாம் – உண்மையானவர்கள் முகத்திலில் ஒரு சிறு புன்னகை வரலாம்….! முதல் காதல் இல்லாத உள்ளமே இருக்காது.. அதுவே முடிவான காதலாய் கொண்ட உள்ளங்கள், இதைப் படிக்க வேண்டாம்..! வாழ்ந்து முடிந்து, வயோதிகத்தில் அசைபோடும் நினைவுகளில் இதுவும் இருக்குமே!
“முதல் காதல்”
மூவாறு வயதினிலே முகிழ்த்தது என் முதல்காதல்
முதுமையதன் வாசலிலும் முகங்காட்டி முறுவலிக்கும்.
என்றோவென் எண்ணத்திலே ஏறிவிட்ட அவள் நினைவு
என்றென்றும் என்னுடனே இதயத்தில் பயணிக்கும்.
தூரங்கள், தேசங்கள், புதிதான நேசங்கள்
சுமையான பாசங்கள், சுமந்துவந்த வாசங்கள்
முதலென்று அறியுமா? முடிவைதான் அறியுமா?
மூச்செல்லாம் அவளென்று இருப்பதைத்தான் புரியுமா?
அவள்நினைவு கீற்றாக மனத்திரையில் ஓடுகையில்
அகம்நிறையும்- அண்ணாந்து பார்த்துகண் விழிப்பனிக்கும்!
பிறவுறவில் இருந்தாலும், பிழையென்று சொன்னாலும்,
அறமுறைக்கிது அடுக்காது விழைவதுவும் வீணாகும்,
என்றெல்லாம் தெரிந்தாலும், என்மனத்தின் ஓரத்தில்
என்றைக்கும் தங்கிவிட்ட ஏக்கம்தான் என்செய்யும்?
தேகத்தின் தாகத்தை தீர்ப்பதற்கா இக்காதல்?
மேகத்தில் கருமுகிலாய் கனப்பதற்கா இக்காதல்?
இதயத்தின் கருவறையில் காதலையே தெய்வமென
உதயத்தில் தரிசிக்க உள்ளத்தில் பூட்டிவைத்தேன்
எங்கிருந்தாலும் வாழ்கென்று வாய்சொன்னாலும்
என்னவளே என்னிதயத்தில் என்றைக்கும் வாழ்வாயா?
பொன்னியின் செல்வன் நாடகம் - ஒரு பார்வை
அவற்றின் பெருமைகளை உணர்ந்து, அவற்றின் நீட்சியாக இன்றைய சமுதாயத்தை நடத்திச் செல்லவும், குறைந்தபட்சம் அவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்லவும் கூட இன்றைய போக்கு இடமளிக்காமல் இருப்பது ஆழ்ந்த சோகத்தையும், கவலையையும் தந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரது தணியாத ஆர்வத்தினால், அப்பொக்கிஷங்கள் முழுவதும் அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் விடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
பல்லவப் பேரரசும், பின்னால் வந்த சோழர்களும், பிற்கால நாயக்கர்களும், தஞ்சை மராத்தியரும், கலைகளை வளர்ப்பதிலும், கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் காட்டிய அக்கறையின் அகச்சான்றாக, அக்காலத்திய அறிவுப்பொக்கிஷங்கள் ஓலைசுவடிகளாகவும், உயர்ந்து நிற்கும் தென்னகக்கோவில்களாகவும் பிரதிபலிக்கின்றன இன்றும்.
பெருவுடையார் ஆலயம் என்று தஞ்சையில் சிறந்த சிற்பக்கலை சின்னமாக, ராஜராஜ சோழனின் ஆட்சியின் உன்னத வடிவமாக உயர்ந்து நிற்கும், பெரிய கோவிலும், அதைப்போன்ற நூற்றுக்கணக்கான கோவில்களும் தமிழரின் பொற்கால கட்டிடக்கலைச் சிறப்பை இன்றும் உரத்துச் சொல்கின்றன.
சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும், சரித்திரக் கதை புனைவோர்களுக்கும், வியப்பையும், கற்பனையயும் ஒருங்கே தரக்கூடிய அமர சின்னங்கள் அவை.
அமரர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, தமிழக சரித்திர வரலாற்றுக் கதை ஆசிரியர்களில் முதன்மையானவர், முக்கியமானவர். அவருடைய சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும், அவற்றில் உலவிடும் பாத்திரங்களும், சரித்திர ஆர்வலர்களையும், ஏன், ஆராய்ச்சியாளார்களையும் கூட பல்லவ, சோழ பேரரசுகளின் காலம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், இந்த மனிதர்கள் எல்லாம் உயிரோடு, இரத்தமும் சதையுமாக மாமல்லபுரத்திலும், வாதாபியிலும், தஞ்சையிலும், இலங்கையிலும் உலவி வந்திருக்கவேண்டும் என்றே எண்ணவும், நம்பவும் வைக்ககூடியவை..
செப்பேட்டு, கல்வெட்டு குறிப்புகளிலிருந்தும், சிறந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை அமரர் கல்கியின், ஈடு, இணையற்ற, கவித்துவமான கற்பன நயத்தோடு, உயிரோடு உலவிய பாத்திரங்களோடு, கற்பனைப் பாத்திரங்களையும் இணத்து புனையப்பட்ட அமரகாவியங்கள் இரண்டு நாவல்களுமே.
பொன்னியின் செல்வனின் சிறப்பு என்னவென்றால், கதைத்தலைப்பின் நாயகன், கதாநாயகன் இல்லை! கதாநாயகன் வந்தியத்தேவன் ஆனாலும், கதை இறுதியில் உத்தமச்சோழ சக்ரவர்த்தியின் மணிசூட்டு விழாவோடு நிறைவு பெறுகிறது. இந்த விசித்திர கதையமைப்பு, சரித்திர நிகழ்வோடு ஒத்துப்போவதானலும், இதற்கு முன்பும், பின்பும் இல்லாத காவியமரபு.
இந்த முரண் மரபே, திரைக்கதை ஆசிரியர்களையும், நாடகமாக்குவோரையும் சிறிது குழப்பகூடும். கதையில் வரும் ஏறக்குறைய அறுபது கதாபாத்திரங்களையும், பல்வேறு இடங்களையும், நம்பகமான முறையிலே வெளிக்கொணர்வது பெரும் பொருட்செலவு மட்டுமல்லாது, தயாரிப்புக்கும், கதை சொல்லும் நேர்த்திக்குமே பெரிய சவால்கள்.
ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றமும், நாடகவடிவமாக்கி, இயக்கிய பாகீரதி சேஷப்பனும், அவருடைய தயாரிப்பு நிர்வாகக் குழுவும், நடிகர்களும் இந்த சவால்களை சந்தித்தது மட்டுமல்லாமல், அவற்றைக் கடந்து சாதித்திருக்கிறார்கள்.
தயாரிப்பு நிர்வாகத்திலும், காட்சி வடிவமைப்புகளிலும் ஸ்ரீதரன் மைனரும், வேணு சுப்ரமணியனும் ஆற்றிய பங்கு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய ஒன்று. காட்சிகளை வேகமாக நகர்த்துவதில், நடிக, நடிகையர்களை, காட்சிகளுக்கு மேடையில் குறித்த நேரத்தில் இருத்தியதில் பல்லவி நாகிரெட்டியின் சிரித்த முகத்திற்கு சிறப்பான பங்கு உண்டு.
தடுமாற்றங்களும், வசன மறப்புகளும், தொழில்வழி நாடக நடிகர்களுக்கே நேர்வதுதான். ஆனால் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே முக்கியம். நம்முடைய வளைகுடா நடிகர்கள், தங்களுடைய ஆர்வங்காரணமாக, சொந்த வேலைகள் மிகுந்த வார இறுதிகளை தியாகம் செய்தும், அலுவலக நெருக்கடிகள், வீட்டோர் அலுத்துக் கொள்ளல்கள் இவற்றை சமாளித்தும், நாக்கை உருட்டி, பிறட்டி போடக்கூடிய தமிழ் வசனக்களை, உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள் கெடாமலும், மிகவும் நேர்த்தியாக நடித்தது மட்டுமல்லாமல், ஏறக்குறைய அறுநூறுக்கும் மேற்பட்ட, நாடக ரசிகர்களை ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கு கட்டிப்போட்டது ஒரு உயரிய சாதனைதான்!
“தங்கத்திலே ஒரு குறையிருந்தால் அது தரத்தினில் குறைவதுண்டோ”?
பாகீரதி சேஷப்பன் சொன்னது போல, சரித்திர நாடகத்தினை, தூயத் தமிழ் வசனங்களோடு, இத்தனையாயிரம் மைல்களுக்கப்பால் அரங்கேற்றும் போது, அதற்கு உண்டான வரவேற்பினைப் பற்றிய சந்தேகங்களுக்கு, நேற்றைய இரசிகர் கூட்டம் உரத்துச் சொல்லிவிட்டது பதிலினை!
தலைமுறைகளைக் கடந்த, காவியம் இது என்ற அங்கீகாரத்தினை, அமரர் கல்கி வானுலகிலிருந்து பார்த்து, கண் விழிகள் பனித்துக் கொண்டிருப்பார்!
சனி, 20 ஜூன், 2009
ஆலிலை மேலொரு அழகிய பாலகன்
ஏக்நாத் ஈஸ்வரன் (1910-1999) அண்மையில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த தன்னையுணர்ந்த தத்துவ தரிசி. இந்தியாவில் நாக்பூர் பல்கலை கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக் கழகத்து ‘ஃபுல் ப்ரைட் அறிஞராக”, (Fulbright Scholar) 1960-களில் வந்த அவர், நீலகிரி பிரசுரம் (Nilgiri Press), மற்றும் “நீலமலை தியான வளாகம்” (Blue Mountain Center of Meditation), முதலியவற்றை நிறுவி, ஆன்மிகம், தியானம், பகவத் கீதை, உபநிஷத்துக்கள், தம்மபாதா போன்றவற்றுக்கு விளக்க உரையாக, நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவருடைய “தினசரி வாழ்க்கைக்கான பகவத்கீதை” தொடர் புத்தகங்களின் இரண்டாவது தொகுப்பான “ஆயிரம் சூரியர்களைப் போல” என்ற புத்தகத்தின் சில பகுதிகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்க்கண்டேயன் கிருஷ்ணனைப் பார்த்து, ‘மாயைப்” பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்க, நடக்கும் நிகழ்வுகளை, மிகவும் அழகாக, பிரமிப்பாக விளக்கியிருப்பார். அந்த விளக்கங்களை படித்தன் காரணமாக எழுந்த உள்ள எழுச்சியில் பிறந்த பாடல்தான் இதோ…! கவிதைக்கான முதல் காரணமான “உள்ள எழுச்சி” என்பதைத்தவிர மற்று இலக்கண விதிகளுக்கெல்லாம் உட்பட்டுள்ளதா என்று சிந்திக்காமல் எழுதிய வெளிப்பாடு இது…!
ஆலிலை மேலொரு அழகிய பாலகன்
கால்விரல் கனியிதழ் வாயினில் குலவிட
மாயங்கள் செய்கின்றான் – எல்லாமவன்
மாயயை என்றே சொல்கின்றான்.
ஆலமுண்ட நீலகண்ட ஆதிசிவ நாதன்
காலனை கடிந்தே கார்த்தமார் கண்டன்
காலமும் ஞாலமும் கடந்த மாயையின்
கருத்துரைக்கக் கேட்டான் – கண்ணனோ
கருத்தையே அழித்தான் – அகமாயக்
கருத்தையே அழித்தான் -
உள்ளிழுக்கும் மூச்சிலே உயிரெலாம் ஒடுங்கும்
உள்ளும் புறமுமென்ற உணர்வுமே அடங்கும்
எல்லாம் ஓய்ந்துவோர் எல்லையிலா மெளனம்
ஏகாந்தமாய் அங்கே நிலைபெறும் மோனம்
ஹூங்கார நிஸ்வாஸம் உண்டாக்கும் ப்ரபஞ்சவெளி
ஆங்கார மாயைதனை அழிக்கின்ற ஞானஒளி
இருவினை இருள்மாயக் களியினிலே களைப்பார்
கருமவினையில் இங்கே பிறந்திறந் திளைப்பார்-பின்
பரமயோக பாதன் பக்தியிலே திளைப்பார்.
எல்லாம் துறந்த துறவியருக்கும் இலக்கியமும், இலக்கணமும் துறக்கமுடியவில்லையே என்று நினைப்பதுண்டு. ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, அக்கூற்றையும் கவியாகச் சொன்னவர்கள் நம் துறவிகளும் ஞானியர்களும். கவிதை ஆசைமட்டும் எவரையும் விட்டதில்லை! இதற்குக் காரணம் எதுவாக இருக்கமுடியும்? சிந்திப்போம் அடுத்தமுறை சந்திப்பதற்குள்..
வியாழன், 18 ஜூன், 2009
தாயுமானவ சுவாமிகள்
வரகவிகள் வாக்கிலிருந்து பொழிகின்ற கவியமுதங்கள் உள்ளுக்குள் அவர்கள் உணர்ந்து, துய்த்த மெய்யமுதங்கள். பாரதியின் “பாருக்குள்ளே நல்ல நாடு” என்கிற கவிதையிலே, அவன் சொன்னது அத்தனையும் ஏதோ தன் உள்ளத்தில் பாரதநாடு எப்படி இருக்கவேண்டுமென்று நினத்து சொன்னதில்லை. வெற்றுப் பெருமிதத்திலே எழுதியவையும் இல்லை. நம் இலக்கியங்களும், முறிவுறாத சமய, கலை, கலாச்சார, மக்கள் வாழ்வு நெறி தொடர்வுகளைப் பற்றி விட்டுச்சென்றிருக்கும் அகச்சான்றுகளின் உண்மையினை உணர்ந்ததன் வெளிப்பாடே…
“ஞானத்திலே பரமோனத்திலே – உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு” – இந்தப் (பாருக்குள்ளே)
…. …. … …. …. …. … …. …. …. … ….
யாகத்திலே தவ வேகத்திலே – தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு – இந்தப் (பாருக்குள்ளே)
இக்கவிதைகாட்டும் உண்மைகள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைப் போல், அரசியல், சமயம், கலாச்சார. சமூகச் சீரழிவுகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழலிலும், இன்றைக்கும் பாரத்தின் பல இடங்களில் சாதாராண மக்களும் உணருபவை. பாரத தேசம் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பதற்கு காரணம், சிறிது காலமாகவே “கலாச்சாரங்களின் கலப்பிடமாக” இருந்துவரும் அமெரிக்காவுக்கு முன்பாக, ஏறக்குறைய 5000-ம் வருடங்களுக்கும் மேலாக அனைத்து திசைகளிலிருந்தும் மென்முறையாகவோ, வன்முறையாகவோ வந்திறங்கிய கலாச்சார நுகர்வுகளுக்கும், திணிப்புகளுக்கும், பாரதநாடு ஆட்பட்டிருப்பதால்தான்.
முரண்பாடுகள் என்பதாலேயே மோசமென்று பொருளில்லை. ஒட்டுமொத்த பாரத்தின் முதிர்ந்த சிந்தனை வளர்ச்சியையும், வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் அடிநாதத்தையுமே அவை காட்டுகின்றன.
ஆதிசங்கரர், புத்தர் தொடங்கி சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள தவஞானியர் எத்தனையோ! சமய சிந்தனையைச் செழுமைப் படுத்தியதிலும், மக்களின் பொதுவாழ்க்கை ஒழுக்கநிலைக்கக் கரைபடிமங்களாகவும் விளங்கியதில் இவர்களின் தத்துவ தரிசனங்களும், அவற்றின் இலக்கியப் பதிவுகளும் முக்கிய பங்கை ஆற்றி வந்திருக்கின்றன. இவர்களின் சிந்தனைப் பதிவுகளை, அவற்றில் அவர்கள் கால அரசியலின் உரசல்களை, அவற்றின் முழு சாரத்தை, புரிந்துகொள்ள ஒரு பிறவி இருந்தால் போதாது. ஆனாலும் என்னால் இயன்றவரை, சில முக்கியமான சமயச் சிந்தனையாளர்களை அறிந்துகொள்ளும் முயற்சியிலே, தாயுமானவ சுவாமிகளின் பாடல்களைச் அண்மையில் படிக்க நேர்ந்தது.
தமிழ்மொழியின் வனப்பிலே, வளப்பத்திலே உள்ள பெருமிதத்திலும், பிரமிப்பிலும் மட்டுமே படிக்க ஆரம்பித்த எனக்கு, இந்த செல்வங்களையெல்லாம் கடந்த 100 வருடங்களில் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோமே என்னும் பதைப்பு தோன்றினாலும், இழப்பும், மீட்பும் சுழற்சியே என்கிற உலக விதியின் உண்மை ஆறுதலைத் தருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு (வேதங்களை வளர்த்த வனம்) என்னும் சிவத்தலம் ஊரிலே சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பாக, தஞ்சையை விஜயரங்கசொக்கநாத நாயக்கர் ஆண்ட காலத்திலே, சைவ வேளாளர் குலத்திலே தோன்றிய கேடிலியப்பப் பிள்ளை, கெஜவல்லி அம்மை தம்பதியர்க்கு முதல் மகனாய் பிறந்தவர் சிவசிதம்பரம். இந்த பிள்ளை கேடிலியப்பபிள்ளையின் தமயனாருக்கு சுவீகாரமாகக் கொடுக்கப்பட்டார்.
தஞ்சை அரசரிடம் சம்ப்ரதியாக (பிரதான கணக்கர்) வேலை செய்து வந்த கேடிலியப்பப் பிள்ளை வேலை நிமித்தமாக திருச்சிராப்பள்ளியில் குடிபெயர்ந்து வசித்துவந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு தாயுமானவர் என்றே பெயர்.. அவ்விறையின் மேல் கொண்ட பக்தியினாலே, 1707-வருடத்தில் பிறந்த தனது இரண்டாவது மகனுக்கு தாயுமானவன் என்றே பெயரிட்டார்.
இள வயதிலேயே அறிவுத்திறம் மிக நிரம்பியவராக விளங்கிய, சிராப்பள்ளியிலே பாடசாலை நடத்திவந்த சிற்றம்பலதேசிகரின் மாணவராக இவர், தமிழ், சம்ஸ்கிருதம், கணிதம், ஜோதிஷம் முதலியவற்றை கோதற்று கற்று, நல்ல நிபுணத்துவம் எய்தினார். தந்தைக்குப் பிறகு அவர் தஞ்சை அரசரிடம் சம்ப்ரதியாகவே வேலை செய்துவந்தார். காலப்போக்கில் அவர் மனம் உண்முகம் நோக்கி திரும்பியதும், சிராப்பள்ளியில் அவர் “மௌன குரு” என்று அறியப்பட்ட ஒரு மகானைச் சென்றடைந்ததும், பிறகு கௌபீனதாரியாய் திருச்சிராப்பள்ளியிலேயே துறவறம் பூண்டதும், இறுதியாக இராமநாதபுரத்துக்கு அருகேயுள்ள லக்ஷ்மீபுரத்தில், நிர்விகல்ப சமாதி அடைந்ததும் வரலாறு.
ஸ்ரீ ராமக்ருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) வெளியிட்டுள்ள தாயுமானவசுவாமி பாடல்கள் புத்தகமொன்று என்னுடைய புத்தகசேகரிப்பிலே வெகுநாட்களாகக் கிடந்தது. அண்மையில் அதை தூசிதட்டிப் படிக்கப்போக, “அடடா! இதை இத்துணை நாட்களாகப் படிக்காமல் விட்டுவிட்டோமே” என்று தோன்றியது.
தமிழ் ஞான மரபிலே வந்துள்ள எத்தனையோ ஞானிகளில், அருணகிரியார், வள்ளலார், பட்டினத்தார், பதினெண் சித்தர்கள், தாயுமானவ சுவாமிகள், போல எத்துணை மஹான்கள் எப்படியெல்லாம் கவிதைப் வெள்ளமாகப் பொழிந்திருக்கிறார்கள்?
கீழேயிருக்கும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பாடலை படிக்கும் போதே, தாயுமானவரின் ஆத்ம விசாரணயின் அகண்டம் உடனே புலனாகிறது.
அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி,
அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குள்ளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும்படிக்கு இச்சைவைத்து, உயிர்க்குயிராய்
தழைத்தது எது? மனவாக்கினில்
தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எலாம்
தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றதுஎது?
எங்கணும் பெருவழக்காய்,
யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய்
என்றைக்கும் உள்ளது எது? மேல்
கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது? அது
கருத்திற்கு இசைந்தது அதுவே;
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் என்னும் தலைப்பிலே எழுதப்பட்டுள்ள மூன்று பாடல்களிலுமே, குறிப்பிட்ட தெய்வம் என்று குறிப்பிடாமல், தூய அத்வைத வஸ்துவைக் குறித்த விசாரணையும், அந்த துரியபரம்பொருளின் வணக்கமுமாக செல்கின்றன பாடல்கள். காலமாய், வெறும் வெளியாய் விரிந்திடும் அகண்ட ககனமெங்கும் காலம் காலமாய் தவழ்ந்திடும் அனந்தகோடி உயிர்களை ஆக்கி, காத்து, அழித்து அந்தச் சுழற்சி நாடகமாடும், எல்லைகளில்லாப் பரமனுக்கு அஞ்சலியே முதல் பாடல்.
ஊர் அனந்தம்; பெற்றபேர் அனந்தம்; சுற்றும்
உறவு அனந்தம் வினையினால்
உடல் அனந்தம்; செயும் வினை அனந்தம்; கருத்
தோ அனந்தம்; பெற்றபேர்
சீர் அனந்தம்; சொர்க்க நரகமும் அனந்தம்; நல்
தெய்வமும் அனந்தம்; பேதம்
திகழ்கின்ற சமயமும் அனந்தம்; அதனால் ஞான
சிற்சக்தியால் உணர்ந்து
கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர்
கண்ணும் விண்ணும் தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலை;நம்
கடவுளைத்; துரியவடிவைப்;
பேர் அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும்
பெரியமௌனத்தின் வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆனந்தம் ஆம்
பெரிய பொருளைப் பணிகுவாம்.
இரண்டாம் பாடலில் அனந்தமான வேற்றுமைகளைச் சொல்லி, அதில் ஞானானந்தம் தரவல்ல கடவுளை, மெய்ப்பொருளைப் பணியவேண்டும் என்று சொல்கிறார் தாயுமானவர். இந்த பாடல், நாம் சாதாரணமாக கவனிக்கிற செய்திகளைச் சொன்னாலும், தத்துவத்தேடலின் முதல் படிகளை, படிப்போர்க்கு காட்டுவதே பாடலின் சிறப்பு.
அத்வைத வஸ்துவை; சொல்ப்ரகாசத்தனியை;
அருமறைகள் முரசு அறையவே
அறிவினுக்கு அறிவுஆகி, ஆனந்த மயம் ஆன
ஆதியை; அநாதி; ஏக
தத்துவ சொரூபத்தை; மதசம்மதம் பெறாச்
சாலம்பரகிதம் ஆன
சாசுவத புஷ்கல நிராலம்ப ஆலம்ப
சாந்தபத வ்யோமநிலையை;
நித்தநிர்மல சகித நிஷ்ப்ரபஞ்சப் பொருளை;
நிர்விஷய சுத்தம் ஆன
நிர்விகாரத்தைத்; தடஸ்தமாய் நின்று ஒளிர்
நிரஞ்சன நிராமயத்தைச்
சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு
திவ்ய தேஜோமயத்தைச்;
சித்பர வெளிக்குள் வளர் தற்பரமது ஆனபர
தேவதையை அஞ்சலிசெய்வோம்.
இந்த மூன்றாவது பாடலில் மறுபடியும் இன்ன தெய்வம் என்று சொல்லாமல், பரதேவதைக்கு அஞ்சலியாகவே செய்துள்ளார். அந்த பரதேவதையை இரண்டிலாத பொருளாய், ஒங்கார/பிரணவப் பொருளாய், ஆதியாய், அநாதியாய், ஒன்றாய தத்துவாமாய், பற்றுக்கோடில்லாத (சாலம்பரகிதம்), என்றும் உள்ளதாய், நிறைவாய் (புஷ்கலம்), தன்னைக் கொண்டாட ஆதரவு தேடாத (நிராலம்ப ஆலம்பமாய்), அதாவது தன்னை எந்த சமயக்கட்சியிலும் சேராத தன்மையனாய், நிர்மலனாய் (அழுக்கற்றவனாய்), உலகிற்கும், அண்ட வெளிக்கும் அப்பாற்பட்ட பொருளாய், புலன்களுக்கு எட்டாதவனாய், வடிவற்றவனாய், முற்றொழில் மூலகாரணனாய் (தடஸ்தம்),
குற்றமற்றவனாய்(நிரஞ்சனம்), பழுதுபடாதவனாய் ((நிராமயம்) ) கூறுகிறார். அந்தப் பரம்பொருள் நம் சித்தம் அறியாதபடி, நம் சித்தத்தில் நின்று இலங்குமாம்.
முதிர்ந்த தேடலின் உதிர்வான இப்பாடல்கள், அந்தகாலக் கட்டத்தில், மொழி வேற்றுமையில்லாத வடமொழிச் சொற்களை மிகவும் இலகுவாக, தமிழ்க் கவிதையின் இலக்கணக் கட்டமைப்புக்குள்ளேயே ஆளும் தன்மையைத்தான் காட்டுகிறது. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அருணகிரிநாதரின் சொல்லாட்சியிலும், வடமொழிச் சொற்கள் விரவிக்கிடப்பதை பார்க்கலாம்.
மேற்கண்ட 3-வது பாடல், அருணகிரியாரின், “உருவாய் அருவாய், உளதாய், இலதாய்” என்கிற பாடலை ஒட்டியிருந்தாலும், இறைவனை, இவன் என்று கட்டம் கட்டாமல் பாடியிருப்பதிலிருந்து, அவரின் சமயம் தாண்டிய சிந்தனையையும், நோக்கினையும் காட்டுகிறது
பழுத்த சைவப்பிள்ளையான தாயுமானவர், தான் சார்ந்திருந்த சைவ சமயத்தைத் தாண்டிய சிந்தனகளைக் கொண்டிருந்தது, பிற்காலத்தவரான வடலூர் மகானான வள்ளலார் சுவாமிகளுக்கு, முன்னோடி என்றே கொள்ளலாம்..
இவருடைய துறவு எண்ணத்துக்கும், சமய சிந்தனை வளர்ச்சிக்கும், கவிதா மேதைக்குமான உந்துதலும், எழுச்சியும் எவரிடமிருந்து கிடைத்தது என்கிற கேள்வி தோன்றுகிறது! ஓரளவுக்கு அருணகிரியாரின் தாக்கம் இவருடைய பாடல்களில் தொனிக்கிறது..
எந்நாள்? கண்ணிகளில், அடியார் வணக்கம் பகுதியில் தேவார நால்வர்,பட்டினத்தார் பத்ரகிரியார், சிவஞான போதம் எழுதிய மெய்க்கண்ட சிவவாக்கியர், திருமூலர், அருணகிரியார் இவர்களை குறித்திருந்தாலும், குறிப்பாக,
“கந்தர் அநுபூதி பெற்றுக் கந்தர் அநுபூதி சொன்ன
எந்தை அருள்நாடி இருக்குநாள் என்னாளோ”
என்று அருணகிரியாரைக் குறித்துப் பாடியிருப்பதும், தன்னுடைய பாடல்களில், “சும்மா இரு” என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருப்பதும், இவர் அருணகிரியாரின் பாடல்களில் தோய்ந்திருந்தது தெரியவருகிறது. இவருடைய ஞானகுருவாக சிராப்பள்ளி மலையில் இவருக்குமுன் தோன்றி ஆட்கொண்ட மௌனகுருவும் அதுவே போதித்ததையும் படிக்கும் போது, இவருடைய குருவே அருணகிரியாராக இருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது. அல்லது அருணை முனிவரின் குரு-சிஷ்ய பரம்பரையில் வந்திருக்காலாமோ என்றும் நினக்கத்தோன்றுகிறது .
எழுத ஆரம்பித்தால்வளர்ந்துகொண்டிருக்கிறது. மகான்களைப் பற்றி, படிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும்ஏராளமான செய்திகள்இருக்கின்றன. இருந்தாலும், இப்போதைக்கு இவ்வளவில் முடித்துக்கொண்டு, தாயுமானவர்பாடல்களைப்படிக்குந்தோறும், பகிர்ந்துகொள்ள மீண்டும்எழுதுவேன்…!
திங்கள், 11 மே, 2009
டென்ஷன் (சிறுகதை)
ஒருவழியாக அன்றைய வேலையெல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது, மது, கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் இரவு 8.30.
நடு ஹாலில் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, கைகளை மேலே தூக்கிக்கொண்டு பின்னலாக நெட்டிமுறிக்கும் பாவனையிலேயே, எதிரே ஓடிக்கொண்டிருந்த டீ.வி.யின் பிம்பங்களை மனதில் வாங்கிக்கொள்ளாமல்,வெற்றாகப் பார்த்துக் கொண்டிருந்தவனை,.. கல்யாணியின் குரல் வெகு தூரத்தில் ஒலித்து, பிறகு மெல்ல கிட்டே வந்து,..
"என்ன மது.. கேட்கக் கேட்க காதிலேயே விழலியா..? ரொம்ப டயர்டா? .." - எழுப்பியது!
"ஆமா.. ரொம்ப லாங் டே இன்னைக்கு.. இங்கைக்கும் அங்கைக்குமா கார் ஓட்டி ஓட்டி, கை காலெல்லாம் கெஞ்சறது.. ஏதாவது உருப்படியா நடந்துதான்னு கேட்டா.. "எதுவுமில்ல.. சே! என்ன ரெச்சட் லைஃப் இது" -- மது அலுத்துக்கொண்டான்.
"என்ன ஆச்சு இன்னிக்கு? "அந்த லெஸ்லியோ.. புஸ்லியோ.. அவள பாக்கப் போனேளே.. ஏதாவது உருப்படியா நடந்ததா? என்ன சொல்றா அவோ..?"
"என்ன சொல்லப்போறா! அதே ரெண்டு கதைதான்! சம்பளம் கொடுக்கற கம்பெனியான்னா, அவா கேக்கற போஸ்ட்டுக்கு ஏத்த எக்ஸ்ப்பீரியன்ஸ் அட்சரம் பிசகாம வேணுங்கறா.. இவொகிட்ட வேல இருக்கு.. ஆனா பணமில்ல கொடுக்கறதுக்கு.. ஸ்வெட் எக்விடியாம்! கம்பெனில 1% தராளாம்.. ரொம்ப தாராளம்!
வேலப்பண்ணு.. டீம் வொர்க், அது இதுன்னு தேனொழுகப் பேசறா.. ப்ச்.. ஒண்ணும் க்ளியரா இல்ல கல்யாணி...இன்னும் எத்தன நாள் இப்படி தள்ளணமோ.." - மதுவின் முகத்தில் வெறுப்பும், குரலில் விரக்தியும், ஒன்றாக அவனது மனதை சோக வெளிச்சத்தில் காட்டின.
"என்ன பண்றது மது! நெறயபேர் நெலமை இப்படித்தான் இருக்கு. ஆனா.. ஆதெப்படி..? உங்க ·ப்ரண்ட்ஸூக்கெல்லாம் வேல இருக்கு.. உங்களுக்கு மட்டும் இப்படி? எனக்கென்னவோ.. நம்ப ரெண்டுபேர் ஜாதகமும் சரியா பொருந்தலன்னுதான் படறது."
இது கல்யாணியின் ஆறுதலா.. அலுப்பாவென்று தெரியாமல் மது புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்துவிட்டு, மீண்டும் குனிந்து, தலையைக் குறுக்காக ஆட்டிக்கொண்டான்; கூடவே மௌனமாக… “ஆமாம் இன்னும் என்னோட ரிடயர்மெண்டுக்கு அப்புறம் இதையே சொல்லிண்ட்ரு..” தனக்குள்ளாக முணுமுணுத்துக்கொண்டான்.
கல்யாணி, அதை கவனிக்காமல், கொத்தவரைக்காயை ஆய்ந்துகொண்டே,
"மது, நாளைக்கு ஜிண்டாவுக்கு..(மது-கல்யாணியின் ஒரே பெண் சின்மயி - “சின்” ஆகச்சுருங்கி, “ஜின்” ஆகத் திரிந்து, ஆண்பிள்ளை இல்லாத குறைக்கு 'டா' சேர்க்கப்பட்டு, தற்போது செல்லப் பெயர் ஜிண்டா) சம்மர் காலேஜிக்கு அட்மிஷன் டெஸ்ட் இருக்கே.. 8 மணிக்கு அங்க இருக்கணும்.. எனக்கு கார்த்தால கஸ்டமர் மீட்டிங் இருக்கு.. நீங்கத்தான் அவள கூட்டிண்டு போகணும்"..
- அன்புக் கட்டளையுமில்லாமல், அதிகாரத் தொனியுமில்லாமல், இரண்டும் கெட்டானாகக், கல்யாணி சொல்கிறாள்.. சொன்ன விதத்திலேயே.. மதுவுக்கு, எந்த சாய்ஸூம் கொடுக்கப்படவில்லை என்று தெரிந்தது..
"என்ன கல்யாணி, நாளைக்கு, ஸ்கூல் ஃபைனல்ஸ்.. எட்டரை மணிக்கு எட்டாங்க்ளாஸ் பசங்களுக்கு 'மேத்' (math) எக்ஸாம் வெச்சிருக்கேன்.. நான் எப்படி லேட்டாகப் போகமுடியும்? இப்படி கடசீ நிமிஷத்தில சொல்றியே..! சரி சரி.. யாராவது பண்ணத்தானே வேணும்… கொஞ்சம் சீக்கிரமா கெளம்பி ஏழே முக்காலுக்கே விட்டுட்டன்னா, கரெக்ட் டைமுக்கு ஸ்கூலுக்குப் போயிடுவேன்.."
- எரிச்சலும் கோபமும் இருந்தாலும், தவிர்க்கமுடியாத விஷயம் என்று புரிந்துகொண்டு, தனக்கு தோதானதைச் கல்யாணியிடம் சொல்ல ஆரம்பித்து, அவள் கவனம் கொத்தவரைக்காயில் இருக்கவே, தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான் மது..
20 வருடம் ஐ.டி. தொழிலில் கொடிகட்டிப் பறந்துவிட்டு, 9/11, மற்றும், அமெரிக்கப் பொருளாதார சரிவில், தன்னுடைய வேலையைத் தொலைத்துவிட்டு, 'அப்ளை.. அப்ளை- நோ ரிப்ளை' என்று விரக்தியிலிருக்கும் எண்ணற்ற மிடில் மேனேஜ்மெண்ட் அன்-எம்ப்ளாயிடுகளில் ஒருவன் மது. மார்ட்கேஜ், வளர்ந்துவரும் பெண்ணின் படிப்பு, என்ற பலவித கட்டாயங்களில் மாட்டிக்கொண்டு, விட்டு ஓடவும் முடியாமல், இருந்து தவிக்கவும் முடியாத திரிசங்கு நரகத்தில் உழண்டு கொண்டிருக்கும் ஏராளமான கலிஃபோர்னிய இந்தியர்களின், ஸாம்பிள்தான் மது..
ஆனாலும், கைக்குக் கிடைத்த மிடில் ஸ்கூல் (6 முதல் 8-ம் வகுப்பு வரை) கணக்கு மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர் வேலையை ஒத்துக்கொண்டு, கடந்த ஆறுமாதமாக, இதைத்தான் செய்து வருகிறான். தன்னுடைய கடைசீ சம்பளத்தில் நான்கில்ஒருபங்கு கூட இந்த வேலை தராமல் போனாலும், பொழுதை உருப்படியாகப் போக்கவும், தன் பங்குக்கு, கொஞ்சம் நிதி சுமையை குறைக்கலாமே என்றுதான் இந்தவேலைக்கும் சேர்ந்திருக்கிறான்..சம்பளம் குறைவாக இருந்தாலும், அவனுக்கு ஆசிரியத்தொழிலில் ஒரு நிறைவு இருக்கத்தான் செய்தது..
ஏதோ உள்ளுணர்வு.. நாளைய பொழுது ஒரே டென்ஷனாக விடியப்போகிறது என்று..
ஸ்கூலிலிருந்து வந்தவுடன், 4.30-ஐ மணிக்கு ஸன்னிவேலுக்கு ஓட வேண்டும். என்னிக்கும் இல்லாத திருநாளா..ஒரு ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் வேலை வரும் போல இருக்கு, இவனுடைய பழைய நண்பன் மூலமாக.. இதுக்கு நடுவில்.. ஜிண்டாவை பாட்டு க்ளாஸில வேறு விட்டுட்டுச் செல்லவேண்டும்.. எல்லாமே.. ஒன்றுக்குப்பிறகு மற்றொன்று என..ஆகமொத்தம், தலையைப் பிய்த்துக் கொள்ளவைக்கும் நாளாகத்தான் இருக்கப்போகிறது...
"ஜிண்டா.., நம்பர் 2 பென்சில் எடுத்து வெச்சுக்கோ.. பிக்சர் ஐ.டி-யையும் பத்திரமா பர்ஸில் வெச்சுக்கோ.. கடைசீ நிமிஷத்தில எல்லாத்துக்கும் பறக்காதே.." கடமைக்கு சொல்லிவிட்ட திருப்தியில், மது தூங்கச் சென்றான்.
ஜிண்டா எதற்கும் அசைந்து கொடுப்பவள் இல்லை.. ஸீனியர் வருஷத்தில் நுழையப் போகும் அவளுக்கு, பகல் கனவு முழு நேரத் தொழில்..! படிப்பு பொழுது போக்கு.. பாட்டு, ட்ராமா, படம் வரைவது என்று மத்த விஷயங்களில் இருக்கும் கவனம் படிப்பின் மேல் சுத்தமாகக் கிடையாது.. மதுவுக்கும், கல்யாணிக்கும், இவள் மற்ற இந்தியக் குழந்தைகளைப் போல படிப்பில் சூட்டிகையாக இல்லையே என்னும் வருத்தம் மிகவும் உண்டு..!
பொழுது முழுவதும் விடிவதற்கு முன்பாக எழுந்து, குளித்துவிட்டு, குட்டியாக விநாயகருக்கும் ஸ்லோகம் சொல்லி, பூ போட்டுவிட்டு, ஜிண்டாவை எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு, குப்பை எடுக்கும் தினத்துக்காக, குப்பைத் தொட்டியெல்லாம் காலி செய்து, வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு.. ஜிண்டாவை அவசரப் படுத்தினான் மது..
ஜிண்டா ஆடி அசைந்து நிதானமாக எழுந்து.. தூக்கக் கலக்கத்திலேயே பாத்ரூமிற்கு ஊர்ந்து,ப்ரஷ்ஷை எடுத்து அதில் பேஸ்டை அமுக்குவது, இன்னும் ஸ்லோமோஷனில் தெரிந்து.. மதுவுக்கு டென்ஷன் ஆரம்பித்தது.. மெதுவாக குரலை உயர்த்தி.. "ஜிண்டா.. மணி ஆறு ஆகறது.. ரொம்ப டயமில்ல.. கொஞ்சம் வேகமா எல்லாத்தையும் செய்யறியா..? நான் டென்ஷனோட வண்டி ஓட்டமுடியாது..! தெரியறதா..?"
ஜிண்டா.. அவள் நிதானத்திலேயே பதில் சொன்னாள்.. "சரிப்பா.. (வல்லின சகாரம்!) எட்டூருக்கு ரெடியாயிடுவேன்.." அவள் கல்யாணியின் திருநெல்வேலி பேச்சு/ உச்சரிப்பு வழக்குகளை பொருத்தமாக சொல்லக் கற்றிருந்தாள்..!
மது, கம்ப்யூட்டரை ஆன் செய்து.. மெயில் மற்றும், அன்றைய செய்திகளைப் படிக்க ஆரம்பித்தான்.. "சே.. எல்லாம் 'தண்ட' மெயில்.. ஒதவாக்கரை ந்யூஸ்தான்....
அலுப்புடன் கம்ப்யூட்டரை ஆணைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான்.. மணி 7..
"இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்ப வேண்டும்.. இந்த பொண்ணு என்ன பண்றது.. ? ஜிண்டா.. என்ன ரெடியாயிட்டயா..? சீரியல்லாம் சாப்பிட்டாச்சா.. பென்ஸில் பேனா எடுத்திண்டயா..? ஐ.டி-யெல்லாம் பர்ஸ்ல எடுத்து வெச்சிண்டயா..?" - மதுவின் குரலில் பொறுமையை இழக்கப்போகிற அவசரம் தெரிந்தது.
ஜிண்டா.. குளியலறையில் இன்னும் அலங்காரம் செய்துகொண்டு.. ஷகீராவின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்..
மது பொறுமையை இழந்து.. "காலைலேந்து, என்ன எழவு பாட்டுடி இது.. ஆமா, எந்துக்கு இவ்வளவு நேரம் அலங்காரம் பண்ணிக்கற கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்க வர்ரா மாதிரி...!. நான் ஒங்கிட்ட சொன்னது என்ன..? நீ பண்றது என்ன..? ப்ரேக் ·பாஸ்ட் முடிச்சுட்டு வேணுங்கற எல்லாத்தையும் எடுத்து வெச்சிக்கச் சொன்னனா..? இல்லியா..? நீ என்னடான்னா.. ஒருமணி நேரமா.. அலங்காரம் பண்ணிண்டிருக்க..!
ஒனக்கு எதாவது சென்ஸ் ஆ·ப் டைம், ப்ரபோர்ஷன் இருக்கா..? சே.. ஒரு பதினஞ்சு வயசு பொண்ணுக்கு கொஞ்சமாவது பொறுப்பு, ரெஸ்பான்ஸிபிலிட்டி வேணாம்.. போடி.. போ..எனக்கு வர்ர கோபத்துல ஏதாவது சொல்லப்போறேன்.." - கொஞ்சமாகக் குரலை உயர்த்தினான்..
ஜிண்டா.. முணுமுணுத்துக் கொண்டு வெளியே வந்து.. சமயலறைக்குள் சென்று, ஒரு போர்சிலேய்ன் பௌவுலில் (bowl) சீரியலைக் கொட்டிக் கொண்டு, பாலை அதன் தலையில் கொட்டி அபிஷேகம் செய்து, ஒரு ஸ்பூனையும் எடுத்துக் கொண்டு, சோபாவில் டீ.வி. முன்னால் உட்கார்ந்து கொண்டு எம்.டீ.வி சேனலை ஆன் செய்யவும், மதுவுக்கு இரத்த அழுத்தம் எகிறியது..
மிகவும் அன்புடன்.. "அறிவு கெட்ட சனியனெ.. ஒனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? இப்ப என்னடீ.வி. வேண்டியிருக்கிறது? டீ.வியை அணச்சிட்டு சீரியல சாப்பிட்டு முடி.."- மதுவின் குரல் மேல் ஷட்ஜத்துக்குத் தாவியது..
ஜிண்டா.. மிகவும் அமைதியாக..," டீ.வி.யை அணச்சிட்டா.. சீரியல் முடிஞ்சிருமாப்பா.."
- இதுபோல அசந்தர்ப்ப அசட்டு ஜோக்குகளுக்கு தன்னுடைய "ஜீன்" தான் உபயம் என்பதை புரிந்துகொண்ட மது.. சிறிது குளிர்ந்தான்..
ஒருவழியாக.. ஜிண்டாவைக் கிளம்பச்செய்து காரில் ஏறும் போது, நேரம் 7.35. ஏறும் போதே,காரில் வழி நெடுக, அப்பா தனக்கு அட்வைஸ் செய்யப்போவதை உணர்ந்துகொண்டதாலோ என்னவோ.. தன் காதுகளை தற்காலிகமாக அணைத்துவிட்டு, மனதுக்குள் ஷகீராவை ஓடவிட்டாள்.. மதுவும் வழி நெடுக..ஜிண்டாவின் விளையாட்டுப் போக்கினையும், படிப்பில் அவளது மெத்தனத்தையும், அவள் கனவு நிலையிலிருந்து மீண்டு, நிஜ உலகத்திற்கு வரவேண்டிய அவசியத்தையும், சொல்லிக்கொண்டு வந்ததை, வழக்கம் போல ஜிண்டா கனவுலக சஞ்சாரத்திலேயே இருந்து.. ஒருகாதின் வழியே வாங்கி, மறுகாதின் வழியாக விட்டுக் கொண்டிருந்தாள்.
20 நிமிட பயணத்துக்குப் பிறகு, அவளை..அந்த கம்யூனிட்டி கல்லூரியின் ஆபிஸ¤க்குள் சென்று பத்திரமாக விட்டுவிட்டு, கார் பார்க்கிங் இடத்துக்கு வந்தவனது செல் போன் அலறியது...
"ஹலோ மது ஹியர்... என்ன ஜிண்டா..? என்ன இப்போ..? என்ன.. ஐ.டி. கார்டை வீட்ல விட்டுட்டியா..? என்ன ஜிண்டா இது...? நான் ஒங்கிட்ட படிச்சி படிச்சி சொல்லல? இது ஹைட் ஆ·ப் இர்ரெஸ்பான்ஸிபிலிடி..இப்ப ஐ.டி இருந்தாத்தான் டெஸ்ட் எழுத விடுவாளா..?என்னடி இப்படி பண்ற...? நான் வீட்டுக்குப் போய்கொண்டுவரவே 40 நிமிஷம் ஆகுமே!
என்னால இப்ப போகமுடியாது.. வேணும்னா.. லன்ச் சமயத்தில வந்துகொடுக்கறேன்.. உன்னுடைய எக்ஸாம் ப்ராக்டரைக் கூப்பிடு நானே பேசித்தொலைக்கிறேன்...
Hello Ms... Yes..Mrs Natalie.. I can't go and bring her ID in next fifteen minutes.. Yes, I teach in a private school and I have a final to give to my eigth graders, at eight thirty.. I would really appreciate if you can let Jindaa.. I mean Chinmayee, take her test.. Thanks for obliging.. I shall definitely be there by lunch time with her I.D... Yes.. Mrs Natalie I really appreciate your understanding... Can you please put me back with my daughter?..
(ஹலோ.. மிஸ்.. அதாவது.. மிஸஸ் நேட்டலி... நான் பதினஞ்சி நிமிஷத்தில ID-ஐ கொண்டுவருவது முடியாது. நான் ஒரு ப்ரைவேட் ஸ்கூலில் டீச்சரா இருக்கேன்.. என்னுடைய எட்டாங் க்ளாஸ் மாணவர்களுக்கு, எட்டரை மணிக்கு, இன்னிக்கு இறுதித் தேர்வு கொடுக்கணும்,.. ஜிண்டாவை.. அதாவது சின்மயியை, தயவுசெய்து, டெஸ்ட் எழுத விட்டீங்கன்னா, நான் சந்தோஷப்படுவேன்.. அப்படியா.. ஒத்துகிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் லன்ச் நேரத்தில வீட்டுக்குப் போய் ID-ஐ கொண்டுவந்திடறேன்.. என் நெலமையப் புரிந்துகொண்டதற்கு ரொம்ப நன்றி..கொஞ்சம் போனை என் பெண்ணுகிட்ட கொடுக்க முடியுமா..? )
என்ன ஜிண்டா.. நான் பேசிட்டேன்.. நீ இப்ப டென்ஷன் ஆகாம எழுது.. ஆமா.. உனக்கு எங்க டென்ஷன்.. எனக்குத்தான் டென்ஷன்.." - போனை அணைத்து விட்டுகாரை கிளப்பும் போது நேரம் 8.05.
அவசர அவசரமாக ஸ்கூலை அடைந்தபோது மணி 8.30. முன்னெச்சரிக்கையாக, காரிலிருந்து செல் போனில் கூப்பிட்டு சொல்லிவிட்டதால், பள்ளியில் நுழையும் போது பள்ளி ப்ரின்ஸிபலின் உஷ்ணப் பார்வை தவிர்க்கப்பட்டது. அவசர அவசரமாக நுழைந்து இறுதி தேர்வுத் தாளை எட்டாவது வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்வதற்குள்ளாக..ப்ரின்ஸிபல் மிஸ்ஸஸ் ஹைஸர் உள்ளே நுழைந்து, "மிஸ்டர் ரங்கா (மது ரங்கநாதன் என்பதன் இரண்டாம் பகுதியின் சுருக்கம்), கேன் ஐ ஸீ யூ ஃபார் எ மொமெண்ட்?" (உங்களை ஒரு சில விநாடிகளுக்குப் பார்க்கலாமா?)
என்னவோ ஏதோவென்று வெளியே சென்றவனிடம், ஒரு மணிக்கு ஒரு பேரண்ட்-டீச்சர் கான்·ப்ரன்ஸ் இருப்பதாகச் சொல்லவும்.. மென்று விழுங்கி.. மதியம் தன்னுடைய பெண்ணுக்காக கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டியிருப்பதையும், அதனால் திரும்பிவர ஒண்ணரை மணி ஆகுமென்றும் சொன்னான் மது.
மிஸ்ஸஸ் ஹைஸர்.. பெருமூச்சு விட்டு, முன் நெற்றியைச் சொரிந்து கொண்டே... ஆல்ரைட்.. பட், கேன் யூ மேக் இட் பை ஒன் தர்ட்டி?".. - கேட்கும் தொனியிலும், முகபாவத்திலும், மிஸ்ஸஸ் ஹைஸருக்கு சிறிது வருத்தம் இருப்பதை கண்டு கொண்ட மதுவுக்கு.. கொஞ்சம் மறைந்திருந்த டென்ஷன் மீண்டும் தலை காட்டியது..
பனிரெண்டு மணிக்கு அவசர அவசரமாக கிளம்பி வீட்டுக்கு ஓடி, ஐ.டி-கார்டைத் தேடி, கம்யூனிட்டி கல்லூரியை அடைந்து, எல்லாவற்றையும் சரி செய்து கொண்டபின், பெண்ணை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு மீண்டும் பள்ளியை அடையும் போது நேரம் சரியாக 1.25.
நல்லவேளையாக குறிப்பிட்ட நேரத்துக்கு ஐந்து நிமிடத்துக்கு முன் அடைந்த சந்தோஷத்தில் இருந்த போது, மிஸ்ஸஸ் ஹைஸர் எதிர்பட்டு..,
"Sorry Mr. Ranga.. Conference with the parents got cancelled. Moses's father has to be back at work by 2, it seems. Now, we have to reschedule the meeting for someother time..!
(மன்னிக்கணும் மிஸ்டர் ரங்கா.. மீட்டிங் நடக்கப்போவதில்லை. மோஸஸின் அப்பாவுக்கு, 2 மணிக்குள் திரும்ப ஆபிஸில் இருக்க வேண்டுமாம்.. நாம், இந்த பேரண்ட்-டீச்சர் மீட்டிங்கை வேறு ஒரு நாளுக்கு ஒத்திப் போட வேண்டியதுதான்).
... கேன்ஸலுக்கான காரணத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல. மது மேல், மிஸ்ஸஸ் ஹைஸர் சுமத்துவது, அவளது உதட்டு பிதுக்கலிலும், நெற்றிச் சுருக்கத்திலும், வருவித்துக் கொண்ட பெருமூச்சிலும் தெரிய, மதுவின் நெற்றிச் சுருங்கி.. நடு நெற்றியில் சூடு கொப்பளித்தது..
ஒரு வழியாக பள்ளி நாள் முடிந்து, வீட்டுக்குச் சென்று ஒரு குளியலைப் போட்டுவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு, வெளியே கிளம்பும் போது, ஜிண்டா கீழே இறங்கி வந்து..
"அப்பா எங்க போறே..?" - என்று கேட்கவும், மது தலையில் அடித்துக் கொண்டான்..
"மூள இருக்கா ஒனக்கு..? போகச்ச எங்க போகறன்னு கேட்கக்கூடாதுன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்.. சாதரணமா எப்பவுமே “ட்ரீம்” பண்ணிண்ட்ருக்கா மாதிரி இருக்கக்கூடாதா..? முக்கியமா கெளம்பச்சேதானா கேக்கணும்.. சரியான. இவொடி நீ.." அவசரமாகப் பொரிந்து தள்ளிவிட்டு, தண்ணீர் குடிக்க சமயலறைக்குச் சென்றான் மது..
"ஸாரிப்பா..? நீ எங்கேயிருந்து வருவ..?" - ஜிண்டா.. அவனுடைய எரிச்சலை அதிகரிக்கும் படியான அடுத்தக் கேள்வியையும் கேட்க.. மது அவளைச் சுட்டெரிப்பது போலப் பார்த்துவிட்டு.. கராஜுக்குள் சென்று காரைக் கிளப்பினான்..
வழி நெடுக.. காலையிலிருந்து நடந்த விஷயங்களை அசைப் போட்டுக்கொண்டே வந்தவன்..திடீரென்று, தன்னையே சிலுப்பிக்கொண்டு..."சே.. என்ன இது.. பாக்கப் போகிற விஷயத்தைப்பத்தி கொஞ்சம் யோசிப்போம்.. நடந்தத நெனச்சி. டென்ஷன அதிகம் செய்துக்க வேணாம்.." என்று நினத்துக் கொண்டான்..
குரங்கு மனது மீண்டும் மீண்டும் இன்றைய எரிச்சல்களுக்கே தாவிக் கொண்டிருந்தது.. மதுவின் நெற்றி சுருங்கி விரிந்து அந்த எண்ணங்களிலிருந்து விலகப் போராடிக் கொண்டிருக்க..திடீரென்று, ஜிண்டாவை ம்யூஸிக் க்ளாஸில் விட மறந்தது ஞாபகத்துக்கு வந்த அதே கணத்தில்....
"டடங் டங்க்...(அதிக பட்ச சத்ததுடன் மோதல்) க்ளீர்.க்ளு க்ளு.. க்ளிங் (கண்ணாடி நொறுங்கல்).ஸ்க்ரீச்..(அனிச்சையாக் போட்ட ப்ரேக்கில் டயர்கள் ரோடில் உராய்ந்து ஈன சுரத்தில் கார் நிற்பதற்கு முன்னான முனகல்)" பலவித சத்த விநோதங்களோடு கார் நிற்கவும்..மது, அந்த நாலெழுத்து கெட்ட வார்த்தையை.. உரக்க சொல்லி தன்னுடைய கெட்ட நேரத்தை நொந்து கொள்ளவும்...
ஓ.. பக்பக் பக்பக் பக்கும் பக்கும் மாடப்புறா.. டேப்பில் அலறிக்கொண்டு இருந்த பாட்டை நிறுத்தி விட்டு வந்த கல்யாணி பதறி அடித்துக் கொண்டு.. "என்ன மது..? எதுக்கு இப்போ கத்தினேள்..?" மதுவை உலுக்கி எழுப்பினாள். "ஏதாவது கெட்ட சொப்பனமா..? நல்லா இருக்கு.. டின்னர் ரெடி பண்றதுக்குள்ள ஒரு தூக்கம்.. அதில கனவு வேறயா..இது என்ன.. கண்ட கண்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லிண்டு.. ஜிண்டா கேட்கப்போறா..?"
மதுவின் முகம் வியர்த்திருப்பதையும், மார்பு படபடப்பதையும் பார்த்துவிட்டு, கரிசனத்தோடு அருகில் வந்து.. "என்ன மது.. என்ன பிரச்சினை..? எல்லாம் சரியாகப் போயிடும்.. லை·ப்ன்னா.. ஆயிரம் இருக்கும்.. எதையெல்லாமோ மனசுல போட்டுண்டு, அநாவசியமா டென்ஷன் ஆகாதிங்கோ.. ப்ளீஸ்.. சாப்பிட்டுட்டு சீக்கிரமே தூங்கப்போங்கோ.. முகமே நல்லா இல்ல.. நாளைக்கு வேற லாங் டே உங்களுக்கு" கல்யாணியின் கரிசனம் மதுவை ஆச்சரியப்படுத்தி, சுவாசப் படுத்தியது.
கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு...சின்னதாக விபூதிக் கீற்றை இட்டுக்கொண்டு தூங்கப் போன மதுவுக்கு.. கனவுகளில்லா,சுகமான தூக்கம்.
மறு நாள், கனவுலக நைட்மேர் நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக முடிந்தது...
கூடவே ஒரு நல்ல செய்தி, மதுவைப் பொறுத்த வரை..! அந்த ப்ராஜக்ட் வேலைக்கு மது தேர்வு செய்யப்பட்டு, . அடுத்த வாரத்திலிருந்து வேலை ஆரம்பம்..!
புதன், 6 மே, 2009
“தமிழிசைப் பயணம் – பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி, இன்றுவரை”
ஸ்டான்ஃபோர்ட் ரேடியோ-விலே நண்பர் ஸ்ரீகாந்த் ஐந்து வருடங்களுக்கு மேல் நடத்திவரும் “இட்ஸ் டிஃப்” (Itsdiff) நிகழ்ச்சியிலே, என்னை இசை தொடர்பான ஒரு நிகழ்ச்சியை நடத்தித்தர சொல்ல, எனக்கு வெகு நாட்களாய் மனதில் நெருடிக்கொண்டிருக்கிற ஒரு பொருளைப் பற்றி பேசவும், இந்திய கர்நாடக இசை வரலாற்றில், தமிழ் மொழி ஆற்றிவந்திருக்கிற பங்கைப் பற்றியும் பேசவும் ஆசைப்பட்டேன்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று, புதன் கிழமை, “தமிழிசைப் பயணம் – பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி, இன்றுவரை” என்கிற தலைப்பில் சுமார் ஒரு இருபந்தைந்து இசைப் புலவர்கள், வாணர்கள் இவர்களின் இசைப் பங்களிப்பைப் பற்றி சுமார் ஒன்றேகால் மணி நேரம் பேசினோம். முழுவதுமாக எல்லோரைப்பற்றியும் பேசமுடியவில்லை என்றாலும், இதற்காக இன்னொரு நிகழ்ச்சியும் தேவை என்கிற உணர்வோடும், உறுதியோடும் நிறைவு செய்தோம்.
இந்த நிகழ்ச்சிக்காக முதல் நாளிரவு (நள்ளிரவும் கூட), சில பாடல்களைத் தேர்வு செய்து, குறுந்தகட்டில் பதிவு செய்தபோதுதான், இவ்வளவு பாடல்களை சொத்தாக நாம் ஸ்வீகரித்திருந்தும், ஒரு சில பாடல்களை மட்டுமே கச்சேரி மேடைகளின் கேட்கமுடிகிற துர்பாக்கியசாலிகளாக இருக்கிறோமே என்று தோன்றியது. முன்பை விட இப்போது தமிழ் உணர்வு கூடியிருப்பதாகத் தெரிந்தாலும், இன்னும் கச்சேரி மேடைகளை பிறமொழி உருப்படிகளே பாதிக்கும் மேலாக நிரப்பிக்கொண்டிருக்கின்றன.
மொழி, இசையென்னும் ஆத்மாவுக்கு மேல் போர்த்திய தோல்தான்! நான் எல்லா மொழிகளையும் ரசிக்கிறேன். மொழி என்பது, கருத்துப் பறிமாற்றக் கருவி மட்டுமே என்றும் உணருகிறேன். ஆனால் ஆந்திர தேசத்திலோ, கேரளாவிலோ, கர்நாடகாவிலோ மற்ற மொழிப் பாடல்களை அதிகமாகப் பாடிப் பார்க்கட்டும் நம் கலைஞர்கள்!
கேரளத்தில் கர்நாடக இசைப் பரவலாக எல்லா சமயத்தவரையும் சேர்ந்திருப்பது, மண்ணின் மொழியால்தான்! பரவலான சமூகத்தை எந்த ஒரு பொருளும் சேர வேண்டுமென்றால், அந்த சமூகம் புரிந்துகொள்ளும் மொழியிலேயே அது சென்று சேர வேண்டும்! இந்த செய்தியை அந்த நாளைய பல்லவ மன்னர்கள் தொடங்கி, நாயக்க மன்னர்கள், மராத்திய மன்னர்கள் இறுதியாக எல்லோரும் புரிந்து கொண்டிருந்தார்கள்.
ஆளுவதற்கு பொதுமக்களின் மொழியும், அரசவைக்கு தங்கள் சொந்த மொழியையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். பண்டிதர்களும், அமைச்சர்களும் அரசவை மொழியிலும், அறிஞர்களின் பொது மொழியாகக் கருதப்பட்ட ஸமஸ்க்ருததிலும் தங்கள் கருத்துப் பரிமாற்றங்களையும், இலக்கியப் படைப்புகளையும் செய்து கொண்டிருந்தார்கள். பாமர மக்களுடனான தொடர்புகள் அவரவர் மொழியிலேயே செய்யப்பட்டன.
தஞ்சையிலும் மதுரையிலும் நாயக்க, மற்றும் மராட்டிய ஆட்சி மலர்ந்த பிறகு, நிச்சயமாக தெலுங்கு மொழிக்கான ஆதரவும், அதைப் பேசிய பண்டிதர்களுக்கான ஆதரவும் பெருகியதும் அதன் காரணமாக பெரும்பாலான இசை, நாட்டியக்கலை தொடர்பான படைப்புகள் தெலுங்கில் படைக்கப்பட்டதும், வரலாறு அடிக்கோடிடும் உண்மைகள். கூடவே, தமிழ் அறிஞர்களும், அவர்களது படைப்புகளும் இரண்டாம்தர குடிகளின் நிலைக்குப் போனதும் உண்மை.
இந்த கலாச்சார, மொழிக் கலப்புகள், அடிநாதமாக நமது கலைகளை செழுமைப் படுத்தியிருந்தாலும், நமது தனித்தன்மை, இழக்கப்பட்டு, மறக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டதும் உண்மை. இவை பெரும்பாலான தமிழர்களை நமது பாரம்பரிய இசை என்று பெருமைப்படக்கூடிய கர்நாடக இசையிலிருந்து தொடர்பறுத்திருப்பதும் உண்மை.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லிக்கொண்டே, நம் மக்களை, தங்களின் உண்மையான கலாச்சார அடையாளங்களிலிருந்தும், ஏன் தமிழ் மொழியிலிருந்துமே விலக்கி வெகு தூரம் இட்டுச் சென்றுவிட்ட, கழக ஆட்சிகளின் தொடர்ச்சியும் இவற்றுக்கெல்லாம காராணம் என்பது வரலாறு காட்டப்போகும் உண்மை.
கலைஞர்களுக்கு தமிழ் மொழியில் பாடுவது கௌரவமாக இல்லாமல் இருக்கலாம், அல்லது சமகலைஞர்களின் அங்கீகாரத்தை, பெற்றுத்தராமல் இருக்கலாம், அல்லது இதுதான் கலை, இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறைகளை உண்டுபண்ணிக்கொண்டு, அதிலிருந்து வெளிவருவது தொழிலைப் பாதிக்கலாம் என்கிற பயமாக இருக்கலாம். எதுவாயிருந்தாலும், அவர்கள் உள்மனதுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, அவர்களின் சொந்த மொழியில் பாடும்போது இருக்கும் புரிதலும், ஈடுபாடும், மற்றமொழிகளில் பாடும் போது இல்லை என்கிற உண்மைதான்.
நமது இசைக்கலை அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கொடிக்கட்டி வருமானத்தை தந்தால் மட்டும் போதாது. நமது ஆறு கோடிக்கும் அதிகமான தமிழ் சமுதாயத்தை ஒன்று சேர்ப்பதாகவும், அவர்களையும் நமது இசையில் ஈடுபாடு கொள்ளவைப்பதாயும் இருக்கவேண்டும். வணிகமாகவே வைத்துக் கொண்டாலும், இது பெரிய வணிக தளம் இல்லையா?
சங்கபாடல்களிலிருந்து தொடங்கி, இன்றைய நாள்வரையிலான இசைவாணர்கள், இன்னிசைப் புலவர்களின் உருப்படிகளை எல்லோருக்கும் நமது இசையின் கட்டமைப்பிலேயே கொண்டுசென்று சேர்க்கவேண்டும். இசை எல்லோரையும் சென்றடைந்து விட்டால், மொழி என்னும் பொய்த்தடை மறைந்து விடும். மக்கள் மற்ற மொழிக் கவிகளை, அவர்களின் படைப்புகளையும் உயரிய புரிதலோடு இரசிப்பார்கள் என்பது நிச்சயம்.
15-ம் நூற்றாண்டு தொடங்கி நமது தமிழக அரசியலையும், நம்மை ஆண்டவர்களையும், அவர்கள் காலம் தொடங்கி, இன்று வரையிலான கால கலை வளர்ச்சியையும் பற்றி சரியான ஆய்வு தேவை. நேரமும், தேவையான ஆய்வு தளமும் அமைந்தால் கட்டாயம் செய்யவேண்டுமென்கிற ஆர்வம் இருக்கிறது.
மறந்தேவிட்டேனே..! அந்த வானொலி நிகழ்ச்சியின் ஒலிப்பதிவும், யூ-ட்யூப் பதிவுக் கீழ்காணும் வலைத்தொடர்பில் உள்ளன. முடிந்தால் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்!
http://www.itsdiff.com/
திங்கள், 27 ஏப்ரல், 2009
மெய்ப்பொருள் - விமரிசனம்
ஸாம் (நியூரோ ஸர்ஜன்), மனைவி தேவி (தென்றல் மாத இதழின் நிருபர்), இவர்களின் நண்பன் விஸ்வா, விண்வெளி இயல்பியல் (அஸ்ட்ரோ பிஸிஸிஸ்ட்) விஞ்ஞானி ராஜன் என்னும் நால்வரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது. தவிர விஸ்வாவின் காதலி லக்ஷ்மி (கொசுறு), ஸாமின் பெற்றோர்கள், மனோத்ததுவ நிபுணர், முதலில் வந்து கொலையுண்டு போகும் தம்பதியினர், அவர்களின் குழந்தை, குழந்தையைக் கடத்தி செல்லும் வெள்ளைக்காரப் பெண்மணி, மூளை அறுவை சிகிச்சைக்காக வரும் சிறுமி, அவளின் பெற்றோர்கள், தென்றல் பத்திரிக்கையின் குழு, போட்டி நிருபிணி(?), சர்ஜரிக்காக அமெரிக்கா வரும் தமிழ்ப்பட ஹீரோ தரன், என்று இணைப்பாத்திரங்கள் கதை நகர்த்திகள்!
நடித்தவர்கள் எல்லோருமே புதுமுகங்கள், என்பதுடன் படத்தயாரிப்பிலும் பங்களித்திருக்கிறார்கள். இயக்குநர்களான நாட்டிகுமாரும், க்ரிஷ் பாலாவும், இணை இயக்குநர் நாராயனும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். செயற்கைத்தனம் இல்லாத இயல்பான நடிப்பு. மிகவும் தேர்ந்த நடிகர்களே இறுக்கமான உணர்ச்சிகளை காட்டும்போது, சமயங்களில் கேலிக்கூத்தாக ஆகிவிடுவது உண்டு. ஆனால், இந்த மூவர் கூட்டணி அதிலும் சாத்திருக்கிறது. க்ரிஷ் பாலாவுக்கு கதாநாயக பாத்திரம் கொஞ்சம் “ஓவர்லோட்”-தான். சில இடங்களில் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும், நிறைய இடங்களில் அளவாக நடித்திருக்கிறார்.
அனுஷாவுக்கு அழகான, துறுதுறுவென்னும் முகம், துள்ளலான உருவம் என்றிருந்தாலும், நடிப்பில் ஒரு செயற்கைத்தனம், நம்பகமின்மை தெரிகிறது. தங்கள் நடிப்பில் கவனம் செலுத்திய இயக்குநர்கள் சக நடிகர்களின் மீது சரியான கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவோ, வெளியீட்டாளராகவோ வரும் நபர், நன்றாக தமிழ் பேசுபவராக இருந்திருக்கக் கூடாதா?
உளவியல் சார்ந்த திரில்லர்கள் எடுப்பதற்கு, நல்ல பரந்த,, ஆழ்ந்த படிப்பும், புரிதலும், ஆராய்ச்சியும், நம்பத்தகுந்த கதைக்கோர்வையும் தேவை. இவைகள் எல்லாமே இக்குழுவிடம் இருக்கிறது என்று தெரிகிறது.
கதை என்ன? மூச்! முழுவதும் சொன்னால் மெய்ப்பொருளைக் காண்பது எப்போது…! நன்றாகப் படித்தவர்கள் கூட சில சமயங்களில் தங்களுக்கு வரும் செய்திகளை, செய்தியின் நம்பகத்தன்மை, சொல்பவரின் நம்பகத்தன்மை, என்று ஆராயமல் அப்படியே நம்பிவிடுவதால் விளையக்கூடிய விபரீதங்களை சுட்டுவதே இக்கதையின் அடியிழை!
மீதியை “வெள்ளித்திரையில் காண்க” என்பதைவிட முழுவதுமே வெள்ளித்திரையில் காண்க!
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” –
வித்தியாசமான முயற்சி என்பதாலேயே, சில குறைகள் இருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி!
ஸான் ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிற க்ரிஸ் எல்ரிட்ஜ், பின்னணி இசையமைத்திருக்கும் ஜான் மஸே, படத்தொகுப்பு செய்திருக்கும் B.லெனின் எல்லோருமே, படத்தின் தொய்வில்லாத கதை நகர்வுக்குக் காரணம்! பாடல்கள் இல்லாத தமிழ்படமா? இதிலும் உண்டு.. ஆனால் ஆங்கிலப் படங்களைப் போல பின்னணி இசையாக மட்டுமே சேர்த்திருப்பதும், மாண்டேஜாகக் காட்சிகளை அமைத்திருப்பதும் வித்தியாசம்தான்..!
கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஸேன்ஹோஸேயில் ஐஎம்ஸீ-6 திரையரங்கில் வெளியிடப்பட்ட முன்னோட்டக் காட்சிக்கு குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் என்று நல்ல கூட்டம். இந்தப்படம் சென்னை போன்ற மாநகரங்களில் கட்டாயம் வெற்றி பெறும் சாத்தியக்கூறு உள்ளது.
இந்த படத்துக்கான விழுக்காடு என்று பார்த்தால் 70% கொடுக்கலாம்!
