ஜூலை 20, 2019

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாமதமாக வந்தாலும் தமிழென்ன, கசக்கவா போகிறது?


அமரேசன் எழிற்கோல
……அழகதனைக் காண்பதற்கு
எமக்கென்றோ அருள்புரிவான்
……என்றேங்கிக் காத்திருந்தேன்
நிமலனந்தக் குறையென்னில்
……நீளாமல் நிறையளித்தான்
தமதுருவை தண்பனியாய்
……சமைந்திருக்கும் பேரழகைக்                    8
காட்டியுளம் கனியவைத்தான்.
……கண்களில்நீர் பெருகவைத்தான்
கூட்டியருள் கோடிசென்மக்
……குறையாவும் குலைத்தென்னை
வாட்டியவை, வாடிவிடும்
……வகையன்றோ செய்துவிட்டான்
ஆட்டுவிப்பும் அவன்செயலே
……அருளளியும் அவன்செயலே!                    16
வரப்பணித்து வரந்தந்த
……வல்லானை மனத்திருத்தி
கரங்குவித்துச் சிரங்கவித்தேன்
……கழல்பணிந்து கண்மூடி
அரனேயென் அமரேசா!
……ஆக்கியிந்த அண்டத்தைப்
புரக்கின்ற போதமுதே
……புரமெரித்தப் புண்ணியனே!                     24
சிந்துநதி தழுவியோடும்
……திருமேனி அழகோடு
எந்தையன்னை உமைக்குந்தன்
……ஏகாந்த உபதேசம்
தந்தஞான சத்குருவே!
……சரணமுன்றன் தாளிணையே!
சிந்தையிலே நின்றுநீயே
……சீர்செய்வாய் சிவபரனே!                          32
பணிபூண்ட பரமவுனை
……பாடிநிதம் பரவிடப்பா
வணியெனக்கு வழங்கிடுவாய்
……வண்டமிழாய் வந்தருள்வாய்
அணிபிறையா ஆடலீசா
……அகமேவு மமுதீசா
தணிந்தென்றன் தாபமெல்லாம்
……தளையறுத்தாள் வாயெனையே               36


ஜூன் 24, 2019

ஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்...


ஜூன் 24 - கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்... ( ஜூன் 23, 2019-ல் எழுதியது)

கவியரசன், கவிப்பேரரசன், எல்லாமே என்றும் கண்ணதாசன்தான். இவர் எழுதிய பழைய திரைப்பட பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்தான், அந்த திரையுலகப் பொன்னாட்களை நினைக்கும்போதெல்லாம், "வசந்தக் காலம் வருமோ" என்னும் கவிஞர் சுரதாவின் பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன.

வண்ணவண்ண சொற்குவியல்
....வகைவகையாய்ப் பாடல்கள்
எண்ணியென்றும் உள்மகிழும்
....இன்பவெழில் சித்திரங்கள்
பண்ணிசைந்த பாப்பூக்கள்
....பார்முழுதும் பவனிவரும்
கண்ணதாசா உன்பெயரை
....காலமெலாம் சொல்லிநிற்கும்


புண்ணியமாய் பாரதத்தாய்ப்
....புதல்வனாகப் பெற்றெடுத்த,
கண்ணியனே கண்ணதாசா
....கருத்தினிலே நின்றநேசா
மண்ணுலகில் வளர்தமிழில்
....மாரியெனப் பொழிந்தவனே
விண்ணுலகும் வியக்கவங்கு
….வியன்கவிகள் செய்கிறாயோ?

நினைவினிலே நித்தியமாய்
....நின்றுளத்தில் நெகிழவைக்கும்,
அனவைரையும் அன்றாடம்
....ஆனந்தக் கடலாழ்த்தும்,
தினையளவுக் கருத்தினையும்
....திறமையாயுன் சொல்லழகில்
பனையளவு உயர்த்திவிடும்,
....பாங்குண்டே உன்றமிழில்

அருத்தமுள்ள இந்துமத
....ஆழமான அனுபவங்கள்
கருத்தொடுநீ சிந்தித்து
....கச்சிதமாய் எழுதிவைத்தாய்!
விருப்போடு படித்தறிந்து
....வியந்தவர்கள் எத்துணப்பேர்!
குருவாக உளக்குன்றின்
....கொடுமுடியில் தங்கிவிட்டாய்!

நறும்பாகோ நாவொடுதான்!
.... நறுமணமோ நாசியொடாம்!
பெறுகின்ற செவியமுதும்
....பேறான கண்ணொளியும்
அறுகின்ற பிறவியிதில்
....அணுத்துளியே ஆயினுன்றன்
சிறுகவியும் ஜெயித்திருக்கும்
.... செகயிறுதி நாள்வரையில்!

கண்ணதாச! கல்வியினால்
....கனிந்ததல்ல உன்பாட்டு
எண்ணத்தின் எழுச்சியிலே
....ஏற்றிவைத்த எழிற்சுடராம்!
புண்ணியமாய் இவ்வுயிரில்
....புகுந்துன்றன் புலமையின்பம்
உண்ணுகின்ற உவப்பளித்தாய்
....உள்ளளவும் உனைநினைப்பேன்!

டிசம்பர் 25, 2018

ஸ்ரீஶைல மல்லிகார்ஜுனப் (திருபருப்பதத்தார்) பதிக அந்தாதி)

திருபருப்பதத்தார் பதிக அந்தாதி  (ஸ்ரீஶைல நாதர் மல்லிகார்ஜுனர்)
----------------------------------------------------------------------------------------

பருப்பதத் தார்பாதம் பாடிப் பணிந்தேன்
அருளுற்றேன் ஆருத்ரா அன்று - கருணைப்
பிரமராம்பி கைவிழிப் பேறுற்றேன் - என்றன்
சிரமுற்ற தேசெல்வச் சீர் -1

சீரடைய யாம்பெற்ற சென்மமுன் சேவடியை
ஆரத் தழுவவன்றே ஐயனே - பாரமென
நீரெம்மைத் தள்ளுதல் நீதமன்றே! நீருண்ட
காரெனவே பெய்க கரம் -2

கரம்பெற்ற சீராலே கைதொழவென் கண்கள்
பரனுன் பருப்பதத்தைப் பார்க்கும் - அரனே
வரமென்று நின்திரு வாயிலிலே என்றும்
சிரந்தாழ சீரொன்று செய் -3

செய்வது உம்சேவை! சேவித்தல் உம்பாதம்
மெய்யனே நீயெமை மேன்மைசெய் - வெய்வினை
நொய்மையின் பாழகற்றி நுங்கருணை ஊற்றெனக்குப்
பெய்தருளே பெம்மானே பேறு -4

பேறும்நீ பெற்றியும்நீ பிஞ்சகா நீயன்றி
நாறுவ தார்க்குமே நண்ணுமோ? - வேறுயார்
வீறுடன் எம்மை விளங்கவைக்க? சேகரனே
ஆறும்நீ! ஆற்றாமை ஆற்று! -5

ஆற்றலும் நின்கொடை அன்போ டணைத்தெமை
தேற்றலும் நின்னருட் செய்கையே! - மாற்றமும்
ஈற்றுமில் ஏந்தலே ஈசனே - எம்மிறைநீ
தோற்றத்தின் முன்பாய தொல் - 6

தொல்லோய் அடியார்க்குத் தொண்டாற்றும் தூயனே
அல்லகற்றும் ஞானபானு ஆரியனே - வல்லோனே
சொல்லற் கரியபெருஞ் சோதியே! வேண்டினேன்
வெல்லும் வகையே விரை - 7

விரைகழல் சேர்ப்பாய் விடையமர் தேவா!
நரையன்றி நானேதும் நாடேன் - தரையில்
விரைந்தருள் வேறு விழையேன் எனக்கு,
பரையின் பதியேகண் பார் -8

பார்த்தேன் பருப்பதரைப் பார்த்தென் பிறவியது
சீர்த்தேன் சிறந்தேன் சிவனருளால் - நீர்த்தனவே
மூர்த்தியால் மூண்டவென் முன்வினைகள்! வேதனவன்
வார்கழற்கென் வாய்கூறும் வாழ்த்து. -9

வாழ்த்தும் அவன்பெருமை வானுயரம் கொள்ளாது
தாழ்சடை ஈசன் தயாபரனாம் - ஊழ்வினையால்
கீழ்மையது சேர்ந்தாலும் கேளா தளிசெய்வான்
பாழ்நீங்கும் சேரும் பரு -10

அக்டோபர் 17, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே - 1

நேற்று சாரதா பதிப்பக வெளியீடான என்ற கல்கியின் சிறுகதை, குறுநாடகமென்று கலந்தாங்கட்டியாகத் தொகுக்கப்பட்டு, “பாங்கர் விநாயகர்என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். இந்த புத்தகத்தில் விடுதலை இயக்க காலத்தில் திருச்செங்கோடு காந்தியாஸ்ரமத்தில் கல்கி தங்கி, அவர்களுடைய மதுவிலக்கு பிரசாரப் பத்திரிக்கைக்காக எழுதியவைத் தொகுக்கப்பட்டுள்ளன.

இதற்காக எழுதப்பட்ட ஒரு நீண்ட முன்னுரையே மிகவும் சுவாரசியமானது.. இராஜாஜி போன்ற மாமனிதர்களை நாம் எவ்வளவு எளிதாக மறந்துபோனோம் என்பதை நினைவுறுத்திஉள்ளத்தையும்தான்நம்மை வெட்கப்பட வைக்கிறது.. பல அரிய விஷயங்களை எளிதாகச் சொல்லும் இக்கதைகளும் நாடகங்களும் எத்தனை உத்தமர்கள் வாழ்ந்த நாடு நம்நாடு என்பதையும் நமக்குச் சொல்லுகின்றன. கூடவே அயோக்கியர்களும், களவாணிகளும் நம்மவரிலேயே எத்தனைப்பேர் இருந்திருக்கின்றனர் என்பதையும் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது..

இதில் ஒரு மாதப்பத்திரிக்கையில் இராஜாஜியின் மேல் குற்றஞ்சாட்டி ஒரு செய்தி வந்ததாம்.. அதாவது.. “இராஜாஜி கதர் இயக்கத்துக்காகச் சேர்ந்த பணத்தைக் கொண்டுபோய்க் கொடைக்கானல் மலையில் சுகவாசம் செய்துவிட்டு வந்தார்”.. என்பதுதான் அந்த செய்திஅந்த செய்தி இராஜாஜியின் கவனதுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, அந்த பத்திரிக்கையின்மேல் வழக்குத் தொடரப்போவதாகச் சொன்னாராம்செய்தியைக் கொண்டுவந்தவர் திடுக்கிட்டு, “ மிக அழகாய் இருக்கிறதுஅந்த பத்திரிக்கையை எத்தனைப் பேர் படித்திருக்கப் போகிறார்கள்? படித்தாலுமே யார் நம்பப் போகிறார்கள்? அந்த பத்திரிக்கையின் மேல் கேஸ்போட்டால், தானாக மூடப்போகும் பத்திரிக்கைக்கு அநாவசியமாக விளம்பரமல்லவா கிடைத்துவிடும் என்றாராம்.

இது என்ன அக்கப்போராக இருக்கிறதே என்கிறீர்களா.. அதற்கு இராஜாஜி சொன்ன பதிலையும் படித்துவிடுங்கள்..

அப்படி அந்த பத்திரிக்கைக்குப் பிரபலம் வந்தால் வந்து விட்டு போகட்டும். என்னுடைய நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவோ, யாராவது அவதூறை நம்பப்போகிறார்கள் என்றோ நான் கேஸ் போடவில்லை..  பத்திரிக்கை நடத்துபவர்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் பொய் அவதூறு சொல்ல இடங்கொடுப்பது தேச நன்மைக்குப் பாதகமாகும். என்னுடைய வேலையை இது பாதிக்கப்போவதில்லை.. ஆனால் மற்றவர்களைப் பற்றி இம்மாதிரியெல்லாம் எழுதினால், பொது ஊழியம் செய்வதே முடியாத காரியமாகிவிடும். ஆகையால் வழக்குத் தொடர்ந்தே தீரவேண்டும்என்றார்..”

அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, அதில் இராஜிக்கே சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தது.. ஏனெனில் இராஜாஜி அதுவரை கொடைக்கானலுக்கேப் போனதில்லையாம்!

இப்போது ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்டன. ஒருவிதத்தில் மக்களுக்குச் செய்திகளும், பலதரப்பட்ட வர்களின் பார்வைகளும் தெரிய வருகிறது என்றாலும்.. எதையுமே சரிபார்த்து உறுதி செய்ய யாருக்குமே நேரமில்லை, தைரியமில்லை. ஆக மொத்தம் உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மெல்ல மெல்ல நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடக்கிறது..

ஒருபுறம் கட்சிகளை சார்ந்த ஊடகங்கள் (பத்திரிக்கை, தொலைக்காட்சி) மூளைச் சலவை செய்வதையே முழுநேரத் தொழிலாகவும், மக்களைத் தொடர்ச்சியாக பயமுறுத்துவதையே ஏற்றுக்கொண்ட கொள்கையாகவும் செயல் படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் பல்கிப்பெருகி, ஆபாசக் களஞ்சியங்களாகவே ஆகிவிட்டன. ட்விட்டர், வாட்ஸாப், ஃபேஸ்புக், யூட்யூப் இன்னும் இத்தியாதி இத்யாதி இணையதள செயலிகளெல்லாம் இணையே இல்லாத சமூக எதிர்மறை வினைக்களங்களாகவும், பெருகி வரும் விதம்விதமான குற்றங்களுக்குக் காரணிகளாகவும் மாறிவிட்டன.. இன்னும் புதுப்புது விதங்களில் நம்பிக்கையின்மை, சமய, இன, நிலைப்பாடுகளையொட்டி வெறுப்பை விதைத்து இழிவை வளர்க்கின்றன. அழிவைத்தான் அறுவடைச் செய்யப்போகிறோம்

#metoo இயக்கத்தினால் நன்மை விளைந்து காமக்கசடுகள் கழியுமென்று பார்த்தால், எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்றே தெரியாவண்ணம்என்னென்னவோ முளைக்கின்றன. வெட்ட வெட்ட முளைக்கும் அசுரத்தலைக்கள்போல்.. 

ஆள்பவர்களின் சிந்தனைகளைப் பற்றி நமக்குத் தெரியவில்லை.. தேர்தலில் உரக்கப் பேசுபவர்களும், பதவிக்கு வந்த பிறகு ஆழ்நிலைத் தியானமும் மௌனமும் பழகுகிறார்கள்.. ஆரவாரப் பேய்களாக மற்றவர்கள் கூவுகிறார்கள்..

எவர்களைக் குற்றஞ் சாட்டி ஆட்சியைப் பிடித்தார்களோ, அவர்களில் ஒருவரையும் நீதியால் தண்டிக்கமுடியவில்லை.. எல்லோருமே உழல் வலைப் பின்னலில் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கிறார்களோ என்னவோ? ஒருவர் முதுகள் இன்னொருவர் குத்தரிவாளை வைத்து, அணைத்துக்கொள்ளும் கயவர்களாக இருக்கிறார்கள்.. 

மதவியாபாரிகள், மதவிபச்சாரிகள், என்று அரசியல், சமயம், பொதுவாழ்க்கை எல்லாவற்றிலும் விரவி, அடிமுதல் நுனிவரை கயமை, கபடு, ஆசாரமின்மை, நெறி பிறழ்தல், நீதியின்மை, அரசியல் பிழைத்தல் என்று கிருமியாக வியாபித்து, விஷமாக சமூகங்கள் மெல்ல ஆனால் உறுதியாக மரித்துக்கொண்டிருக்கின்றன.

ஸம்பவாமி யுகே யுகேஎன்று சொன்ன கண்ணனோ, எங்கிருந்தோ புன்னகைத்துக் கொண்டிருக்கிறான்.

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...