ஏப்ரல் 05, 2012

குறளில் குரல் - 2

April 3rd  2012,

Twin Tenets for life (Part 1):



எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

                               (குறள் 355: மெய்யுணர்தல் அதிகாரம்)

Transliteration:
eppoRuL yARyARvAyk kETpinum apporuL
meypporuL kaNba dhaRivu

epporuL – whatever be the subject (not to be construed as objects)
eththanmaiththaayinum – regardless how it appeals or appears to our senses
apporuL – that subject’s
meipOrul – the true value ( the true origin of the concept of subject and the purposes there in)
kAnpadh(u) – seeking, researching, realizing
aRivu – is the true awareness, wisdom, jnana (ஞானம்)

The model code for true living is captured in essence, by the two verses in ThirukkuraL. Though they are seemingly same, they are from different chapters belonging to different main headings of Dharma (அறம்) and Artha (பொருள்). The first verse talks about “seeking” at a personal level, mostly for personal elevation and understanding the true nature of things around us. This kuraL comes under, the sub-heading of “thuravu” (renouncing).

At surface level, it is same as “All that glitters is not gold”. Regardless of how things appear to one’s eyes, only truthful seeking will reveal the true being. Here the word “poruL” (பொருள்), does not merely refer to the objects we visualize; It does refer to the concepts, theological and otherwise that we are fed with from the time, we are able to assimilate knowledge. The main purpose is to elevate the “self” as in “உள் ஒளி அடைதல்” (self realization). It does not debase the passed on knowledge but encourages, “Self will” to examine everything given to us – the essence of seeking. Anything that comes close to that is seeking the guidance of knowledgeable ones, and is talked about in “PeriyOrai thunai kOdal” (பெரியோரைத் துணைக் கோடல்).

As the popular tamil adage goes, “kaNNAL kANbadhum poi, kAdhAl kEtpadhu poI, thIra visArippadE mei”
The second tenet is from Arivudamai chapter under (porut pAL – Artha part). Can you guess what that kurAL is?

“Wisdom in any subject is in seeking the true nature
Not in what our eyes capture or mind’s conjecture”

தமிழிலே:
எப்பொருள் - எந்த ஒரு பொருளைச் சொல்லும் கருத்தாகிலும்
எத்தன்மைத்தாயினும் - அது எந்த உருவகத்தில் நம்மறிவுக்குப் புலப்பட்டாலும்
அப்பொருள் - அப்பொருள் சொல்லும் கருத்தின்
மெய்ப்பொருள் - உண்மைத்தன்மையும் (நிலைத்தன்மை)
காண்பது - ஆராய்வது, அறிந்துகொள்வது, உணர்ந்து கொள்வது
அறிவு - உண்மையான அறிவு, ஞானம்

நல்வாழ்க்கைக்கு இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளைத் திருக்குறளிலிருந்து எல்லோரும் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்றே போல் தோன்றினாலும், அவை இரண்டு வெவ்வேறு “பால்”களில் உள்ள அதிகாரங்களில் சொல்லப்படுகின்றன. இக்குறள் அறத்துப்பாலின் மெய்யுணர்தல் அதிகாரத்தில் வருகின்ற ஒன்று. பின்பு பார்க்கப்போகும் குறள் பொருட்பாலின்கண் வருவது. இக்குறள் ஒரு தனிமனிதனைச் சார்ந்து  அவனுக்குத்  தேவையானத் “தேடலை” சொல்கிறது, தனிமனிதனின் ஆத்ம உயர்வுக்காக!

மேம்போக்காகப் படித்தால், இது “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழியைச் சொல்லுகிறவொன்று. ஒரு பொருள் (கருத்துக்கூட) ஒளிரும் பொருளாய் தோற்றமளித்தாளும், அப்பொருளின் உண்மைத்தன்மையை அறிவதே அறநெறியும் துறவோர்க்கு அழகுமாம். பொருளைக் கண்ணால் காண்பதுவும், கருத்தாய் கேட்பதுவும் என்று கொள்ளலே இக்குறளுக்குப் பொருந்தும்.

இக்குறள் வலியுறுத்துவதும், “உள்ளொளி” பெருக்கி உயர்வை அடைதலைத்தான். இக்கருத்து நமக்கு வாழையடி வாழையாக வழங்கப்பட்டுவந்திருக்கிற அறக்கோட்பாடுகளுக்கும், மற்ற கருத்துக்களையும் எடுத்துக் கொள்வதைத் தடுக்கவில்லை. எல்லாவற்றையுமே ஆராயும் மனவுறுதியைத்தான் வலியுறுத்துகிறது.  அப்போது ஒரு குருவைச் சார்ந்து பெறும் அறிவுக்குக்கூட இது பொருந்துமா என்கிற கேள்வி எழும்.  பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரத்தில் அதுவும் கூறப்படுகிறது.

இக்குறளின் அடித்தளக் கருத்து இதுதான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!”

இன்றெனது குறள்:

கண்மூடி யாயிராமே கண்மூடி சிந்தித்தால்
கண்ணுறுவாய் உண்மைப் பொருள்

kaNmUDi yAyirAmE kaNmUDi sindhiththAl
kaNNuRuvAi uNmaip poruL

குறளின் குரல் - 1

April 5th 2012,
Morgan Hill

As of the past Monday (2nd April), I wanted to do something useful in Facebook. So, a though crossed my mind to write my perspectives on ThirukkuraL. Though there are many commentaries on ThirukkuraL, I felt that there is a vacuum in giving interpretations based on experiences, observations and comparisons of similar sounding verses.  So, here I am trying to give my perspectives. The idea is to invite feedback on my attempt with the readers comments and compile them as the collective beauty in the eyes of beholders. Though, predominantly I will be writing in English for wider consumption, I will try and edit, this blog as I have time later to give Tamil word by word meaning. 

குறளைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக, ஒரு சிறப்புக் குறள், இதுவும் குறளின் சிறப்பினப் பற்றிதான்.

(பொதுக் குறள்)

மருளை அழித்து குணத்தை அளிக்கும்
குறளை தினமும்நீ 
ஓது


டிசம்பர் 15,2015-ல் மேற்கண்ட குறளை மாற்றி எழுதியது.


மருளை அழிக்கும் குறளின் அருமை
தெரிந்து தினமும்நீ ஓது

Written on 2nd April:
So, friends online, here is  the voice of Thirukkural that I am planning to share with you all,  one a day at least. Last night, suddenly I woke up around 2pm and pondering over my friends and friendships and realized, how influential they have been in shaping my persona. Many a moments of wonder, bonding, fun, joy, bliss, sharing, caring and some times disillusions, disappointments and even deception. Barter friendships have come my way and have found a way to be out too. 

Here is a dedication to friends allover. 

kuraLin kural: 
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.
                         - kuraL 786 ( நட்பதிகாரம்)

muga naga - the smile in the face
natpadhu - friendship (that shows a smile in the face)
natpandru - is not always to be construed to be true friendship
nenjaththu - In the heart
aga naga - gladness felt (in the heart)
natpadhu - friendship (that feels glad even when you think of the friend)
natpu - Such friendship is the true and lasting friendship.

Not the sheer smile on the face makes a friend sincere
But, that which makes the heart smile and rejoice is truly dear

இன்றெனது குறள்


நினைதொறும் நெஞ்சினில் விஞ்சும் மகிழ்வின்
அனையது நேரிய நட்பு


பிப்ரவரி 06, 2012

அக்கரைப் பச்சை இக்கரைக்கும் உண்டு, அக்கரையிலிருந்து



அக்கரை என்றுமே பச்சை அதனாலே
அக்கரை நின்றால் அழகாய் தெரியுமே
இக்கரை, நீயுணர என்றும் இனித்திடும்
சக்கரை  போலாகும் வாழ்வு

ஜனவரி 19, 2012

வெண்பா பைத்தியம்…



சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாற் போல, என்னுடைய நண்பர் இராசா  என்னை வெண்பா இலக்கணம் பற்றி ஏதோ கேட்கப் போக, பரணில் தூங்கிக்கொண்டிருந்த வெண்பா பிசாசு என்னை மீண்டும் பிடிக்க, உடனே ஒரு வெண்பா!


இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா… வெண்பாக்களுக்கே உரியவை, “இதனால் இது” என்கிற காரண விளக்கங்களும் அல்லது “எதனால் இது” என்கிற கேள்வி-பதில்களும் அல்லது “இவ்வாறிருக்க அவ்வாறு ஏன்” என்கிற காரணம் ஒற்றிய கேள்விகளும்!


அந்த அடிப்படையை ஒட்டித்தான், எண்ணம் எப்படி வாழ்வைப் புதுக்குகிறது என்று எழுதியதும். திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் எழுதிய யாப்பிலணக்கண நூலைப் ஒருமுறை படித்து சரிபார்த்துக்கொண்டேன்..


பண்ணிலாமல் பாடலுண்டோ கண்ணிலாமல் காட்சியுண்டோ

உண்ணிலார்க்கு ஊட்டமுண்டோ எண்ணிடாது ஏற்றமுண்டோ

வண்ணமுதாம் வாழ்வினிலே எண்ணிறந்த இன்பமுண்டே

எண்ணியென்றும் வாழுவதே வாழ்வு

ஜனவரி 18, 2012

தந்திரப் பேச்சு -- கவிமாமணி இளையவன்



[நான் இரசித்த சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். மின்பெருவெளி  வலையிலே, எத்தனைச் செல்வங்கள் கொட்டிக் கிடக்கின்றன? எத்தனை சிந்தனையாளர்கள் எவ்வளவு இலகுவாக எழுதுகிறார்கள். வெண்பா எழுதுவது பற்றி நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில், வலையில் "வெண்பா வடிக்கலாம் வா" என்கிற ஒரு குழுமம் உருவாக்கப்பட்டு, வெகு நாட்களாக நான் தொடர்பில்லில்லாத என்னுடைய "தென்றல்" துவக்ககால நண்பர் திரு. வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்து, வலையில் தேடும்போது வாஞ்சியைக் காணவில்லை; ஆனால் வாஞ்சையுடன் என்னை எண்பத்தைந்தாம் வருடம் டொராண்டோ நகரில் ஒருநாளை பகிர்ந்துகொண்ட மதிப்பிற்குறிய மின்னணுவியல் துறை பேராசிரியர் பசுபதி தானுமுவந்து பகிர்ந்துகொண்ட கவிதை இதோ...! கவிமாமணி இளையவன்.. அவர் தமிழே இனிமை, இளமை – யாருக்கும் இளைக்காத புலமை! நீங்களும் ரசிக்கலாமே!]



தந்திரப் பேச்சு -- கவிமாமணி இளையவன்


போஜன் என்பவன் ஒர்அரசன்
புலவர் போற்றும் பேரரசன்
பூஜை எல்லாம் சிவன்மேலே
பொழுதும் நினைவு அவர்மேலே

ஏழை ஒருவன் "சிவபெருமான்"
எங்கும் இல்லை" எனச்சொன்னான்
வாழை மரபாய்க் கொடைத்தன்மை
வாய்ந்தோன் போஜன் இதைக்கேட்டான்

"சிவனை இல்லை என்கின்றாய்,
சொல்வது எப்படி" எனக்கேட்டான்
அவனோர் ஏழை ஆனாலும்
அறிவின் திறனால் விடைசொன்னான்

சங்கர நாரா யணன்எனவே
சங்குத் திருமா லிடம்பாதி
அங்கம் தந்தார் மீதியினை
அன்பாய்ச் சக்திக் களித்திட்டார்

இரண்டு பாதி போனதனால்
இனிமேல் சிவனார் "ஏ'தென்றான்
அருமை விளக்கம் எனப்போற்றி
அரசன் கேள்வி சிலகேட்டான்.

சந்திர கலையது எங்கென்றான்
சந்தி ரனிடமே போச்சென்றான்
விந்தை! கங்கை எங்கு' என
"வந்தே சங்கம் இங்" கென்றான்

சிவனின் வீரம் எங்கென்றான்
சேர்ந்தது உங்களை எனச்சொன்னான்
தவழும் திருவோ டெங்கென்றான்
தனதே அதுவென விடைசொன்னான்

ஏழையின் கையில் திருவோடு;
ஏந்தல் பார்த்தான் கனிவோடு
வாழும் தந்திரப் பேச்சுக்கு
வரிசை அளித்தான் மகிழ்வோடு !

ஜனவரி 16, 2012

இயற்கை


[இன்று ஒரு கவிதை.. "தானே" புயலுக்குப் பிறகு நடக்கும் அரசியலைப் பற்றி ஒரு செய்தியைப் படித்தேன். அதன் பாதிப்பில் எழுத தொடங்கிய கவிதை அனுமன் வால் போல் நீண்டு கொண்டே போக, வழக்கம் போல் பொசுக்கென்று முடித்துவிட்டேன்.. இன்னும் எழுதிப் பழக வேண்டும்! ]

cy_295_3.jpg


ஆறறிவு மனிதர்களின் ஆரவாரப் போலித்தனம்
ஓரறிவு மில்லாத இயற்கையிலே இருக்கவில்லை

மனிதசக்தி அறியவொண்ணா மாசக்தி ஐந்தனிலும்
கனிவுமுண்டு கடுஞ்சீற்றக் கூற்றாகிக் காய்வதுண்டு!

ஆனாலும் அங்கேயோர் மதமென்ற பேதமுண்டோ?
வீணாக இனமென்றும் மொழியென்றும் கூச்சலுண்டா?

நிலமதிர்வும் கடற்கோளும் பேய்க்காற்றுப் பெரும்புயலும்
நீர்மலிந்து பெருவெள்ளக் காடாகும் நிலையதுவும்,
தீயெழுந்து எரிமலையாய் கொதிகுழம்பாய்ச் பொழிவதுவும்,
வேர்பிடுங்கி எறிந்திவரை அடியோடு அழித்திடுவோம்,
மாயட்டும் மாற்றுசாதி - வாழட்டும் நம்சாதி
என்கின்ற வன்மத்தின் வெளியீடாய் இருப்பதில்லை!

கன்மத்தின் குறியீடாய் கதைசொல்வர் ஒருமதத்தார்!
இயற்கைதரும் ஜிக்ஹாதி எனமுழங்கும் ஒருமதத்தார்!
மயக்கமின்றி தெளிவீரே தீர்ப்பிடுநாள் வெகுவிரைவில்
மீட்பரிங்கு வரவேண்டி பாவிகளே மாறிடுவீர்!
தயக்கமின்றி தெரிவிப்பார் தேவதூதன் கட்சியினர்

கேட்பவர்கள் கேட்கநெய்யும் கேப்பையிலே வடியுதென்பார்.
முயற்சியின்றி முயங்கிமூலை முடங்கிமக்கள் இருப்பரென்றால்
தடியெடுக்கும் தண்டல்காரர் படியளக்கும் பகவனாவார்
படிந்தால்பார் இல்லையெனில் பரலோகம் உனக்கிருக்கு!

அரசின்வழி அறவின்வழி என்றகாலம் கடந்தகாலம்!
அரவின்வழி, அடக்குமுறை, எதிர்த்தாலே அழிக்கும்வழி!
உறவின்வழி பிழைக்கின்ற ஊரேய்க்கும் பிழைகள்பல
சிறப்பாக சீரழிக்கும் சிங்காரம் இக்காலம்.

ஆயிரமாய் ஜாதியிங்கு இருந்தாலும் அன்னியர்கள்
புகுவதென்ன நீதியென்ற பாரதியும், நம்மவரே
தாயனைய தேசமிதை துகிலுரியும் துச்சர்களாய்
மிகுநீச மோசர்களாய் போவரென அறிந்திருந்தால்
வெதும்பித்தான் மாய்ந்திருப்பான் வெற்றாக போனதென்று!
இதுஎன்னால் பொறுப்பதில்லை வெந்தீயில் தீயட்டும்
எழுதியவென் வலக்கையும் உலக்கையென ஆகட்டும்
பழுதுபட்ட சமுதாயம் பாழாகப் போகட்டும்
என்றல்லோ மனம்வெறுத்து சலித்திருப்பான்? சபித்திருப்பான்?
அன்றேதன் தமிழாலே "அறம்"பாடி அழித்திருப்பான்.

மதத்தாலும் மொழியாலும் நிலத்தாலும் நீராலும்
உதவாத பலவாத பிடிவாத மடமைகளால்
விடமாக வளர்ந்திருக்கும் பிளவாக்கும் மனப்போக்கும்
முடமாகி உயிர்ப்பின்றி ஜடமான நிலையதுவும்
மாறிநம்மில் புதுநோக்கும் புத்துணர்வும் பிறந்திடவே
சீறியதாய் புதுவாழ்வு மலர்ந்திடவே இயற்கையெனும்
தாயவளின் வீரியமே பிரளயமதாய் பொங்கட்டும்!
நேயமுடன் மீண்டுமனிதம் புனிதமுடன் மலரட்டும்!

டிசம்பர் 04, 2011

சென்னை கச்சேரி மேளா 2011-2012 - 001


டிசம்பர் 3, 2011

டிசம்பர் முதல் தேதியே சென்னை ஸீசன் ஆரம்பித்துவிட்டது. கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், நாரதகான சபாவில் கச்சேரி ஸீசனை ஆரம்பித்து வைத்துவிட்டாலும், நானும் இந்தவருடம், நவம்பர் இறுதி வாரத்துக்கே சென்னை வந்துவிட்டாலும், சில காரணங்களால், இன்றுதான் என்னால் முதல் கச்சேரிக்கு செல்ல முடிந்தது.

என்னுடைய கச்சேரிக் கணக்கு அபிஷேக் ரகுராம், மற்றும் டி.எம்.க்ருஷ்ணா இவர்களுடன் ஆரம்பித்தது. நானும், அண்ணாவும் கச்சேரி அரங்கத்துள் நுழையும் போது, அபிஷேக் தன்யாஸி பாடிக்கொண்டிருந்தார். போன வருடமே எழுதியிருந்தபடி, அபரிமிதமான குரல் வசதி, நினைத்ததை, நினைத்த அதே நொடியில் குரலில் கொண்டுவரக்கூடிய அசாத்திய உழைப்பு, அதற்கு ஈடான ஜெட்வேக கற்பனைச் சரவெடிகள், அவற்றை கையாளும் லாவகம் என்று அபிஷேக் மிரட்டுகிறார்.

ஒரு பெரிய ரோலர்கோஸ்டரில் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சென்றுவந்தார் போல சில சமயம் நமக்கு அயற்சி ஏற்பட்டு விடுகிறது. ராகத்தில் ஓரளவாவது இருந்த விஸ்ராந்தியும் சௌக்யமும், தானத்திலும், பல்லவியிலும் இல்லை. திஸ்ரத்ரிபுடையில், கண்டநடையில், “இனி ஒருகணம் உனை மறவேன் யதுகுல திலகா நான்" என்கிற பல்லவி வரிகளை உருட்டியும் மிரட்டியும், ஓடியும் சாடியும், உருண்டும் பிரண்டும் அபிஷேக் பாடியது பிரமிக்கும் படியாக இருந்தும், ரசிக்கும் படியாக இல்லை. தன்யாஸியிலிருந்து, ஸ்ரீரஞ்சனி பின்பு பூர்விகல்யாணி என்று தானத்திலும், பல்லவியிலும், பிறகு ஸ்வர கல்பனையிலும் பாடியது ரசிக்கும் படியான விஷயம்தான். ஆனால் அந்த வேகம், கற்பனைகளில் அழகுக்கும், அதை ரசிப்பதற்கும், குந்தகமாக அமைந்ததுதான் வருத்தத்துக்குரியது.

அபிஷேக், அவரது குரலை பொன்போல் காக்க வேண்டும், இளமையின் வேகம், அளவுக்கு மிஞ்சிய குரலுபயோகம் இரண்டு குரல்நாணை பாதிக்காமல் பாதுகாக்கவேண்டியது அவரது கடமை.

பின்னால் வந்த குதம்பை சித்தர் பாடலும் ஏறக்குறைய கழைக்கூத்தாடி விவகாரம்தான். விவகாரத்தில் விதரணையை விட்டுவிடக்கூடாது. இறுதியாகப் பாடிய "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ"வும் சலிப்புத்தட்டும் அளவுக்கு மேல் கீழ் சஞ்சாரங்களுடன். ஆத்ம விசாரமாக, பரிதவிப்புடன் பாடிய சாஹித்யத்தை அகடவிகடமாக செய்தது ஏனோ ரசிக்கவில்லை.

கச்சேரியென்பது, கைதட்டல்கள் மட்டுமில்லை என்பதை இன்றைய முன்னணி நட்சத்திரக் கலைஞர்கள் உணரவேண்டும்.

வயலின் வாசித்த மைசூர் ஸ்ரீகாந்தும், மிருதங்க நெய்வேலி நாராயணனும்,கஞ்சீரா கோபாலக்ருஷ்ணனும் அனுசரணையாக ஈடுகொடுத்தது கச்சேரியின் நிச்சயமான ஆறுதலான அம்சம்.

அடுத்துவந்த டி.எம். க்ருஷ்ணாவின் கச்சேரி. லயச்சக்ரவர்த்தி காரைக்குடி மணி மிருதங்கம், ராமானுஜாசார்யுலு வயலின் துணையுடன் ஆரம்பித்த கச்சேரி, மிகவும் மோசமான மைக் அமைப்பின் காரணமாக, சரியாக சமன் செய்யப்படாது, மேடையில் இருந்தவர்களுக்கும் அவஸ்தை.. அரங்கத்திலிருந்த ரசிகர்களுக்கும் அவஸ்தை.

க்ருஷ்ணாவின் பளிச் குரல் இன்று கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. மைக் கட்டாயம் 50 வது விழுக்காடாவது இதற்குக் காரணம். ஆரம்பத்தில். நீலகண்ட சிவனின், என்றைக்கு சிவ க்ருபை வருமோ என்கிற முகாரி ராகக் கீர்த்தனயுடன், செளகமாக, செளக்யமாக ஆரம்பித்த கச்சேரி, ஸாரங்காவில் அருணாசல நாதம் கீர்த்தனையுடன் மெதுவாக க்ருஷ்ணாவில் குரலில் சூடுபிடிக்க வைத்தது. ராகம் பாடியதில் வந்த சங்கதிகளே அடிக்கடி வந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் கீர்த்தனை பாடியது கச்சிதம்.

அடுத்து ராகம்பாடாமல், ரீதிகௌளையில்,”த்வைதமு ஸுகமா அத்வைதமு ஸுகமா' என்கிற த்யாகராஜ க்ருதி. இதில் "ககன”-வில் பாடப்பட்ட நிரவல் செம்மங்குடி ரகம். முழுக்க முழுக்க வார்த்தைச் சிதைவுகளுடன். ஆளுமை பிரமிப்பு, ஆனால் படைப்பு க்ருதியின் வார்த்தை அழகுகளுக்குச் செய்யப்பட்ட அநீதி. "ககன, பவன, புவன, தபன, ஆதி" (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், புவி) என்ற வார்த்தைகளை இதற்குமேலும் சிதைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். சும்மா, "ககனககக பவனகக ககககக" என்று ஒரு 3 நிமிஷம் சொல்லிப்பாருங்கள்.

த்யாகராஜர் மன்னிப்பாராக. அவர் மன்னித்தால் என்ன? ரசிகர்கள் கைதட்டினார்களே என்று கேட்கலாம்.. பெரும்பாலான ரசிகர்கூட்டத்துக்கு வேண்டியதெல்லாம், அவர்கள் கேட்பதெல்லாம் எடுப்பான எடுப்பு, வேகமான தொடுப்பு, அதிரடியான முடிப்பு! என்கிற மேஜிக்தான். அர்த்தபாவம் எல்லாம் அவர்களுக்கு அநாவசியம். தெலுங்குதானே, நன்றாகக் கெடுக்கட்டும் என்கிற மனோபாவமோ என்னவோ..! க்ருஷ்ணா நல்ல கலைஞர்தான்! ஆனால் கைத்தட்டல்கள் ஆதிக்கத்திலும், புகழ் தரும் போதையிலும் இருக்கிறார். தன்னம்பிக்கைக்கும், "தான்" என்பதற்கும் வித்தியாசம் அவருக்குத் தெரியாதா என்ன? காலம் பெரிய சமனி. இவரையும் மீட்டு கொண்டுவரும் என்று நம்புவோம்.

வார்த்தைகளின் பொருளுக்கேற்ப அங்க அசைவுகளோ, கை வீச்சுகளோ இருந்தால் குற்றமில்லை. பாடகர்களின் சங்கதிகளுக்கு அவர்கள் கை வீச்சு, தலையாட்டல்கள் ஓரளவுக்கு உதவுவது வாஸ்தவம்தான். ஆனால், என்றைக்கு சிவக்ருபை க்ருதியில் வரும் இந்த வரிகளின் போது, வயலின் அல்லது மிருதங்க வித்வான்கள் பக்கம் கையைக்காட்டுவது, அனர்த்தமாகி விடுகிறது. “ கண்டாலும் பேசார்! இந்த கைத்தவமான பொல்லாச் சண்டாள உலகத்தைத் தள்ளி ஸத்கதி செல்ல" குறிப்பாக, "சண்டாள" என்னும் போது, வயலின் பக்கமோ, மிருதங்கம் பக்கமோ, அல்லது ரசிகர்கள் பக்கமோ கையைக் காட்டினால்...?

இது க்ருஷ்ணாவுக்கு மட்டுமல்ல, கைவித்தையிலே கைதேர்ந்த அனைத்து வித்வான்கள், விதூஷகிகளுக்கும்தான்.

நேரமில்லாத காரணத்தினால் வெளியே வரவேண்டிய கட்டாயம். முழு கச்சேரியையும் கேட்க முடியவில்லை. ஒருவேளை, நான் கிளம்பியபிறகு, கச்சேரி மிகவும் நன்றாக இருந்ததோ என்னவோ..! மீண்டும் கேட்காமலா போய்விடுவேன்

நவம்பர் 04, 2011

ஏழாம் அறிவும் போதிவர்மனும்



சமீபத்தில் மிகவும் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் ஏழாம் அறிவு படத்தைப் பார்த்தேன்.

எங்கே இதைப்பற்றி உண்மையான விமரிசனத்தை எழுதினால், நமக்கு ஆறாம் அறிவே இல்லையோ என்று நினைப்பார்கள் என்று பலரும் ஒதுங்கியிருக்கலாம்.. அல்லது தமிழனே இல்லையென்று முத்திரை குத்தி, ஐந்தறிவு மிருகங்களுக்கும் கீழாக எண்ணி விடுவார்களோ என்று பயந்திருக்கலாம்..

தமிழனின் பெருமையைத் தூக்கி நிறுத்தியிருக்கிற முயற்சி என்ற சுயதம்பட்டத்தை காதுகள் கிழியுமளவிற்கு உரத்து அடித்திருப்பதினால், என்னுடைய பார்வையில் இப்படத்தைப் பற்றிய சில செய்திகளைப் பதிவு செய்கிறேன்.

படம்,

பணத்தை எண்ணாமல் செலவு செய்திருக்கும் தயாரிப்பாளரின் தாராளத்தைக் காட்டுகிறது. (அது சரி! யார் வீட்டுப்பணம்! தூக்கி நிறுத்த தாத்தாவின் சேனலும், உறவுக்கார ஸன் சேனல்களும் இருக்க எமக்கு என்ன கவலை)

சூரியாவின் மெருகான அழகை, ஈடுபாட்டை, உழைப்பைக் காட்டுகிறது.. போதிதர்மன் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்று எண்ணவைக்கிறது..

ஸ்ருதிஹாஸனின் புதுமலரைப் போன்ற அழகைக் கவிதையாகக் காட்டுகிறது.

தாமோ" என்று சீன, ஜப்பானிய மற்றும் கீழை நாட்டு புத்தமதத்தினர் கொண்டாடுகிற, நம்மில் பலருக்கும் தெரியாத பாரதப் பூர்விகரான போதிதர்மரான, போதிவர்மன் என்பவரை நமக்கு பெருமையுடன் அறிமுகம் செய்து வைக்கிறது.

இதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்கிற இயக்குநரின் ஆர்வத்தைக் காட்டுகிறது. (முருகதாஸ் நல்ல இயக்குநர் என்பது, அவரெடுத்த பார்த்திபன் கனவே காட்டிக்கொடுத்து. ஆனால் இப்படமோ, அவரது ஆர்வக் கோளாறைத்தான் காட்டுகிறது. ).

அழகான ஒளி ஓவியம் (நல்ல சொல்லுக்கு நன்றி தங்கர் பச்சான்), பாராட்டப்படவேண்டிய கலை இயக்கம் என்று பல நல்லவிஷயங்கள் இருந்தும், நிறைவான, முழுமையான, நம்பத்தகுந்த ஆராய்ச்சியில்லாதடாக்குமெண்ட்ரியா, ஹாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்றாம் ரக குங்ஃபூ படமா, அல்லது தமிழரின் பெருமைக்காக எடுக்கப்பட்ட பிரச்சார படமா என்று தெளிவில்லாமல், செல்லும் படமாகத்தான் தெரிகிறது.

போதிதர்மன், காஞ்சியை ஆண்ட பல்லவ அரசனின் மூன்றாம் இளவரசன் என்கிற முதல் தம்பட்டம் - இதைப்பற்றி சற்று பார்ப்போம். எந்த அரசன்? அவனுடைய மற்ற பிள்ளைகள் என்ன ஆனார்கள்? எந்த நூற்றாண்டு என்ற கேள்விகள் வெகுவாக தவிர்க்கப்பட்டு, கேள்விகளைக் கேட்காமல் நாங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். . வலியுறுத்திக்கேட்டால், இல்லையே, நாங்கள் வலை, இணையத்தளங்களை ஆதாரமாகக் காட்டியிருக்கிறோமே என்று சொல்லலாம். இணையதளங்கள் எல்லாம் வலுவான ஆராய்ச்சித்தலங்கள் அல்ல. 

பல்லவர்களைப்பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவுறாத ஒன்று. நமக்குத் தெரிந்த பல்லவர்கள், ஆறாம் நூற்றாண்டினைச் சேர்ந்த சிம்ஹவிஷ்ணு, அவனுடை புதல்வனும், சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறிய மஹேந்திர வர்மன், மற்றும் அவனுடை புதல்வனான மாமல்லபுரத்து கதாநாயகனான நரசிம்மவர்மன் என்று நீண்டு, சோழர்கள் வந்தவுடன் சுருங்கி, பின்பு மறைந்தேவிட்டது.

சிம்ஹவிஷ்ணுவின் தந்தை மூன்றாம் சிம்ஹவர்மன் (முதல் இரண்டு சிம்ஹவர்மர்கள் முந்தைய தலைமுறைகளில் இருந்திருக்க வேண்டும்), மற்றும் அவனுடைய தந்தை இரண்டாம் விஷ்ணு கோபன் (முந்தைய முதல் விஷ்ணுகோபன் இருந்திருக்கவேண்டும்) என்று சரித்திரப்பெயர்கள் கேள்விப்படுகிறோமே (தகவல்: விக்கிபீடியா), அவர்களைப் பற்றி விவரணங்கள் தெரியவில்லை. சிம்மவிஷ்ணுவின் காலமே, உத்தேசமாக கி.பி. 555-590 என்று சொல்லுகிறார்கள்.. மேலும் தமிழர்களின் இருண்டகாலமாகச் சித்தரிக்கப்படும் (சைவமும், வைணவமு ஒடுங்கியிருந்து, ஜைனமும் பௌத்தமும் முன்னிருந்த காலமாக இருந்தததினால் முன்வைக்கப் பட்ட கருந்து) களப்பிரர்களிடமிருந்து தமிழகத்தை மீட்டவன் அவனிசிம்ஹன் என்று புகழப்பட்ட சிம்மவிஷ்ணு, மற்றும் பாண்டியன் கடுங்கோன். அதற்கு முந்தைய பல்லவர்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களும் ஒரு நூறு ஆண்டு கால அளவில்  குறுகி 4ம், 5ம் நூற்றாண்டுகளில் வந்துவிடுகிறார்கள்.. போதிவர்மனோ, 6 ம் நூற்றாண்டிலேதான் சீனாவுக்கு சென்றதாக, ( 550 களில்), அவர்களின் குறிப்பும் தெரிவிக்கிறது.

சரித்திரத்தகவல்களே சிதறுண்டு, ஆராய்ச்சியாளர்களின் பார்வைகளில் வேறுபட்டு இருக்கையில் எந்த பல்லவனைப் பற்றி பேசுகிறார்கள் படத்தில்? சீன சரித்திரத் தகவல்களும், பின்வந்த பல நூற்றாண்டுகளில், சென் பௌத்த மத ஆசிரியகளால் மேல்பூச்சு பூசப்பட்டு கோர்க்கப்பட்ட கதைகளாகவே கருதப்படுகின்றன்.. அவர்களும் ஒத்துக்கொள்ளுகிற ஒரு சரித்திரத் தகவல், போதிதர்மன் இந்தியாவிலிருந்து, தென்னகத்திலிருந்து, வந்த ஒரு மனிதன் என்பதுதான். காஞ்சிபுரம், பல்லவ இளவல் என்பதெல்லாம் பிற்சேர்க்கையாகக் கூட இருக்கலாம்!) எனக்கும் கூட அவன் தமிழனாக இருக்கக்கூடாதா என்கிற ஏக்கமுண்டு.

தவிர பல்லவர்களே, மத்திய இந்தியாவிலிருந்து வந்த, பாலி மொழியும் சமஸ்க்ருதமும் பேசிய ஒரு குடி என்கிற ஆராய்ச்சியும் இருந்திருக்கிறது. அவர்கள் முழுக்கத் தமிழர்களாக இருந்திருப்பது சந்தேகமே. பிற்கால தெலுங்கு சோழர்களைப் போல அவர்களும் தமிழை வளர்த்திருக்கலாம், ஆனால் அக்மார்க் தமிழர்கள் என்று சொல்வது உறுதிச் செய்யப்படாத, இதுவரைக்கும் முடியாத, ஆராய்விலே முடிவுறாத வீண் தற்பெருமை மட்டுமே!

ஏதோ ஒட்டுமொத்த இந்தியாவின் மருத்துவம், தற்காப்புக்கலைகள் இங்கிருந்து சென்ற போதிதர்மனோடு, சீனதேசத்துக்குச் சென்றுவிட்ட மாதிரி பேசுவது அபத்தம்.. ! "மீதிவர்மர்"களே இல்லையா? குறைந்த பட்சம் "பாதி வர்மர்கள்'" கூடவா இல்லை? அவர்களுக்கும் எதேனும் வைரஸ் தாக்கி, அழிந்துவிட்டார்களா? அவன் சென்ற பிறகு வந்த நூற்றாண்டுகளில் இருக்கும் இலக்கியங்கள் காக்கப் பட்டிருக்கின்றன, இந்த கலை மட்டும் முற்றாக அழிந்து ஒழிந்து போனதா? குறைந்த அளவு, பின்னாள் சோழர்கள், நாயக்கர்கள் காலம் வரையாவது இருந்திருக்க வேண்டுமே! இன்றும் கூட வர்மக்கலை இருப்பதாக கேள்விப்படுகிறோமே.! ஏன் பரவலாக வெளியில் வரவில்லை?

நோக்கு வர்மம் என்பது இப்போது நாம் வர்மக்கலையினைத் தேடி எடுத்து கொண்டாடும் விஷயம். இதை மிகவும் அற்புதமாக, தற்காப்புக்கலையின் ஒரு உயர்ந்த விஷயமாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்வந்த "ஷாவோலினின் 36ம் வகுப்பறை" என்ற படத்தில் காட்டியிருப்பார்கள். அதன் உயர்வை ஒரு மூன்றாம் தர வில்லனின் கையில் கொடுத்து, ஏதோ ஏக்கப் பார்வையிலேயே (பாதி தூக்கப் பார்வை போல இருக்கிறது) எல்லோரையும் அழிக்கிற கருவியாக சித்தரித்திருப்பது கொடுமை!

பிறகு அறிவியல், மரபணு ஆராய்ச்சி, அதை செய்யும் ஸ்ருதிஹாஸனின் அதீத தமிழ் ஆர்வம் (தத்தி தத்தி தமிழில் பேசும் தங்க பாப்பா!), மீண்டும் போதிதர்மனை கொண்டுவர உருவாக்கப்பட்ட போதிதர்மன் பரம்பரையிலே வந்தவரான சர்க்கஸ் சாகஸக்காரர் அர்விந்த், இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல், சீனாவின் இந்திய ஆக்ரமிப்பு முயற்சி, அதற்காக உருவாக்கப்பட்ட டாங் ஈ (டான்கியா?) , அவருக்குத் துணை போகும், சீனாவுக்கு விலைபோன இந்திய விஞ்ஞானி ரங்கநாதன், கொஞ்சம் காதல், நிறைய சண்டை, ஹாரிஸ் ஜெயராஜின் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட பாத்திரக்கடை களேபர ஓசை (இசையென்பது சரியில்லை!) என்று ஒரே அமர் களம்தான் படம் ('க்' விடுபட்டிருப்பதை கவனிக்க!). ஒரு பாட்டு, சுமார் ரகம். ஆனால் கேட்ட மெட்டுபோல தோற்றம். ஆனாலும்.. ரொம்பத்தான் பில்ட் அப்பு!

கடைசீயில், சூர்யாவை வைத்து பிரசாரப் பேச்சு, அதை மானிடரில் பார்த்துக்கொண்டிருக்கும் முருகதாஸ் என்று படம் முடிகிறது. நெட்டி முறித்துக்கொண்டு எழுந்தபோது, அப்பாடா என்று இருந்தது..! முருகதாஸின் முகத்தில், இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறோமே, ஓடுமா, ஒடாதா என்கிற கவலைதான் தெரிகிறது...!

தமிழனின் பெருமை அறைகுறை ஆராய்ச்சியிலும், ஆரவாரமான தற்பெருமையிலும் இல்லை. இது காசுக்காக, காசுள்ளவர்கள், தமிழர்களை மேலும் சுரண்டுவதற்காக எடுத்த கமர்ஷியல் படம்.. இதை எடுத்த, நடித்த தமிழர்களுக்கும் இதனால் பெருமை வரப்போவதில்லை. பார்க்கும் தமிழர்களுக்கும் பெருமையும், எழுச்சியும் வரப்போவதில்லை.


அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...